Wednesday, May 17, 2023

தடையே பாதையாக

இன்றைய இறைமொழி

வியாழன், 18 மே 2023

உயிர்ப்புக்காலம் ஆறாம் வாரம்

திப 18:1-8. யோவா 16:16-20.

தடையே பாதையாக

கடந்த வாரத்தில் ரியன் ஹாலிடே என்பவர் எழுதிய 'தி ஆப்ஸ்டக்ல் இஸ் தெ வே' ('தடையே பாதையாக') என்னும் நூலை வாசித்தேன். ஸ்டாய்க்ஸ் என்னும் ஞானக் கோட்பாட்டாளர்களின் கருத்துகளின் பின்புலத்தில் இந்நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். நமக்குத் தடையாக இருக்கும் ஒன்றையே நம் வாழ்க்கைப் பாதையாக மாற்றிக்கொள்ள முடியும் என்று முன்மொழியும் ஆசிரியர் அதற்காக மூன்று வழிமுறைகளைத் தருகிறார்: (அ) பார்வை (perception), (ஆ) செயல் (action), (இ) விருப்பம் (will).

(அ) பார்வை. ஒரு பிரச்சினையை அதன் சூழலோடு இணைத்துப் பார்ப்பது, மற்றும் அதன் கோணத்தை மாற்றிப் பார்க்கும்போது நமக்குப் புதிய பார்வை கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, பெருந்தொற்றுக் காலத்தில் ஒருவர் மற்றவரைச் சந்திக்க இயலாத நிலை எழுந்தபோது, நேரடியாகச் சந்திக்க இயலவில்லை என்றால் காணொலி வழியாகச் சந்திக்கலாம் என்னும் புதிய பார்வை கிடைத்தது.

(ஆ) செயல். சிந்தித்துக்கொண்டே இருப்பதை விடுத்து செயல்பாட்டில் ஈடுபடுவது. தொடர்ந்து செயல்படுவது. நம் சிந்தனை செயல்பாடாக மாறத் தொடங்கும்போது பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.

(இ) விருப்பம். விருப்பம்தான் நம் சிந்தனையை நெறிப்படுத்துகிறது. விருப்பம் உறுதியாக இருக்கும்போது மூளை நம் கட்டுக்குள் வந்துவிடும். 

இன்றைய முதல் வாசகத்தில் இருவர் தங்களுடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை வாழ்க்கைப் பாதைகளாக மாற்றிக்கொள்கிறார்கள். ஒன்று, அக்கிலா மற்றும் பிரிஸ்கில்லா தம்பதியர். இவர்கள் இத்தாலி நாட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள். கொரிந்து நகரத்தில் வந்து குடியேறும் இவர்கள் தங்களுக்கென புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள்.

சீலாவும் திமொத்தேயுவும் மாசிதோனியாவிலிருந்து திரும்பி வரும்போது பழிப்புரையை எதிர்கொள்கிறார்கள். அந்தப் பழிப்புரை என்னும் தடையை பாதையாக மாற்றிக்கொள்கிறார்கள். புதிய மறைத்தளத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம் சீடர்களோடு உரையாடுகிற இயேசு, 'நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். அப்போது உலகம் மகிழும். நீங்கள் துயருறுவீர்கள். ஆனால், உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்' என்கிறார் இயேசு. தம் சீடர்கள் அழுகை மற்றும் துயரத்திலிருந்து விடுபடுவார்கள் என்னும் போலியான வாக்குறுதியை இயேசு தரவில்லை. மாறாக, அழுகை மற்றும் துயரத்தை அவர்கள் எதிர்கொண்டாலும் அவற்றை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்வர் என்றே கூறுகின்றார்.

நம் வாழ்வின் தடைகள் அனைத்தையும் பாதையாக மாற்றிக்கொள்ள முடியும் நம்மால்!


No comments:

Post a Comment