Tuesday, October 8, 2019

இதைத்தானே சொன்னேன்!

இன்றைய (9 அக்டோபர் 2019) முதல் வாசகம் (யோனா 4:1-11)

இதைத்தானே சொன்னேன்!

இன்றைய முதல் வாசகப் பகுதியோடு நாம் கடந்த நான்கு நாள்களாக வாசித்த யோனா நூல் நிறைவுபெறுகிறது. யோனா என்றால் புறா என்பது பொருள். நான்கு நாள்கள் நடந்தால்தான் கடக்க முடியும் என்று இருக்கின்ற நினிவே நகரின் குறுக்காக ஒரே நாளில் நடந்து (அதாவது, ஓடி) மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார் யோனா. மக்களும் உடனே மனம் மாறுகின்றனர். கடவுள் தன் மனத்தை மாற்றிக்கொண்டு அவர்களைத் தண்டியாது விடுகின்றார்.

இந்தப் பின்புலத்தில் யோனா மனச்சோர்வு அடைகின்றார்.

அதற்கு முன்பே அவர் வறண்டு போகின்றார். மறைபரப்புப் பணியில் வறட்சி ஒரு பெரிய நோய். அருள்பணியாளர் வாழ்வில் இந்த வறட்சி வரும். சிலருக்கு மறையுரையில் வறட்சி, சிலருக்கு மக்களைச் சந்திப்பதில் வறட்சி, சிலருக்குப் புதிய முன்னெடுப்புக்களை யோசிப்பதில் வறட்சி என்று நிறைய வறட்சிகளை அருள்பணியாளர்கள் சந்திப்பதுண்டு.

யோனாவின் வறட்சி - ஆற்றலின்மை - ஒரு பக்கம். மறுபக்கம் மனச்சோர்வு. 'இவனுக எல்லாம் சாவாங்க என்று பார்த்தால் எல்லாரும் உயிரோடு இருக்கிறார்களே' என்று சோர்ந்துபோகின்றார். யோனாவின் காலத்தில் அசீரியா இஸ்ரயேலுக்கு பெரிய எதிரி. அந்த அசீரியாவின் தலைநகர்தான் நினிவே. நமக்குத் தண்ணீர் தராத அண்டை மாநிலம் வறண்டு போக வேண்டும் என்று நாம் குட்டிச் செபம் செய்வதுபோல அசீரியாவும் அதன் தலைநகர் நினிவேயும் அழிய வேண்டும் என்பது ஒவ்வொரு இஸ்ரயேலரின் ஆசையாகவும் இருந்தது.

யோனா கடவுளிடம் முறையிடுகின்றார்: 'ஆண்டவரே, நான் ஊரை விட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்? இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓட முயன்றேன். நீர் கனிவு மிக்கவர், இரக்கமுள்ளவர், மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள். அழிக்க நினைப்பீர். பின் மனத்தை மாற்றிக்கொள்வீர் ... என் உயிரை எடுத்துக்கொள்ளும்!'

யோனாவின் புலம்பல் ஏற்புடையதுதான். ஆனால், 'என் உயிரை எடுத்துக்கொள்ளும். வாழ்வதைவிட சாவதே எனக்குச் சிறந்தது' என்று அவர் சொல்வது ஏற்புடையதா?

இதை உளவியலில் 'இறப்பின் தூண்டுதல்' (death instinct) என்கிறார்கள். இது நம்மில் இருக்கும் பாலுணர்வு போன்றது. திடீர் திடீரென்று நம்மில் மேலெழும்பி வரும். அந்த நேரத்தில் அதைச் சரியாக நாம் கையாளவில்லை எனில், நம்மில் தற்கொலை எண்ணத்தையும் செயலையும் தூண்டிவிடும். இது விரக்தியின் காரணமாக வருகிறது. 'இதற்கு மேல் ஒன்றும் இல்லை. எல்லாம் இப்படித்தான்!' என்ற நிலையில் தோன்றுகிறது.

மனச்சோர்வு ஒரு பக்கம். வெயிலின் தாக்கம் மறுபக்கம். பந்தல் அமைத்துப் படுத்திருக்கிறார் யோனா. பந்தலுக்கு மேல் ஆமணக்குச் செடி வளர்ந்து நிழல் தருகிறது. ஆனால் மாலைக்குள் அது உலர்ந்து போகிறது. அதைக் காண்கின்ற யோனா, மறுபடியும், 'வாழ்வதைவிட எனக்குச் சாவதே நல்லது' என்று சொல்வதோடு, தான் இறக்க வேண்டும் என்று செபமும் செய்கின்றார்.

'இந்தக் கோபம் நியாயமானதா?' என்று கேட்கின்ற கடவுள், 'நீ நட்டு வளர்க்காத ஒரு செடிக்கே கவலைப்படுகிறாயே? நான் என்னுடைய மக்களுக்கு இரக்கம் காட்டக்கூடாதா?' என்கிறார்.

இந்தப் பகுதி நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை:

அ. உறுதித்தன்மை விட வேண்டும்

அல்லது உறுதியற்றநிலையை ஏற்கப் பழக வேண்டும். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற நிலையில் வாழ்க்கை எப்போதும் பெர்ஃபெக்ட்டாக இருப்பதில்லை. இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்று நாம் எதிலும் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்படிச் செய்தால் அப்படியும் நடக்கலாம் வேறு மாதிரியும் நடக்கலாம் என்று ஏற்கப் பழக வேண்டும். யோனா வாழ்க்கையை கணிதம் போல எண்ணினார். கணிதத்தில் வியப்பு இல்லை. வாழ்வில் நிறைய வியப்புக்கள் உண்டு. வாழ்வின் ஆச்சர்யங்களுக்கு நாம் மனம் திறந்தால் விரக்தி வருவதில்லை.

ஆ. மனச்சோர்விற்கு ஆமணக்கு செடி உண்டு

நம்முடைய மனச்சோர்வு மற்றும் விரக்தி நேரத்தில் கண்டிப்பாக ஆமணக்குச் செடி ஒன்று அங்கே வேகமாக முளைக்கும். அது நபராக இருக்கலாம், நிகழ்வாக இருக்கலாம், இடமாக இருக்கலாம். சிறிது காலமே அது இருந்தால்கூட நம் மனச்சோர்வை அது அகற்றும். ஆனால், அது அகன்றாலும் நாம் சோர்வடையக் கூடாது.

இ. எல்லாரும் இரக்கத்திற்குரியவர்கள்

நினிவே நகர மக்கள் வேற்றினத்தார் என்பதற்காக யோனாவும் அவருடைய இனத்தாரும் அவர்கள்மேல் கோபம் கொள்கின்றனர். கடவுள் அக்கோபத்தைத் துடைக்கின்றார். வேற்றினத்தாரும் தனக்குரியவர்கள் என்று ஏற்கின்ற கடவுள் அவர்களுக்குத் தம் இரக்கத்தையும் பரிவையும் காட்டுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:1-4) இயேசு தன்னுடைய சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுக்கின்றார். இயேசுவின் செபத்தில் வாழ்வின் தூண்டுதல் (life instinct) (இரக்கம், மன்னிப்பு, உழைப்பு, விடுதலை) மட்டுமே இருக்கின்றது. நம் வாழ்விலும் இத்தூண்டுதல் மட்டுமே வெல்வதாக!

1 comment:

  1. உள்ளத்தை உருக்கிவிடும் உணர்வு மற்றும் உணர்ச்சிப்பூர்வமான வலைப்பூ. நாம் போடும் மனக்கணக்குகள் நாம் நினைத்த விடையைத் தராவிட்டால் கொலையும்,தற்கொலையுமே தீர்ப்பு அல்ல என்று புரியவைக்கிறார் இறைவன் யோனாவுக்கு.” நீ நட்டு வளர்க்காத செடிக்கே கவலைப்படுகிறாயே! நான் என் மக்கள் மேல் இரக்கம் காட்டக்கூடாதா?” கடவுளையே கையறுநிலைக்குத் தள்ளுகிறார் யோனா.நம்மை நம் நிறைகுறைகளோடு வாழப்பழகிக்கொண்டால் நமக்கு நம் தோல்விகளால் ஏற்படும் மனச்சோர்வை ஒரு ஆமணக்குச் செடி கொண்டு அகற்றவல்லவர் நம் இறைவன் எனும் நம்பிக்கை நம்மில் எழவேண்டும்.இறைவன் படைப்பில் அத்தனை பேருமே அவரின் அன்புக்குரியவர்கள் என்பதை நாம் உணரவேண்டும். தோல்வி மனப்பாண்மை,மனச்சோர்வு....இவை புற்றுநோயை விடக்கொடியவை. அத்தகைய உணர்வு வருகிறது என்று தெரிந்த வுடனே சிகிச்சையைத் தேட வேண்டிய விஷயங்கள்.இத்தகைய எதிர்மறை உணர்வுகளை நாம் வெல்ல நமக்குத் தேவை இரக்கம்,மன்னிப்பு,உழைப்பு,விடுதலை இவற்றை நமக்குப்பெற்றுத்தரும் செப வாழ்வே எனும் தந்தையின் குரலுக்கு செவி மடுப்போம்.நம் தோல்வி மற்றும் மனச்சோர்வு நேரங்களில் நமக்குத் தோள் கொடுக்கும் ஆமணக்குச் செடிகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.அழகானதொரு, அர்த்தமுள்ள வரிகளுக்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete