Tuesday, April 25, 2023

இறைவிருப்பம் நிறைவேற்றுதல்

இன்றைய இறைமொழி

புதன், 26 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 8:1-8. யோவா 6:35-40.

இறைவிருப்பம் நிறைவேற்றுதல்

இன்றைய முதல் வாசகத்தில், திருத்தொண்டர் ஸ்தேவானின் இறப்புக்குப் பின்னர் உடனடியாக எருசலேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் நடந்த நிகழ்வுகளைப் பட்டியலிடுகிறார் லூக்கா: (அ) எருசலேம் திருஅவை பெரும் இன்னலுக்கு உள்ளாகிறது. மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். (ஆ) சிதறி ஓடிய மக்கள் நற்செய்தியை அறிவிக்கிறார்கள். திருத்தொண்டர் பிலிப்பு பல அறிகுறிகள் நிகழ்த்துகிறார். (இ) இறைவனின் வல்ல செயல்களைக் காண்கின்ற மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

துன்பம் நம்பிக்கையாளர்களின் மனத்தைச் சோர்வடையச் செய்யவில்லை. 

சிதறிய ஓடிய மக்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரங்களை, வேர்களை இழந்தாலும், புதிய இடங்களை நற்செய்தி அறிவிப்புக்கான வாய்ப்புகளாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆண்டவரின் அரும்செயல்கள் மேலோங்கி நிற்கின்றன.

இவ்வாறாக, ஆண்டவரின் நற்செய்தியை யாரும் தடுக்க இயலவில்லை என்பதைப் பதிவு செய்கிறார் லூக்கா.

நற்செய்தி வாசகத்தில், தம் வாழ்வின் நோக்கம் தம்மை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே எனத் தம் சமகாலத்தவருக்குத் தெளிவுபடக் கூறுகிறார் இயேசு.

இயேசு தாம் இருந்த இடத்தில் இறைத்திருவுளம் நிறைவேற்றுகிறார்.

சிதறடிக்கப்பட்டாலும், ஒரே இடத்தில் இருந்தாலும் நம் வாழ்வின் இலக்கு இறைவிருப்பம் நிறைவேற்றுவதாக மட்டுமே இருந்தால் நலம்.


No comments:

Post a Comment