Sunday, January 15, 2017

தடுக்கி விழுந்த பாப்பா

இன்று மாலை நண்பர்களுடன் மால் ஒன்றுக்குச் சென்றிருந்தேன்.

பொங்கல் விடுமுறை நாள்கள் என்பதால் மாலின் உணவகப்பகுதி பொங்கி வழிந்தது.

நாற்காலிகளைக் கண்டுபிடித்து அமர்வதற்குள் நாழிகைகள் நகர்ந்துவிட்டன.

'இந்தச் சேரை எடுத்துக்கவா?'

'இல்ல...ஆள் வர்றாங்க!'

'அந்தச் சேரை?'

'இல்ல...அங்கயும் வர்றாங்க!'

தமிழனுக்கு சேர் கிடைக்கிறதுதான் சட்டசபை வரையிலும் பிரச்சினை என நினைத்துக்கொண்டு, கொஞ்ச தூரம் தள்ளி அமர்ந்த மேசை நோக்கிச் சென்றேன்.

'தம்பி...சேர் வேணுமா? இதை எடுத்துக்கோங்க!' என்ற ஒரு குரல்.

கண்ணாடி அணிந்த ஒரு மாமி தாராள உள்ளம் காட்டினார்.

அவருடன் வந்திருந்த இளவல்கள் எல்லாம் தங்கள் மொபைல் ஃபோன்களில் பிஸியாக இருக்க இவர் மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அதனால்தான் என் தேவையைக் கண்டுகொண்டார்.

'நன்றி மாமி!' என்று நான் சொல்ல, 'சரி சாமி!' என்று அவர் சொல்லிவிடுவாரோ என பயந்து, 'நன்றி' என்று சொல்லிவிட்டு நாற்காலியுடன் நகர்ந்தேன்.

'தோசை' ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தோம்.

கோனார் கடை தோசையும் வந்து சேர்ந்தது.

சாப்பிட்டுக்கொண்டே நானும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன்.

தாடி வைத்த ஒரு 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் என்னைப் போலவே நாற்காலிகளைத் தேடிக்கொண்டு வந்தார். அவரைக் சுற்றி நான்கு குழந்தைகள்.

இவரின் மனைவி வரவில்லையா? அவருக்கு உடல்நலம் சரியில்லையா? அல்லது இவர் என்னைப்போல பேச்சிலரா? குழந்தைகளை எடுத்து வளர்க்கிறாரா?

தெரியவில்லை.

ஒரு மேசை காலியாக, அந்த மேசையை அடையாளம் காட்டியது குழந்தை.

நான்கு குழந்தைகளும், அவரும் ஒருசேர அந்த மேசை நோக்கி நகர்ந்தனர். மூன்று குழந்தைகள் ஓடிவிட, நான்காவது வந்த மஞ்சள் பாப்பா எனக்குப் பின்னால் இருந்த நாற்காலி தட்டிக் கீழே விழுந்தார். தூக்கிவிட நான் எழுமுன், அவர் அந்தக் குழந்தையைப் பிடித்து தூக்கிவிட்டார்.

விழுந்தவுடன் அழாமல் இருந்த குழந்தை, எல்லாரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அழ ஆரம்பித்துவிட்டது.

அவர் அதன் அழுகையை நிறுத்த சேரை இரண்டு அடி அடித்தார். அழுகை நின்றது.

இவர்களை அமர வைத்துவிட்டு, அவர் மேரிபிரவுன் சிக்கன் வாங்கிவந்து கொடுத்தார்.

ஆளுக்கு இரண்டு பீஸ்கள் வந்திருக்கும் என நினைக்கிறேன்.

எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு இவர் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டார்.

அந்தக் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு, அதிலிருந்த கெட்ச் அப்பையும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

'இன்னும் வேணும்!' என்பது போல இருந்தது அவர்களது செயல்.

நிற்க.

தங்கள் குழந்தைகள் ஒருமுறையேனும் பெரிய மாலில் சிக்கன் சாப்பிட வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞரை அல்லது அந்த தந்தையை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்தது.

நிறையப்பேர் அந்த மாலின் உணவகத்தில் இருந்தாலும் அந்த நான்கு குழந்தைகளுக்கு தங்கள் அப்பா மட்டுமே தெரிந்தார்!

அந்த அப்பாவுக்கு அந்தக் குழந்தைகள் மட்டுமே தெரிந்தனர்!

ஆக, கூட்டமான உலகத்தில் நமக்கு நெருக்கமானவர்களைக் கண்டுகொள்வதே நாளை நாம் கொண்டாடும் காணும் பொங்கல்!

'என்னைக் காண்கிறவரை நான் இங்கே கண்டேன்!' என்றார் ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார்.

'என்னைக் காண்கிறவரை நான் எங்கும் காண்கிறேன்...என் உறவுகளில்...'

காணும் பொங்கல் வாழ்த்துக்கள்...

வாங்க கண்டுக்குவோம்!

5 comments:

  1. ' என்னடா..ஒன்னுமே இல்லாம பதிவு நீண்டு கொண்டே போகிறதே' என்று பொறுமையாக வாசித்தால், நமக்கு கோனார் கடை தோசை,மேரிப்ரௌன் சிக்கன்... இவற்றைப் பற்றியெல்லாம் சொல்லி, நாவில் ஜலம் ஊற வைத்து தான் சொல்ல வந்ததைப் பின் இறுதியாகத் தருகிறார் தந்தை அதன் முக்கியத்துவம் கருதி. ஆம்! "என்னைக் காண்கிறவரை நான் இங்கே கண்டேன்" எனக்கூறிய ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார் போல " என்னைக் காண்கிறவரை நான் எங்கும் காண்கிறேன்...என் உறவுகளில்" என உரக்கச் சொல்லலாம் நாமும் நாளை. உறவுகள் அப்படி,இப்படி எப்படி இருப்பினும் அவர்கள் நம்மவர்களே! எனும் பெரிய மனத்தோடு அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டுவோம்.நமக்கு..
    "காணும் பொங்கலின்" காரணப்பெயரை விளக்கத் தந்தை எடுத்திருக்கும் முயற்சியைப் பாராட்டியே ஆகவேண்டும்! அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்கள்! காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள இதுதான் சமயம்..தூற்றுவோம்!! நன் முறையில்!!!

    ReplyDelete
  2. Anonymous1/16/2017

    உடலிலே ஆரோக்கியம் பொங்க
    முகத்திலே சிரிப்பு பொங்க
    வாழ்விலே மகிழ்ச்சி பொங்க
    இயேசுவிலே உறவுகள் பொங்க உறவுக உறவுப் பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. 'என்னைக் காண்கிறவரை நான் எங்கும் காண்கிறேன்...என் உறவுகளில்...' - என்று காண்கின்ற இறைவனை, சந்தோசம் பொங்கும் நம் உறவுகளில் மட்டுமே காணமுடியும் என்று அனுபவத்தோடு விளக்கும் தந்தை ஏசுவுக்கும் காணும் பொங்கல் (உறவுகளின்) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Super message father...

    ReplyDelete