Monday, January 9, 2017

விளித்தல்

'என்னங்க! உங்களத்தான்!' என்று என்னிடம் பேசிக்கொண்டிருந்த தன் கணவரைத் தன் பக்கம் அழைத்தார் அந்த மனைவி.

ஒருவேளை கணவர் தூரத்தில் நின்றுகொண்டிருந்தால் இந்த மனைவி அவரை எப்படி அழைப்பார்?

'பக்கத்துல போய் அழைக்கணும் ஃபாதர்!'

இல்லையா?

நாம் ஒருவர் மற்றவரை விளிக்கிறோம்.

'அழைப்பது' என்பது சரியான வார்த்தை அல்ல.

நாளைய முதல் வாசகத்தில் (காண். எபி 2:5-12) இயேசு மனிதர்களை 'சகோதரர், சகோதரிகள்' என்று விளிக்கிறார். நாளைய நற்செய்தி வாசகத்தில், பேய்க்குட்டி ஒன்று இயேசுவை 'நாசரேத்து இயேசுவே!' என விளிக்கின்றது.

மனிதர்களைக் கடவுள் படைத்தபோது, 'அவர்களை வானதூதர்களைவிட சிறியவர்களாவும், மற்ற விலங்குகளை விட மேன்மையானவர்களாகவும் படைத்திருக்கிறார்' என்று சொல்கிற ஆசிரியர், இயேசு அவர்களை 'சகோ' என அழைக்க வெட்கப்படவில்லை என எழுதுகிறார்.

நாம் யாரையாவது பெயர் சொல்லி அல்லது செல்லப்பெயர் சொல்லி விளிக்கிறோம் என்றால் அவர் மேல் நமக்கு உரிமை இருக்கிறது என்று பொருள்.

முதல் வாசகத்தில் இயேசுவுக்கு மனுக்குலத்தின்மேல் உரிமை உள்ளதைப் பார்க்கிறோம்.

ஆனால், பேய்க்குட்டி தன்னைப் பெயர் சொல்லி அழைத்தவுடன் அதைக் கடிந்து கொள்கிறார் இயேசு. ஆக, சாத்தான் இயேசுவின்மேல் உரிமை கொண்டாட முடியாது. மேலும், தீமைக்கு இயேசுவிடம் இடமில்லை.

இன்று நான் என்னை எப்படி விளிக்கிறேன்?

எனக்கென்று நான் என்ன செல்லப் பெயர் வைத்திருக்கிறேன்?

என் உற்றவர்கள் என்னை எப்படி விளிக்கிறார்கள்?

என் மற்றவர்கள் என்னை எப்படி விளக்கிறார்கள்?

என் இறைவனை நான் எப்படி விளிக்கிறேன்?

விளிக்கின்ற உரிமையை நான் என் வாழ்வில் உறுதி செய்கிறேனா?

2 comments:

  1. " விளித்தல்"... ஒருவரின் பெயர் சொல்லி அழைப்பது மட்டுமே விளித்தல் என்ற பொருள் பெறும் என நினைக்கிறேன்.ஆம்....பெயர்களில் பலவகை.பெற்றோர் வைத்த பெயர்,பட்டப்பெயர்,செல்லப்பெயர்,காரணப்பெயர்...இவற்றில் சில.இவற்றில் காரணப்பெயர் என்பது ஒருவருக்கு பெருமையையோ சிறுமையையோ சேர்க்கலாம்.விளிப்பவருக்கும்,விளிக்கப்படுபவருக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றுதான் செல்லப்பெயர்.நம் மரியாதைக்குட்பட்டவர்களை நாம் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அதனால் தான் மாசுமறுவற்ற தன்னை மாசே உறுவான சாத்தான் பெயர் சொல்லி அழைப்பதை விரும்பவில்லை இயேசு.ஒருவரின் பெயரை உரிமையுடன் உச்சரிப்பதற்குக்கூட நமக்கு ஒரு தகுதி வேண்டுமென நினைக்கிறேன்." தூய்மையாக்குபவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர் முதல் ஒன்றே" என்கிறது விவிலியம்.இந்த ஒரு காரணத்தினாலேயே அவரது படைப்புக்களான வான தூதர்களை விட நாம் சிறியவராக இருந்தும் நம்மை 'சகோதர,சகோதரிகள்' என அழைக்க அவர் வெட்கப்பட வில்லை.அவர் பெருந்தன்மையில் நம்மை அவர் சகோதர/ சகோதரிகளென அழைக்கலாம்.ஆனால் அப்படி அழைக்கப்படுவதற்கு நாம் தகுதி உள்ளவர்களா? பதில் 'ஆம்' எனில் மகிழ்வோம்; இலையேல் அந்தத் தகுதியை வளர்த்துக்கொள்வோம்! உயிரோட்டமான ஒரு பதிவு! தந்தைக்குப் பாராட்டு!!!

    ReplyDelete
  2. Anonymous1/10/2017

    Good Yesu.

    ReplyDelete