Tuesday, January 31, 2017

அவர் வியப்புற்றார்!

'அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்!' (காண். மாற்கு 6:1-6)

ஜனவரி 1 இப்போதுதான் தொடங்கியது போல இருந்தது. ஒரு மாதம் ஓடிவிட்டது.

இந்த வருடம் ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு புனிதரைப் பற்றி யோசிப்பது என நினைத்திருந்தேன். இன்றுடன் செபஸ்தியார் விடைபெறுகிறார்.

பிப்ரவரிக்கு நான் எடுத்திருக்கும் புனிதர் தூய அருளானந்தர்.
அருளும் ஆனந்தமும் இந்த மாதம் நமக்கு நிறைவாக கிடைப்பதாக.

நிற்க.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சொந்த ஊருக்கு வருகிறார். அவர் அப்படியாக்கும், இப்படியாக்கும் என்று கேள்விப்பட்ட அவரின் சொந்த ஊர்க்காரர்கள் ரொம்ப சிம்ப்பிளா,

'அவரைப் பற்றி எங்களுக்கு தெரியாதாக்கும்!' 'அவர் குடும்பம், கோத்திரம் எங்களுக்குத் தெரியாதாக்கும்!' என்கின்றனர்.

அவர்கள் அவரை நம்பவில்லை.

ஆனால் அதனால் இயேசுவுக்கு கோபம் வரவில்லை.

கோபம் நமக்கு எப்போது வருகிறது?

ஒன்றை எதிர்பார்க்கிறோம். எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது கோபம் வருகிறது.

தன்னை நம்புவார்கள் என எதிர்பார்க்கிறார் இயேசு. ஆனால் மக்கள் அவரை நம்பவில்லை. அப்படின்னா அவருக்கு கோபம்தானே வரணும்.

ஆனால், 'அவர் ஆச்சர்யப்பட்டார்' 'வியந்தார்' என பதிவு செய்கிறார் மாற்கு.

'என்ன இப்படி இருக்காங்களே!' என ஆச்சர்யப்படுவது கோபத்தைவிட நல்லது என நினைக்கிறேன். இந்த ஆச்சர்யத்தின்போது இயேசுவின் உதட்டில் கண்டிப்பாக ஒரு புன்னதை நின்றிருக்கும்.

நம் உள்ளத்தில் எழும் கோப உணர்வை ஆச்சர்ய உணர்வாக மாற்றிப் பார்க்கலாமே!

நாம் நினைப்பதுபோலவே எல்லாம் அல்லது எல்லாரும் நடக்க வேண்டும் என நினைப்பது தவறு. அப்படி மற்றது அல்லது மற்றவர் மாறி நடக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் மற்றும் வியப்பு இருந்தால் போதும்.

நாளைய முதல் வாசகத்திலும் 'நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் எபிரேயர் திருமடலின் ஆசிரியர்.

அடுத்தவரை நம்பாததும் (நாசரேத்தூர் மக்கள் போல) ஒரு நச்சுவேரே.

இத்தகையை நச்சு வேர்களை முறிக்கும் இயேசுவின் மருந்து குறு புன்னகையும், நிறைய வியப்பும்.

புதிய மாதம் இனிய மாதமாகட்டும்.

3 comments:

  1. Father, Nice msg...

    ReplyDelete
  2. அழகான பதிவு.நமது அன்றாட வாழ்வில் நம்மை நித்தம் அலைக்கழிக்கும் ஒரு உணர்வு....'நம்முடைய தாளத்திற்கு அடுத்தவர் நடனமாட வேண்டுமென நினைப்பதும், அது நடக்காத போது கோபம் வருவதும்' தான். நாம் நினைத்தது நிறைவேறாத போது ஏமாற்றம் வருவதைத் தடுக்க முடியாதுதான்.ஆனால் அந்த ஏமாற்றத்தைக் கையாளும் முறையை விவிலியத்தின் நாயகன் இயேசு மட்டுமல்ல....விவிலியத்தின் மாமேதை தந்தை யேசுவும் சேர்ந்தே எடுத்துவைக்கிறார்கள். இந்தப் 'புன்னகை' எனும் மருந்து ஏமாற்றத்தைக் கட்டுப்படுத்த மட்டுமின்றி நம்முள் நுழையும் நச்சுவேர்களையும் களையெடுக்க உதவு மெனல் இரட்டை பயனல்லவா?ஒரே குப்பியில் இரு தைலங்கள்! "புன்னகை" தானே! உதிர்த்து விட்டுப்போவதில் நாம் எதை இழக்கப்போகிறாம்? மாதம் ஒரு புனிதர் வரிசையில் இம்மாதப் புனிதர் அருளானந்தருக்கு ஒரு சல்யூட்! நம் மறைமாட்டத்திற்கு மட்டுமின்றி பழைய இராமநாத புரத்தின் பல
    குடும்பங்களுக்கும் இவர் பாதுகாவலர். தந்தையின் இந்தப் புதிய முயற்சிக்கு என் வாழ்த்துக்களும்,நன்றியும்!!! புலரும் புதிய மாதம் தந்தைக்கும்,அனைவருக்கும் புதுப்பொலிவைத் தரட்டும்!!!

    ReplyDelete