Wednesday, May 10, 2023

அன்பில் நிலைத்திருங்கள்

இன்றைய இறைமொழி

வியாழன், 11 மே 2023

உயிர்ப்புக்காலம் ஐந்தாம் வாரம்

திப 15:7-21. யோவா 15:9-11.

அன்பில் நிலைத்திருங்கள்

யோவான் நற்செய்தியில் இயேசு மொழியும் 'நானே' வாக்கியங்களிலும் ஏழாவதும் இறுதியான வாக்கியத்தை நேற்றைய நற்செய்தி வாசகத்தில் கேட்டோம்: 'நானே உண்மையான திராட்சைக் கொடி.' தம்மைத் திராட்சைக் கொடியாக முன்மொழிகின்ற இயேசு, தம்மோடு இணைந்திருக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

'என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நான் உங்கள்மேல் அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள்' என்கிறார் இயேசு. இயேசு தம் சீடர்கள்மேல் கொண்டிருந்த அன்பு காலடிகளைக் கழுவுதலில் தொடர்ந்து, சிலுவையில் உயிர்விடுதலில் நிறைவுபெறுகிறது. இப்படிப்பட்ட தற்கையளிப்பு நிறைந்த அன்பில் தம் சீடர்களும் நிலைத்திருக்க அழைக்கிறார். யோவான் நற்செய்தியில், 'நிலைத்திருந்தல்' என்னும் சொல் 'நீடித்திருத்தல், தங்குதல், வாழ்வு பெறுதல்' என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயேசுவின் அன்பில் எப்படி நிலைத்திருப்பது? இக்கேள்விக்கான விடையை இயேசுவே தருகிறார்: 'நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.' கட்டளைகள் என்பது பத்துக் கட்டளைகளை அல்ல, மாறாக, இயேசு மொழியும் அனைத்துச் சொற்களையும் குறிக்கின்றன. இயேசுவின் சொற்களைக் கேட்பதோடல்லாமல் ஒருவர் அவற்றை வாழ்வாக்கும்போது அவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க முடியும்.

இயேசுவின் அன்பில் நாம் நிலைத்திருக்கிறோம் என்பதை எப்படி அறிந்துகொள்வது? 'நிறைவான மகிழ்ச்சியே' அதன் அளவுகோல். 

இன்றைய முதல் வாசகத்தில், எருசலேம் சங்கத்தில் திருத்தூதர்கள் பேதுரு மற்றும் யாக்கோபு மொழியும் சொற்களைக் கேட்கிறோம். புறவினத்தார்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்னும் கேள்வி எழுகின்ற வேளையில், 'கடவுள் அவர்களுக்கும் நமக்கும் எந்த வேறுபாடும் காட்டவில்லை' என்றும், 'சுமக்க இயலாத சுமையை அவர்கள்மேல் சுமத்திக் கடவுளைச் சோதிக்கவும் கூடாது' என்றும் கூறுகிறார் பேதுரு. புறவினத்தார்களையும் யூதர்களையும் பிரித்துப் பார்ப்பதை விடுத்து, இவர்கள் இருவரையும் இணைக்கிற இறைநம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ள அழைக்கிறார் பேதுரு. தொடர்கின்ற யாக்கோபும், 'பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தலாகாது!' என்கிறார். 

இவ்வாறாக, திருத்தூதர்கள் பரந்த பார்வை கொண்டிருப்பதுடன் மற்றவர்களுக்குத் தொல்லையும் சுமையும் தரக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கிறார்கள்.

இயேசுவின் அன்பில் அவர்கள் ஏற்கெனவே இணைந்திருந்ததால், தாங்கள் அன்பில் பெற்ற மகிழ்ச்சியின் பின்புலத்திலேயே அனைத்தையும் காண்கிறார்கள்.

இயேசுவின் அன்பில் நாம் இணைந்திருப்பதன் அளவுகோல் மகிழ்ச்சி. மகிழ்ச்சியால் நிறைவுபெறும் ஒருவர் அதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்.


No comments:

Post a Comment