Saturday, June 25, 2022

முறிவுகளே முடிவுகளாக

ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

I. 1 அரசர்கள் 19:16, 19-21 II. கலாத்தியர் 5:13-18 III. லூக்கா 9:51-62

முறிவுகளே முடிவுகளாக

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் அளவு மற்றும் பண்பிற்கிற்பேத் திட்டமிட்டு நிலம் வீணாகாமல் கட்டுவது. இப்படிக் கட்டுவதில் பிரச்சினை என்னவென்றால், நிலத்தை தூய்மைப்படுத்தி ஒழுங்குபடுத்துதல், வானம் தோண்டுதல், அடித்தளம் இடுதல், வரைபடம் உருவாக்குதல், கட்டுதல், பூசுதல், மேற்கூரையிடல், தளமிடல், வர்ணம் பூசுதல், தண்ணீர் மற்றும் மின்சார திட்டமிடல் என எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும். இதற்கு நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. இரண்டு, ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதை நம் தேவைக்கு ஏற்ப சிறு மாற்றங்கள் செய்வது. இது ரொம்பவே எளிது. நம்முடைய வேலை வர்ணம் பூசுவதும், இங்கே அங்கே என சிலவற்றை சரி செய்வதும்தான். ஆனால், நாம் ஏன் சொந்தமாக வீடு கட்டுகிறோம்? காரணம் ரொம்ப எளிது. முதல் வழியில் பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் நம்முடைய படைப்பாற்றலைப் பயன்படுத்தி, நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப வீட்டைக் கட்டலாம். ஆனால், இரண்டாம் வழியில் பிரச்சினைகள் குறைவு என்றாலும், நாம் புதிதாக அவ்வீட்டில் எதையும் செய்ய முடியாது. அதன் அமைப்பு பிடிக்கவில்லை என்றால் மாற்ற முடியாது. மேலே மாடி கட்டுவதற்காக அடித்தளத்தை உறுதி செய்ய முடியாது. வீணாக்கப்பட்ட இடத்தை ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீர் மற்றும் மின்சார அமைப்புக்களை மாற்ற முடியாது. சில நேரங்களில் புது வீட்டைக் கட்டுவதை விட பழைய வீட்டைப் பராமரிப்பதற்கு அதிகம் செலவாகிவிடும். எனவேதான், பழைய வீட்டை வாங்கினாலும் அதைப் பராமரிப்பதற்குப் பதிலாக முற்றிலும் அதை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு மேற்காணும் உருவகத்தை நேரடிப் பொருளில் சொல்கிறது. எப்படி?

வாழ்க்கை மாற்றம் வேண்டுமென்றால் பழைய வாழ்க்கையோடு உள்ள உறவை முழுமையாக முறிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும். முறிவுகளே முடிவுகள் என்பது சொல்வதைப் போல அவ்வளவு எளிதல்ல.

'முறிவு' என்ற வார்த்தை நமக்கு பயம் தருகிறது. 'எலும்பு முறிவு,' 'மண முறிவு,' 'நட்பு முறிவு' போன்றவற்றை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், முறிவு இல்லாமல் வாழ்க்கை இல்லை. எப்படி? நாம் பிறந்தவுடன் நம்மையும் நம் தாயையும் இணைக்கும் தொப்புள் கொடி முறிக்கப்படுகிறது. இந்த முறிவு இல்லை என்றால், நம் வாழ்க்கையும், நம் தாயின் வாழ்க்கையும் ஆபத்தில் முடியும். பள்ளிக்குள் நுழையும்போது வீட்டில் அனுபவித்த நம் சுதந்திரம் முறிக்கப்படுகிறது. கல்லூரிக்குள் நுழையும்போது பள்ளியின் உறவு முறிவுபடுகின்கிறது. படிப்பு முடிந்து திருமணம் என்றவுடன் பல நட்பு உறவுகள் முறிகின்றன. திருமணத்திற்குள் நுழையும்போதும் நாம் பல பேரின் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதியில், ஒட்டுமொத்தமாக எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்கின்றோம். நாம் பேசும்போது பேசுகின்ற முதல் வார்த்தை முறிந்து இரண்டாம் வார்த்தை பிறந்தால்தான் உரையாடல் இனிக்கும். நாம் நடக்கும்போது எடுக்கின்ற முதல் அடி முறிந்து இரண்டாம் அடி பிறந்தால்தான் பயணம் தொடங்கும். நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பழைய இயல்பை முறித்தால்தான் உயிர் இருப்பு சாத்தியமாகும். ஆக, முறிவுகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள்.

இறைவனைப் பின்பற்றுதல் அல்லது இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கடந்த கால வாழ்க்கையை, கடந்த கால உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்பிக்கிறது. கடந்தகாலத்தோடு இருக்கும் தொடர்பை முறிக்கும்போதுதான் புதிய வாழ்க்கையையும் புதிய பணியையும் தொடங்க முடியும். அருள்பணி நிலையில் இணையும் ஒருவர் தன் குடும்பத்தோடு இணைந்திருக்கும் இணைப்பை முறிக்கிறார். புதிய வாழ்வைத் தொடங்குகிறார். திருமண உடன்படிக்கையில் இணையும் மணமக்கள் தத்தம் குடும்பங்களோடு உள்ள உறவுகளை முறிக்கும்போதுதான் தங்களுக்கிடையே உள்ள குடும்ப உறவைத் தொடங்குகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:16,19-21) எலியா தன்னுடைய இறைவாக்குப் பணியை நிறைவு செய்கிறார். பணியின் இறுதியில், நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசராகவும் சாபாற்றின் மகன் எலிசாவை இறைவாக்கினராகவும் அருள்பொழிவு செய்யுமாறு பணிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எலிசா ஒரு விவசாயி. கடவுளால் உந்தப்பட்ட எலியா, தன்னுடைய உழவுத்தொழிலில் மூழ்கியிருந்த எலிசாவைச் சந்தித்து அவர்மேல் தன் போர்வையைப் போடுகின்றார். புதிய ஆடையை ஒருவர்மேல் போர்த்துவது என்பது புதிய பணிக்கு ஒருவரை அனுப்பவது என்பது பொருளாகும். ஆகையால்தான், அருள்பணியாளர் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்விலும் அவருக்கு புதிய திருவுடை அணிவிக்கப்படுகிறது. அந்தத் திருவுடையும் ஏறக்குறைய போர்வையைப் போலத்தான் இருக்கிறது. தன்மேல் போர்வை போர்த்தப்பட்டவுடன் தன் வாழ்வு மாற வேண்டும் என்பதை உடனடியாக உணர்கிறார் எலிசா. 

ஆகையால், எலியாவின் அனுமதியின்பேரில் அவர் தன்னுடைய எருதுகளை அப்படியே விட்டுவிட்டு, தன் பெற்றோர்களை முத்தமிட - பிரியாவிடை கொடுக்க - வீட்டிற்குச் செல்கின்றார். அந்தக் காலத்தில் வீடுகளும் தோட்டங்களும் தூரமாக இருந்திருக்க வேண்டும். இவருடைய பிரியாவிடை இவருடைய குடும்பத்தின்மேல் உள்ள உறவை முறிக்கும் நிகழ்வாக அமைகிறது. தன்னுடைய உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவையாக இருந்த ஏரை விறகாக்கி, மாடுகளை உணவுப் பொருளாக்கி தன் மக்களுக்கு விருந்து படைக்கின்றார் எலிசா. தன்னுடைய ஏரை உடைப்பதாலும், எருதுகளைக் கொல்வதாலும் தன்னுடை கடந்த காலத்தோடு தான் கொண்டுள்ள உறவை முறிக்கிறார் எலிசா. இனி அவர் நிலத்தை உழப்போவதில்லை. தான் தன்னுடைய ஏர் மற்றும் எருதுகளால் சமைத்த உணவை மக்களுக்குக் கொடுத்ததன் வழியாக, இனி தான் காய்கறிகளும் தானியங்களும் அவர்களுக்குத் தரப் போவதில்லை என்றும், இறைவார்த்தையே இனி அவர்களுக்கு அவர் வழங்கும் உணவாக இருக்கும் என்றும் உருவகமாக முன்னுணர்த்துகின்றார். எலிசாவின் இச்செயல்கள் அவர் தன்னுடைய வாழ்வுப் பாதையை முற்றிலும் மாற்றியதை உருவகங்களாக உணர்த்துகின்றன. இந்த மாற்றத்தின் முதல்படி தன்னுடைய பழைய வாழ்விலிருந்து அவர் தன்னையே முறித்துக்கொண்டதுதான்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 5:13-18), பவுல் தன்னுடைய வாழ்வில் எடுத்த மிகப்பெரிய முடிவின் சூழலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. கலாத்தியருக்கு எழுதும் திருமுகத்தில் பவுல், ஒருவர் கடவுள் முன் எப்படி ஏற்புடையவராகிறார் என்பதைப் பற்றி அதிகம் பேசுகிறார் பவுல். இயேசுவைச் சந்திக்குமுன் பவுல் யூதச் சட்டத்தையும், முறைமைகளையும் கடைப்பிடிப்பவராக இருக்கிறார். ஏனெனில், கடவுளுக்கு பணி புரிவதற்கும் அவருக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் இதுவே சரியான மற்றும் ஒரே வழி என அவர் எண்ணினார். ஆனால், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்தவுடன் அவருடைய வாழ்க்கை தலைகீழாகிறது. ஒரு காலத்தில் சட்டத்திற்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்த பவுல் இயேசுவின் திருத்தூதராகிறார். மேலும், கிறிஸ்துவின்மேல் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றார் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். இப்படியாக அவருடைய வாழ்வு முற்றிலும் மாறுகிறது. திருச்சட்டத்தின் மேல் வெறிகொண்ட பரிசேயராக இருந்த பவுல் கிறிஸ்துவின் அர்ப்பணமிக்க பணியாளனாக மாறுகிறார்.

இன்றைய வாசகத்தில் - ஒட்டுமொத்த திருமடலில் குறிப்பிடுவதுபோல - கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டாலும் யூதச் சட்டத்தையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன சில யூத கிறிஸ்தவர்களை எதிர்க்கின்றார். 'கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து - சட்டத்திலிருந்து - நம்மை விடுவித்துள்ளார்' என்று சொல்லும் இடத்தில் 'சட்டத்தை,' 'அடிமைத்தளை எனும் நுகம்' என்கிறார். இச்சுதந்திரத்தில் நம்பிக்கையாளருக்குத் தேவையானதெல்லாம் கிறிஸ்துவின்மேல் கொள்ளும் நம்பிக்கை மட்டுமே. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த யூதச் சட்டமும், 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக' என்ற ஒரே கட்டளையில் அடங்கிவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்வை உந்தித்தள்ளுவது யூதச்சட்டம் அல்ல. மாறாக, தூய ஆவி. கிறிஸ்தவ வாழ்விற்கான அடித்தளங்களின் மேல் அழுத்தம் கொடுக்கும் பவுல், தன்னுடைய பரிசேயக் கடந்த கால வாழ்வோடு தனக்குள்ள உறவை முறித்துக்கொள்வதோடு, கலாத்திய நகர் திருச்சபையும் அவ்வாறே தன்னுடைய யூதச் சட்ட பிரமாணிக்கத்தை முறித்துக்கொள்ள அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:51-62), இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனை வருகிறது: 'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.' தன்னுடைய இறப்பு அங்கே காத்திருக்கிறது என்றாலும் துணிவுடன் இப்பயணத்தை மேற்கொள்கிறார் இயேசு. இப்படிச் செய்வதன் வழியாக தன்னுடைய அமைதியான, வெற்றிகரமான கலிலேயப் பணியை முறித்து, தன்னுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு நோக்கி நகர்கின்றார். இனி இவர்  யாருக்கும் நலம் அளிக்கமாட்டார். இறையாட்சி பற்றி அறிவிக்க மாட்டார். மாறாக, சீடத்துவம் பற்றிப் போதித்து, தன்னுடைய இறப்புக்காக தன்னையும் தன் சீடர்களையும் தயாரிப்பார்.

இன்றைய வாசகத்தின் இரண்டாம் பகுதி நோக்கு மாற்றத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. எலியா மற்றும் எலிசா நிகழ்வின் கூறுகள் இங்கேயும் காணப்படுகின்றன. முதலில், இயேசுவின் சீடர்கள் யாக்கோபும் யோவானும், எலியாவைப் போல சமாரிய நகர் மேல் நெருப்பு பொழியப்பட விரும்புகின்றனர் (காண். 2 அர 1:10). ஆனால், எலியாவுக்கு மாறாக, இயேசு, சீடர்களைக் கடிந்துகொள்வதுடன் பகைவர்க்கும் அன்பு என்ற கட்டளையின் அடிப்படையிலேயே அவர்கள் நடக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றார். 

தொடர்ந்து, இயேசு எருசலேம் நோக்கிச் சென்றபோது மூன்று நபர்களைச் சந்திக்கின்றார். முதலாமவர் தானாகவே முன்வந்து இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றார். தன்னைப் பின்பற்றுபவர்கள் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசு தன்னுடைய மக்கள் மட்டுமல்ல சமாரியர்களின் நிராகரிப்பையும் அனுபவித்தார். அவருக்கு 'தலை சாய்க்க இடமில்லை.' அவரைப் பின்பற்றுபவர்களும் அதே நிலைக்க ஆளாகத் தயாராக இருக்க வேண்டும். அடுத்ததாக, தன்னைப் பின்பற்றுமாறு ஒருவரை அழைக்கிறார் இயேசு. ஆனால், அவர் தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கோருகின்றார். அவர் எலிசாவைப் போல தன்னுடைய குடும்பத்தின் உறவை முறிக்க நினைக்கின்றார். ஆனால், இது ஒரு சாக்குப்போக்காக இருக்கின்றது. தன்னுடைய தந்தை இருக்கும் அளவு இயேசுவைப் பின்பற்றுதல் சாத்தியம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கின்றார் அந்த நபர். இவருடைய பதிலிலிருந்து இவர் தன்னுடைய குடும்பத்தையே முதன்மைப்படுத்துவது தெரிகிறது. எலிசா தன்னுடைய குடும்ப உறவை முறித்ததுபோல இவர் செய்ய மறுத்ததால் இவர் தகுதியற்றவராக மாறுகிறார். மூன்றாம் நபர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனாலும், தன் வீட்டாரிடம் பிரியாவிடை பெற அனுமதிக்குமாறு வேண்டுகிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப்பார்ப்பவர்' உருவகத்தின் வழியாக, இயேசு அவரை முன்நோக்கிப் பார்க்க அழைக்கிறார். இவ்வாறாக, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் தங்களுடைய கடந்த காலத்தை முறித்தவர்களாகவும், தங்களுடைய முதன்மைகளை மறுவரையறை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாடு கடினமான சவாலை நமக்குக் கொடுக்கிறது. சீடத்துவத்துடன் இணைந்துவரும் 'முறிவு என்னும் முடிவை' நமக்கு வலியுறுத்துகிறது. தன்னுடைய அமைதியான உழவுத் தொழிலை முறிப்பதால்தான் எலியா இறைவாக்கினராக மாறுகிறார். பவுல் தன்னுடைய பரிசேய பிரமாணிக்கத்தையும், யூத சட்டத்தையும் முறித்தால்தான் இயேசுவின் திருத்தூதராக மாற முடிகிறது. இயேசு தன்னுடைய பணி வாழ்வை முறித்துக்கொண்டதால்தான் அவரால் தன்னுடைய பாடுகள் நோக்கி பயணம் செய்ய முடிகிறது. மேலும், தன்னைப் பின்பற்ற விரும்பும் தன் சீடர்களும் முறித்துக்கொள்ள வேண்டியவை பற்றி அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. கடவுள் நம் வாழ்வைத் தன் கைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் கைகளை உதறிவிட்டு நம் கைகளை அவரை நோக்கி நீட்டுவது அவசியம். தங்களுடைய கடந்த காலத்தை முறித்துக்கொள்ளும் ஒருவரே புதிய வாழ்க்கை நோக்கி, புதிய பணியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். இப்படிப்பட்ட ஒருவரின் மனநிலையைத்தான் இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர், 'வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு' (காண். திபா 16:11) என்று பாடுகின்றார்.

நம் வாழ்வில் முறிவுகளை முடிவுகளாக எடுப்பது எப்படி?

1. எலிசா போல நம்முடைய பாதுகாப்பு வளையத்தை உடைக்க வேண்டும்

எலிசா ஒருவேளை தன்னுடைய ஏரை உடைக்காமல், எருதுகளைக் கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும்? தனக்கு ஒரு ஃபால் பேக் வைத்திருப்பார். தன்னுடைய இறைவாக்குப் பணி தோல்வியாக இருந்த நேரத்தில் உழவுத்தொழிலுக்குத் திரும்பியிருப்பார். அல்லது இதைச் செய்து கொண்டே அதைச் செய்யலாமே என்று இரண்டையும் செய்ய முயற்சித்து விரக்தியடைந்திருப்பார். அல்லது இவர் இறைவாக்குப் பணி செய்யும்போது இவருடைய எண்ணமெல்லாம் ஏரின் மேலும் எருதுகள்மேலும்தான் இருக்கும். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்பது வாழ்வின் பாடமாக இருக்கிறது. தாயின் வயிற்றில் இருப்பது குழந்தைக்கு என்றும் பாதுகாப்பு தான். ஆனால், அந்தப் பாதுகாப்பு வளையம் முறியவில்லை என்றால் அது குழந்தைக்கே ஆபத்தாக முடியும். இன்று அருள்பணி நிலையில் இருக்கும் நான் எனக்கென உருவாக்கி வைத்திருக்கும் ஃபால் பேக் மெக்கானிஸம் எவை? என்னுடைய குடும்பமா? நட்பு வட்டமா? படிப்பா? இன்று இறைப்பணி செய்யும்போது என்னுடைய மனம் எங்கே செல்கிறது? என்னுடைய மனம் செல்லும் இடத்திற்காக நான் என் பணியோடு சமரசம் செய்கிறேனா? என்னுடைய பாதுகாப்பு வளையத்தை நான் உறுதியாக்கிக்கொள்வதில் கருத்தாயிருக்கிறேனா? அல்லது வளையத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கிறேனா?

2. பவுல் போல துணிச்சல்

இரண்டு தெரிவுகளுக்கு இடையே நிற்பது நமக்கு மனஉளைச்சலை உண்டாக்குவதோடு, 'ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய இயலவில்லை' என்கிறார் பவுல். நாம் பழையது ஒன்றை முறித்து முன்னே செல்வதை ஆங்கிலத்தில் 'ப்ரேக் த்ரூ' என்கிறார்கள். அதாவது, ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவர் தன்னுடைய பழைய சாதனையை முறிக்கும்போது 'ப்ரேக் த்ரூ' அடைகிறார். இதை அவர் அடைவதற்குச் செய்ய வேண்டிய ஒன்று, 'ப்ரேக்கிங் வித்.' தன்னுடைய பழைய பழக்கம், அல்லது பழைய செய்முறையை அவர் விட வேண்டும். 'ப்ரேக்கிங் வித்' செய்வதற்கு நிறைய துணிச்சல் தேவை. 

3. இயேசு போல சமநிலை

கலிலேயாவில் இயேசுவின் பணி நன்றாக இருக்கிறது. நிறையப் பேர் குணம் பெறுகிறார்கள். அவருடைய புகழ் எங்கும் பரவுகிறது. இதைக் கண்டு தேங்கிவிடவில்லை அவர். தன்னுடைய இலக்கில் அவர் தெளிவாக இருக்கின்றார். சமாரியாவைக் கடந்து செல்லும்போது எதிர்ப்பு வருகிறது. ஆனால், எதிர்ப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. கலிலேயர்களைத் திருப்திப்படுத்த அவர்களோடு தங்கவில்லை. சமாரியர்களை எதிர்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, பயப்படவில்லை. ஆக, யாரையும் திருப்திப்படுத்த நினைக்காத, யாரையும் கண்டு பயப்படாத ஒருவர் சமநிலை பெற்றிருப்பார். இந்தச் சமநிலை கொண்டு அவர் தன்னுடைய எந்த நிலையிலும் எதையும் முறித்து முன்னேறத் தயாராக இருப்பார்.

இறுதியாக,

ஒரு பழமொழி உண்டு: 'பறக்க நினைக்கின்ற புறா மண்ணிலிருந்து எழும்பி எறும்புப் புற்றில் அமர்ந்தால் அது பறந்தது என்றாகிவிடாது.' மண்ணும் எறும்பும் புற்றும் ஒன்றுதான். இன்று சீடத்துவத்திற்கு மட்டுமல்ல. நான் விட்டுவிடுகின்ற எந்த தீய பழக்கத்திற்கும் முறிவு மிக அவசியம். இன்று நான் இறைவனைப் பின்தொடர்வதிலிருந்து என்னைப் பின்னிழுக்கும் பழக்கம் எது? நான் இவ்வுலகில் மிகவும் மதிப்புக்குரியவர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் என்று யாரைக் கருதுகிறேன்? நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து இவர்கள் என்னைப் பின்நோக்கி இழுக்கிறார்களா?
எல்லாரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு முன்னே செல்ல முடியும் என்கிறது மூளை. இல்லை முறித்துவிடத்தான் வேண்டும் என்கிறது மனம். மூளைக்கும் மனத்திற்குமான போராட்டத்திலேயே நகர்கிறது வாழ்க்கை.

முறிவுகளே முடிவுகள் ஆனால் முன்னேறுவது எளிதாகும்!

1 comment:

  1. Philomena Arockiasamy6/25/2022

    ஆண்டின் பொதுக்காலம் 13 ம் ஞாயிறின் மறையுரை! “வாழ்க்கை மாற்றம் வேண்டுபவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பழைய வாழ்க்கையோடு உள்ள உறவை முறிக்க வேண்டும்”….. என்று ஒரே வாக்கியத்தில் சொல்கிறது…சொல்லுமளவிற்கு அதை செயலில் காட்டுவது எளிதில்லை எனினும். “முறிவுகள் வாழ்வின் எதார்த்தங்கள்”
    தந்தை தரும் உதாரணங்கள் புரிதலைக் கூட்டுகின்றன.

    எலியாவின் அனுமதியின் பேரில் தான் கடந்து வந்த பாதையை….செய்த தொழிலை….உறவை முறித்துக்கொள்ளும் எலிசா.தன்னைச்சார்ந்தவர்களுக்குத் தான் கொடுத்து வந்த உணவிற்கு ஒரு தடைவிதித்து,இனி இறைவார்த்தை மட்டுமே அவர்களுக்கு உணவு என்பதை சொல்லாமல் சொல்கிறார். இறைவனைச் சார்ந்து நிற்கத் தான் இதுகாறும் வாழ்ந்து வந்த வாழ்க்கையை முறித்துக்கொள்ளும் எலிசா பற்றிக்கூறும் “அரசர்களிலிருந்து” எடுக்கப்பட்ட முதல் வாசகம்….

    ஒரு காலத்தில் சட்டம் மட்டுமே தெரிந்தால் போதும் என்றிருந்த பவுல் உயிர்த்த கிறிஸ்துவைப்பற்றி அறிந்தவுடன் தன் பழைய வாழ்வை முறித்துக்கொண்டு “ கிறிஸ்துவ வாழ்விற்கான வாழ்விற்கு அடித்தளமிடுவது தூய ஆவியே!” என்று முழக்கமிடுவதைப் பற்றிக்கூறும் கலாத்தியருக்கு எழுதப்பட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட வாசகம்….

    தான் தன்னைப்பின்பற்றிவர அழைத்தவர்கள் அனைவரும் தங்களின் குடும்ப உறவை முறித்துக்கொள்ள தயக்கம் காட்ட, “கலப்பையில் கை வைத்தவன் திரும்பிப் பார்க்கலாகாது” என்ற கூற்றின் மூலம் தன்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் தங்கள் கடந்த காலத்தையும்,முதன்மைகளையும் புறந்தள்ள வேண்டுமெனக்கூறும் நற்செய்தி வாசகம்.

    நாம் குடும்ப உறவிலிருப்பினும்… துறவற நிலையிலிருப்பினும் அவரவர் நிலைக்கேற்றவாறு சில வரையறைகள் உண்டு. நம் முதன்மைகளை முறித்துக்கொண்டு வெளியே வரும் பட்சத்தில் தான் இது சாத்தியம் என்பதை உணரவேண்டும்.ஒரு வண்ணத்துப்பூச்சி தன் சிறைவாழ்க்கையிலிருந்து விடுபட்டு சுதந்திரமாகப் பறக்க அதன் கூட்டை உடைத்து வெளியே வருவது அவ்வளவு எளிதான காரியமா என்ன? ஒரு வண்ணத்துப்பூச்சிக்கே இது வாழ்வின் நியதி எனின் ஆற றிவு கொண்ட மனிதனுக்கு தான் என்ன செய்கிறோம்? எதைச்செய்கிறோம் எனும் புரிதல் வேண்டுமல்லவா? செய்யும் செயலில் துணிச்சலும்….போற்றுவாரும் தூற்றுவாரும் நம்மைச்சுற்றி இருக்கும் இவ்வுலகில் எதையும் தலைக்குள்….மனதிற்குள் ஏற்றுக்கொள்ளாமல் வீறு நடை போடுதலும்…கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைப் பின்னோக்கித் தள்ளும் யாரையும்…எதையும் விட்டுவிடுதலும் இன்றையத் தேவை. “முதன்மைகளே…முறிவுகளே முடிவுகள்”….. பேச்சில் இருக்கும் சாத்தியம் செயலில் இயலுமா? முயன்றால் முடியாத்து என்று ஒன்றில்லை என்கிறது மூளை. முன்னேறத் துடிப்பவனுக்கு ஏது தடை? “ வாழ்வின் வழியை நாமறிந்தால் அவர் முன்னிலையில் நமக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு “ என்று நம் உதவிக்கு வருகிறார் திருப்பாடலாசிரியர். “எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர் நிறைந்த உலகத்தில் இப்படித்தான் வாழவேண்டும்” என்றதொரு நற்செய்தி சொல்லும் மறையுரைக்காகத் தந்தைக்கு நன்றியும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete