Sunday, April 23, 2023

தேடலின் நோக்கத்தைச் சரிசெய்தல்

இன்றைய இறைமொழி

திங்கள், 24 ஏப்ரல் 2023

உயிர்ப்புக் காலம் மூன்றாம் வாரம்

திப 6:8-15. யோவா 6:22-29.

தேடலின் நோக்கத்தைச் சரிசெய்தல்

ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்கு இயேசு பலுகச் செய்த நிகழ்வுக்குப் பின்னர் நடந்த நிகழ்வு ஒன்றை நம் கண்முன் கொண்டுவருகிறது நற்செய்தி வாசகம். இயேசுவைத் தேடி மக்கள் கூட்டம் அவர் பின்னால் செல்கிறது. அவர்களுடைய தேடலின் நோக்கம் தவறானது என்பதை இயேசு அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார். அவர்களுக்கு ஆன்மிக நிறைவுதரும் மெசியாவைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்களுடைய வயிறுகளுக்கு உணவு தரும் போதகரையே அவர்கள் தேடினார்கள். கடவுளால் அனுப்பப்பட்டவரை ஏற்றுக்கொள்தலே சரியான செயல் என எடுத்துரைக்கிறார் இயேசு.

இப்பகுதிக்கு விளக்கவுரை எழுதுகிற புனித அகுஸ்தினார், 'என்னே மானுடத்தின் இரங்கத்தக்க நிலை! ஆன்மாவுக்கு ஊட்டம் தருகிறவரிடம், எங்கள் வயிற்றுக்கு உணவளியும் என வெறும் தட்டை ஏந்தி நிற்கிறது!' என்கிறார்.

(அ) மாற்றத்தின் அறிகுறி

நிகழ்வின் தொடக்கத்தில், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' எனக் கேட்கிற மக்கள் கூட்டம், இறுதியில், இயேசுவின் சொற்களைக் கேட்ட பின்னர், 'எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறது. இதுவே மாற்றத்தின் அறிகுறியாக இருக்கிறது.

(ஆ) நிலைவாழ்வுதரும் அழியாத உணவு

இரு வகை உணவு பற்றிப் பேசுகிறார் இயேசு. உடலுக்குப் பயன்படும் ஆனால் அழிந்துபோகும் உணவு. ஆன்மாவுக்குப் பயன்படும் நிலையான உணவு. யோவான் நற்செய்தியில் நிலைத்திருத்தல் என்பது இயேசுவோடு இணைந்திருத்தலைக் குறிக்கிறது. இயேசுவை விட்டுத் தொலைவில் செல்லும் அனைத்தும் அழியக்கூடியதாக இருக்கிறது.

(இ) கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள்

மீட்பு என்பது யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் கடவுளின் கொடையும் மனிதர்களின் செயலுமாக இருக்கிறது. இயேசுவின்மேல் நம்பிக்கை கொள்தல் என்னும் செயலின் வழியாகவே ஒருவர் மீட்பு பெறுகிறார். 

முதல் வாசகத்தில், தலைமைச் சங்கம் மற்றும் யூதர்கள் திருத்தொண்டர் ஸ்தேவானின் சொற்களுக்கு அளிக்கும் பதிலிறுப்பு பற்றி வாசிக்கிறோம். ஸ்தேவானின் முகம் வானதூதரின் முகம் போல ஒளிர்கிறது என்கிறார்கள் அவர்கள்.

கடவுளைத் தெரிந்துகொள்வதும் அவருடன் நிலைத்திருப்பதும் கடினமான செயல். அர்ப்பணமும் விடாமுயற்சியும் அதற்கு அவசியம்.


No comments:

Post a Comment