Sunday, October 6, 2019

அவருக்கு இரக்கம் காட்டியவரே

இன்றைய (7 அக்டோபர் 2019) நற்செய்தி (லூக் 10:25-37)

அவருக்கு இரக்கம் காட்டியவரே

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருச்சட்டத்தில் முதன்மையான கட்டளை எது என்று விளக்குகின்ற இயேசு, தொடர்ந்து, 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டைத் தருகின்றார்.

நான் ஒரு நல்ல சமாரியனா? என்று என்னையே கேட்டால், 'இக்கதையை வாசிக்கும் வரை நான் ஒரு நல்ல சமாரியனாக இருக்கிறேன். இவனைப் போல நானும் இருக்கிறேன், இருப்பேன்' என்றெல்லாம் சொல்வேன்.

ஆனால், கள்வர் கையில் அடிபட்டுக் கிடப்பவர்களை நான் சாலையில் காணும்போது, இக்கதையின் குரு, லேவியரை விட வேகமாக நான் கடந்துவிடுகிறேன். நான் அவசரமாகச் செல்ல வேண்டிய வேலை எதுவும் இல்லை என்றாலும் நான் கடந்து விடுகிறேன். சிக்னலில் என் கார் நிற்க, எனக்கு முந்தைய காரில் உள்ளவரிடம் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் பார்வையற்ற தம்பதியினர் என் காருக்கு அருகில் வருவதற்குள் சிக்னல் விழுந்துவிட வேண்டும் என்று குட்டிச் செபமும் கூட சொல்லியிருக்கின்றேன்.

நான் இப்படி இருப்பதற்கு பல காரணங்கள்:

சில நேரங்களில் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்.

சில நேரங்களில் என்னிடம் உதவி பெற்றவர்கள் என் கழுதையில் ஏறிக்கொண்டு என்னை நிர்கதியாக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

'எல்லாருக்கும் உதவி செய்ய முடியுமா?' என்று நானே கேட்டுக்கொள்கிறேன்.

'இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்' என்று அவர்களைக் கடிந்திருக்கிறேன்.

'இந்த அரசாங்கம் சரியில்லை' என்று விரலை இன்னொரு பக்கம் திருப்பியிருக்கிறேன்.

'என்னிடம் சில்லறை காசுகள் இல்லை' என்று சொல்லியிருக்கிறேன்.

ஆனாலும்,

சில நேரங்களில் தேவையில் இருப்பவர்களுக்கு உதவியிருக்கிறேன்.

ஆனால், இந்த அடுத்திருப்பவர் போல நான் உதவியதில்லை.

அவர் அப்படி என்ன செய்தார்?

'எண்ணெயும் மதுவும் வார்த்தார்' - நானும் அதைச் செய்திருக்கிறேன். ஆனால், அவர் இன்னும் கொஞ்சம் கடந்து சென்றார். தன் வாகனத்தில் ஏற்றி, சாவடிக்குக் கொண்டு சென்று, சாவடிக்காரனிடம் இருநாள் சம்பளத்தையும் கொடுத்து, 'இன்னும் தேவைப்பட்டால் திரும்பி வரும்போது செலுத்துகிறேன்' என்று சொல்லிச் செல்கின்றார்.

கண்டிப்பாக அவர் திரும்பிச் சென்று சந்தித்திருப்பார். சாவடிக்காரனின் இழப்பிற்கு ஈடு செய்திருப்பார்.

'நான் இலவசமாகச் செய்தேன். நீயும் செய்' என்று சாவடிக்காரனிடம் இவர் இறைஞ்சவும் இல்லை. அவனுக்கு குற்றவுணர்வைத் தூண்டவும் இல்லை. முழுக்க முழுக்க அந்த மனிதனுக்காகப் பொறுப்பேற்கிறார்.

ஆக, இரக்கத்தையும் தாண்டி, அவருடைய பரிவும் அர்ப்பணமும் எனக்கு ஆச்சர்யத்தை உருவாக்குகிறது.

சில நேரங்களில் ஏற்கனவே குதிரையில் சென்றுகொண்டிருப்பவர்களுக்கு நான் உதவிக் கொண்டிருக்கும் மும்முரத்தில் சாலையில் கிடப்பவர்களைக் கண்டும் காணாமல் சென்றிருக்கிறேன்.

'நீயும் போய் அவ்வாறே செய்யும்' என்று இயேசு சொல்வது என்னை உந்தித் தள்ளுகிறது.

ஆனால், எனக்கு அடுத்த வேலை காத்திருப்பில் இருக்கிறது. என் வேலையைச் செய்வதிலும் நான் நல்ல சமாரியனாய் இருக்க முடியும். எனக்கு அருகில் இருக்கும் அருள்தந்தைக்கு உதவி செய்வது, பாடம் சரியாக படிக்க முடியாத மாணவன்மேல் பரிவு காட்டுவது, கால் அடிபட்டுக் கிடக்கும் காவலருக்கு உதவி செய்வது, நோயுற்று இருக்கும் அருள்தந்தையின் ஆடைகளைத் துவைத்துத் தருவது - இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நானும் மாற முடியும் சமாரியனாய்.


2 comments:

  1. உறங்கிக் கொண்டிருப்பவர்களையும்,உறங்குவது போல் நடித்துக்கொண்டிருப்பவர்களையும் உலுக்கி விடும் ஒரு வலைப்பூ.தன்னையே ஒரு அழகான சுயபரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார் தந்தை.கண்டிப்பாக இந்நாட்களில் ஒருவருக்கு உதவி செய்யுமுன் பலமுறை நம்மை யோசிக்க வைக்கின்றன நாம் கடந்து வந்த கசப்பான அனுபவங்கள்.ஆனால் எதிர்மறை உணர்வுகளோடு மட்டும் நம் வாழ்க்கை உறைந்து விட முடியாதே! கற்ற அனுபவங்களை வாழ்க்கைப்பாடங்களாக வைத்து முன்னேறுவதுதானே மனித மாண்பு.தந்தையின் வார்த்தைகளில் நான் இரசித்த அந்த ‘நல்ல சமாரியன்’ குறித்த வரிகள்....” நான் இலவசமாகச் செய்தேன்; நீயும் செய்” என்று சாவடிக்காரனிடம் இவர் இறைஞ்சவும் இல்லை; அவருக்குக் குற்றவுணர்வைத் தூண்டவும் இல்லை; முழுக்க முழுக்க அந்த மனிதனுக்காகப் பொறுப்பேற்கிறார்” என்பவையே! நல்ல சமாரியனின் செயல்களையும் தாண்டி அவருடைய பரிவையும்,இரக்கத்தையுமே முன்வைக்கிறார் தந்தை.நம்மாலும் தினம் தினம் ஒரு ‘நல்ல சமாரியனாய்’ உருமாறி வாழ முடியும் என்பதற்கு அவரளவிய உதாரணங்களைத் தருகிறார் தந்தை.அவரால் இயல்வது நம் அனைவராலுமே இயலவேண்டும்...நாம் மனது வைத்தால். நம்மை ‘உதவி’ என்று தேடிவருபவர்களை மட்டுமல்ல; உதவியில் இருப்பவர்களைத் தேடிச்சென்று உதவிக்கரம் நீட்ட முடியும்;
    பிறருக்குக் கிள்ளிக்கொடுக்க நினைக்கையில் அள்ளிக்கொடுப்போம்...அதையும் புன்முறுவலோடு செய்வோம். நம்மையடுத்தவர்களின் கண்ணீர் துடைக்கும் ‘உதவிக்கரங்களாக’ மாறுவோம்.....இவை யாவையும் நம்மால் செய்ய இயலுமெனில் தந்தையின் வார்த்தைகளில் ‘ நாமும் நல்ல பரிசேயர்களே!’
    ஒரு வலைப்பூவிற்கு மட்டுமல்ல; பலரின் வாழ்க்கைப் பாடங்களுக்கும் சொந்தக்கார்ரான தந்தையை இறைவன் நல்ல உடல்,உள்ள நலம் தந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்!!!

    ReplyDelete