Monday, May 15, 2023

சூழ்நிலைக் கைதிகள் அல்லர்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 16 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 16:22-34. யோவா 16:5-11.

சூழ்நிலைக் கைதிகள் அல்லர்

பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். சிறையின் குளிரும் தனிமையும் இருளும் அவர்களுடைய உள்ளத்திலிருந்த நற்செய்தி ஆர்வத்தைக் கட்டுக்குள் வைக்கவில்லை. அவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். மற்ற கைதிகள் இவர்களுடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக, சிறையிலும் நற்செய்தி அறிவிப்புப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு அனைத்துச் சிறைக் கதவுகளும் திறக்கின்றன. அனைவருடைய விலங்குகளும் சங்கிலிகளும் கழன்று விழுகின்றன. 

இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு தப்பித்துச் சென்றிருக்கலாம். 'இது இறைவன் அருளிய விடுதலை' என மகிழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்ய மறுக்கிறார்கள். அனைத்துக் கைதிகளும் பேராண்மை போற்றுகின்றனர். தவறு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் தவறு செய்யாமல் நன்னயம் காக்கிறார்கள். 

இதைக் காண்கிற சிறைக்காவலர், முதலில் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என நினைத்தவர், பின்னர், பவுல் மற்றும் சீலாவின் காலடிகளில் விழுந்து வணங்குகின்றார். 'பெரியோரே, மீட்படைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டு, அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். அவரும் அவரோடிருந்த அனைவரும் திருமுழுக்கு பெறுகிறார்கள்.

பவுல் சிறைக்காவலரை மனமாற்றம் அடையச் செய்கிறார். தன்னுடைய நற்செய்தி அறிவிப்பால் மட்டுமல்ல, மாறாக, நாணயமான வாழ்வால் மற்றவர்கள்மேல் நேர்முகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.

இதையே வாழ்வின் வழியாக நற்செய்தி அறிவித்தல் என்கிறோம்.

'நான் சூழ்நிலைக் கைதி' என்னும் சொல்லாடலைப் பயன்படுத்திப் பல நேரங்களில் நம் தவறுகளை நியாயப்படுத்துகிறோம். ஆனால், தவறு செய்வதற்கான சூழ்நிலை இருந்தாலும் நம்மால் தவறு செய்யாமல் இருக்க முடியும் என்ற நிலையை உருவாக்கிக்கொள்ளும்போது சூழ்நிலையை நாம் மேற்கொள்ள முடியும்.


No comments:

Post a Comment