Tuesday, May 8, 2018

முழு உண்மை

நாளைய (9 மே 2018) நற்செய்தி (யோவா 16:12-15)

முழு உண்மை

'உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.'

- இயேசுவின் இறுதி வார்த்தைகளில் வரும் 'முழு உண்மை' என்ற சொல்லாடலை நாம் நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அது என்னங்க முழு உண்மை?

உண்மை அல்லது பொய். இவ்வளவுதான.

சதுரங்க வேட்டை திரைப்படத்தில் கதாநாயகன் சொல்வார்: 'ஒரு பொய் சொல்லும்போது அதுல கொஞ்சம் உண்மை கலந்திருக்கணும். அப்பத்தான் அது பொய்னு தெரியாது.' ஆக, பொய்யிலும் உண்மை இருக்கிறது. அப்படி என்றால், உண்மையிலும் பொய் இருக்கலாம். முழு உண்மை என்பது பொய் இல்லாத உண்மையா?

இயேசு மற்றும் பிலாத்து உரையாடலில் பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா அது என்ன?' என்று கேட்பார். தொடர்ந்து தன் மனைவியிடம், 'கிளவுதியா, உண்மை என்றால் என்ன?' எனக் கேட்பார். அதற்கு மனைவி, 'அதை நீயே உணராவிட்டால் அதை யாரும் உனக்குக் கற்பிக்க முடியாது' என்பார் மனைவி.

'சத்' என்றால் சமஸ்கிருதத்தில் இருப்பு என்பது பொருள். ஆக, இருப்பு இருப்பாக இருக்கும்போது அது உண்மையாக இருக்கிறது. இருப்பில் கறை படியும்போது அது பொய் ஆகிவிடுகிறது. 'இது இல்லை. இது இல்லை' என்று ஒவ்வொன்றாகக் களைந்துவிடும்போது இறுதியில் நிற்கும் இருப்பே உண்மை. அந்த உண்மையை நோக்கிய பயணத்தில் உதவி செய்பவர் தூய ஆவியார்.


1 comment:

  1. "இருப்பு இருப்பாக இருக்கும்போது அது உண்மையாக இருக்கிறது.இருப்பில் கறை படியும்போது அது பொய்யாகி விடுகிறது" கிட்டத்தட்ட நாம் வெங்காயம் உரிக்கையில் ஒவ்வொரு இழையாக இது இல்லை; இல்லை எனக்களைந்து இறுதியில் வரும் அந்த பகுதிக்கு இணையானது தான் இருப்பு என்று தோன்றுகிறது. நான் நினைப்பது சரியா எனத்தெரியவில்லை. எது எப்படியோ.. உண்மையை நோக்கிய நம் தேடலில் நம்மைக்கரம் பற்றி நடத்துபவர் தூய ஆவியானவராக இருக்க வேண்டும். கொஞ்சம் புரிதலுக்குக் கடினமான விஷயத்தையும் எளிமைமிகு சொற்களால் பரியவைக்கும் தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!.

    ReplyDelete