Tuesday, April 18, 2023

இனிய ஈரேழு ஆண்டுகள்

என் குருத்துவ அருள்பொழிவு நாள்

இனிய ஈரேழு ஆண்டுகள்

இன்று என் குருத்துவ அருள்பொழிவு நாள்.

ஏப்ரல் 19, 2009ஆம் ஆண்டு மதுரை புனித பிரிட்டோ மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், என் நண்பர்கள் அருள்பணியாளர்கள் டைட்டஸ், வரன், மதன் பாபு, லாரன்ஸ், இஞ்ஞாசி அற்புதராஜ், திருத்துவராஜ், பிரின்ஸ் ஆகியோரோடு இணைந்து, மதுரை உயர்மறைமாவட்ட மேனாள் பேராயர் மேதகு பீட்டர் ஃபெர்ணான்டோ அவர்களால் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டேன்.

3 ஆண்டுகள் உதவிப் பங்குப் பணியாளராக (எல்லீஸ் நகர், ஞானஒளிவுபுரம், தேனி),

5 ஆண்டுகள் உயர்கல்வி (உரோமை, புனே)

1 ஆண்டு பேராயர் அவர்களின் செயலராக (மதுரை)

3 ஆண்டுகள் இறையியல் பேராசிரியராக (திருச்சி)

2 ஆண்டுகள் இந்திய ஆயர் பேரவைப் பணியில் (பெங்களூர்)

என 14 ஆண்டு மைல் கற்கள் கடந்து நிற்கின்றேன்.

விவிலியத்தில் 14 (இருமுறை 7, நிறைவுக்கு மேல் நிறைவு) என்ற எண் ஆன்மிக நிறைவைக் குறிக்கிறது. இயேசுவின் தலைமுறை அட்டவணையை மத்தேயு 3 முறை 14 எனப் பிரிக்கிறார். எண் 14 தாவீது அரசரைக் குறிக்கிறது. நீதிமொழிகள் நூலில், 'ஆண்டவர்மேல் கொள்ளும் அச்சம்' என்னும் சொல்லாடல் 14 முறை பயன்படுத்தப்படுகிறது. 14 என்ற எண் எபிரேயத்தில் (யோத்-தாலத்) மீட்பு அல்லது வெற்றி அல்லது விடுதலையைக் குறிப்பதாக 22 முறை விவிலியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. யாக்கோபு 14 ஆண்டுகள் தன் தாய்மாமன் லாபான் இல்லத்தில் பணியாற்றுகிறார். தன் பணியிலும் அன்பிலும் நிறைவுகாண்கிறார். 14ஆம் ஆண்டின் இறுதியில் ஆடவரோடு போராடி, வென்று, 'இஸ்ரயேல்' என்னும் புதிய பெயர் பெறுகிறார். யாக்கோபுக்கு அது ஒரு புதிய தொடக்கம். அன்றுமுதல் அவர் தன் வாழ்வின் அமைதியைக் கண்டுகொள்கிறார். முதல் மாதத்தின் 14ஆம் நாள் ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார்.

இந்த ஈரேழு ஆண்டுகள் நிறைவில், 'விதைக்கிறவன்' (காண். லூக் 8:5-8) என்னும் விவிலியச் சொல்லோவியத்துடன் என்னையே பொருத்திப் பார்க்கிறேன்.

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி வழியோரம் விழுந்த விதைபோல இருந்திருக்கிறது. அந்தப் பணி மற்றவர்களின் கால்களில் மிதிபட்டது. அல்லது வானத்துப் பறவை வந்து அதை விழுங்கிவிட்டது. என் பணியை விடுத்து, என் முதன்மைகளை விடுத்து நான் பணியாற்றிய நேரங்களில் அவ்வாறு நடந்தது. 

சில இடங்களில் சில நேரங்களில் பாறைமீது விழுந்த விதைபோல இருந்தது. வேகமாக முளைத்தது. ஆனால், ஈரமில்லாததால் கருகிப் போனது. நான் எழுதிய நூல்கள், ஆற்றிய உரைகள், எடுத்த வகுப்புகள், ஏற்படுத்திய நட்புறவு ஆகியவை இந்த வகையில் இருப்பதாக உணர்கிறேன். வேகமாக உருவெடுத்த இவை யாவும் வேகமாகவே மறைந்து போயின. இன்னும் கொஞ்சம் ஈரம் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது!

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி முட்செடிகள் நடுவே விழுந்தது. கூடவே வளர்ந்த முட்செடிகள் பணியை நெருக்கிவிட்டன. முட்செடிகளின் நிழல் விதையை வளரவிடவில்லை. முட்செடிகள் விதையின் ஊட்டத்தில் பங்குபோட்டுக்கொண்டன.

சில இடங்களில் சில நேரங்களில் என் பணி நல்ல நிலத்தில் விழுந்தது. முப்பது, அறுபது, நூறு மடங்கு பலன் கொடுத்தன. முப்பது மடங்கு மற்றவர்களுக்கும், அறுபது மடங்கு எனக்கு நெருக்கமானவர்களுக்கும், நூறு மடங்கு எனக்கும் பலன் கொடுத்தன. உட்கார்ந்து யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு பணிக்குப் பின்னும் தன்னலம்தானே இருக்கிறது. 

பலன் விதையை, அல்லது நிலத்தைப் பொருத்து அல்ல, விதைக்கிறவனைப் பொருத்தே இருக்கிறது என்பதையும் உணர்கிறேன். விதைக்கிறவன் சற்றே நிதானமாக, பொறுமையாக, தேர்ந்து தெளிந்து விதைத்தால் அனைத்து விதைகளும் நல்ல நிலத்தில் விழும். ஈசாக்கு போல நூறு மடங்கு பலனை அவன் பெறுவான் (காண். தொநூ 26:12).

'விதைத்தல்', 'விதைக்கிறவன்' பற்றிய விவிலியப் பதிவுகளை இன்று எனக்கு நானே நினைவூட்டிக்கொள்கிறேன்:

'காலையில் விதையைத் தெளி. மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.' (சஉ 11:6)

'ஒருவர் தாம் விதைப்பதையே அறுவடை செய்வார்.' (கலா 6:7)

'விதை இறைவார்த்தை.' (லூக் 8:11)

'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்.' (2 கொரி 9:6)

'விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச் செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார்.' (2 கொரி 9:10)

நிற்க.

'அவரோடு' (மாற் 3:14) என்னும் விருதுவாக்குடன் தொடங்கிய என் அருள்பணி வாழ்வுப் பணி, 'அவரில்' நிறைவுகாணும் வரை, விதையின், நிலத்தின், பயனின் உரிமையாளரோடு இணைந்து விதைக்கிறவனாகத் தொடர எனக்காக இறைவேண்டல் செய்யுங்கள்.

நன்றி.


4 comments:

  1. Anonymous4/19/2023

    Prayers and wishes dear father on this auspicious day of your Sacerdotal ordination anniversary. May God bless you with His choicest blessings. Nelson @ dgl

    ReplyDelete
  2. Anonymous4/19/2023

    Dear Father Yesu, Wishes and prayers

    ReplyDelete
  3. Anonymous4/19/2023

    prayerful wishes to you dear father

    ReplyDelete
  4. நன்றி கடவுளுக்கு ! வாழ்த்துக்கள் தந்தைக்கு ! தமிழக திருஅவையின் தீபமாய் ஒளிர்கிறீர்.. உமது ஒளியால் திரு அவை செழிக்க வாழ்த்துகிறோம்.. செபிக்கிறோம்.. சகோ. சேகர், புனித மரியன்னை பேராலய பங்கு.

    ReplyDelete