Thursday, May 31, 2018

அத்திப் பழக்காலம் அல்ல

நாளைய (1 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 11:11-26)

அத்திப் பழக்காலம் அல்ல

பெத்தானியாவிலிருந்து திரும்பும் இயேசுவுக்கு வழியில் பசிக்கிறது. பசி ஒரு கொடுமையான உணர்வு. இந்தப் பசியின் போதுதான் நம் இயலாமையின் உச்சகட்டத்தை நாம் உணர்கிறோம். இந்தப் பசி நேரத்தில் உணவு மட்டுமே நம் எண்ணத்தில் இருக்கும். எதைக் கண்டாலும் சாப்பிடவேண்டும் போல இருக்கும். இயேசுவுக்கும் அப்படித்தான் இருக்கிறது. இலைகள் அடர்ந்து ஓர் அத்திமரத்தைக் கண்டு அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் செல்கின்றார். இலைகளைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஏமாற்றம் கோபமாக மாற, இயேசு அந்த அத்திமரத்தைச் சபித்துவிடுகின்றார்.

'ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல' - என ஒரு இடைக்குறிப்பை எழுதுகின்றார் மாற்கு.

அத்திப் பழக்காலம் அல்ல என்பது இயேசுவுக்குத் தெரியாதா? தச்சனுக்கு விவசாயம் தெரிய வாய்ப்பில்லைதானே!

அத்திப் பழக்காலம் அல்ல என்று தெரிந்தும் ஏன் இயேசு அதன் அருகில் செல்ல வேண்டும்? கனிவதற்கான காலம் அல்ல என்று தெரிந்தும் ஏன் சபிக்க வேண்டும்?

இது எப்படி இருக்கிறது என்றால், 'குழந்தைப் பேறு அடைய முடியாத ஓர் ஆணைப் பார்த்து, 'நீ ஏன் குழந்தை பெற்றெடுக்கவில்லை?' என்று கேட்பது போல.'

கடவுள் தான் நினைப்பதைச் செய்கிறார் என்பது இங்கே சரியாகத்தான் இருக்கிறது.

படைப்புக்கள் காலத்திற்கு உட்பட்டவை. ஆனால் படைத்தவர் காலத்தைக் கடந்தவர்.

காலத்திற்கு உட்பட்ட நிலையிலுருந்து காலத்திற்கு உட்படாத நிலைக்குத் தன் சீடர்களை இந்த அத்திமர எடுத்துக்காட்டு வழியாக அழைக்கின்றார் இயேசு.

அதாவது, சீடத்துவத்தில் சாக்குப் போக்கிற்கு இடமில்லை.

'இது நேரம் இல்லையே' என்றும், 'எனக்குத் தெரியாது' என்றும், 'என்னால் இப்போது முடியாது' என்றும் சீடர்கள் சொல்ல முடியாது. எந்நேரமும் கனி தருதல் அவசியம்.

நிற்க.

நாளை பள்ளிகள் தொடங்குகின்றன. திருச்சியில் இன்று பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகளும் பெற்றோர்களும் வாளிகளும், பைகளுமாய் நடந்துகொண்டிருந்தனர். அம்மாவுக்கு வழிகாட்டும் பிள்ளைகள், பிள்ளைகளுக்கு புத்தி சொல்லும் அம்மாக்கள், கால்கடுக்க நடந்து ஆட்டோ பணத்தை மிச்சம் பிடித்து தங்கள் பிள்ளைகளின் மூடிய கையிடுக்கில் நுழைக்கும் அப்பாக்கள் என நிறையப் பேரைக் காண முடிந்தது. இந்தப் பிள்ளைகளின் கண்களின் கண்ணீரிலும் நனையாத அவர்களின் நம்பிக்கையைக் காண நம்மால் முடியும்.

ஒவ்வொரு நாளும் இந்தக் குழந்தைகள் இனி அறிவிலும், உடல்பலத்திலும் வளர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் கனி தர வேண்டும்.

மேற்காணும் அத்திமரம் இந்தக் குழந்தைகளுக்கும், நமக்கும் சொல்வது ஒன்றுதான்: கனிவதற்கு காலம் என்று எதுவும் இல்லை. எல்லா நேரமும் கனிதர நம்மால் முடியும். அதற்கேற்ற உழைப்பும், திறனும் நம்மிடம் இருக்கும்போது.

இந்தப் புதிய கல்வி ஆண்டு கனிதரும் ஆண்டாக அமைய வாழ்த்துகளும், செபங்களும்!

2 comments:

  1. எனக்கு இங்கு ஒரு கேள்வி இருக்கு சாமி.. ' என்னோடு இருந்தால் நீங்கள் மிகுந்த கனி தருவீர்கள்.' இல்லைன்னா உனக்கு சாபம் .. என்றால் ஏன் இவ்வளவு கொடுமையானவராக இருக்கிறார்??

    ReplyDelete
  2. "காலத்திற்குட்பட்ட நிலையிலிருந்து காலத்திற்குட்படாத நிலைக்குத்தன் சீடர்களை அழைக்கிறார் இயேசு" எனக்கூறும் ஒரு பதிவு.வாழ்வின் ஏற்றத்தாழ்வுக்கு மத்தியிலும்,மேடுபள்ளங்களையும் தாண்டி' கனி தருவது' மட்டுமே சீடர்களின் வேலை என்பதை எடுத்துரைக்கிறார் இயேசு.இந்தக்கனிதருதலை சீடர்களோடு நிறுத்திக்கொள்ளாமல் பள்ளிச்சிறுவர்களுக்கும் இதைப்பரவ விடுகிறார் தந்தை.பிறவி எடுத்த அனைவருமே நமது உழைப்பையும்,திறனையும் ஒன்று கூட்டி காலநேரம் பார்க்காது கனிதரவேண்னும் என்பது கல்வியாண்டைத்தொடங்கும் நம் இளவல்களுக்குத் தந்தையின் வேண்டுகோள். அழகான இந்த செய்தி நம் அனைவருக்குமே பொருந்தும். "இந்தப்பிள்ளைகள் அறிவிலும் உடல்நலத்திலும் வளரவேண்டும்"... தந்தையின் கரிசனம் தெரிகிறது.இயேசுவைக்குறித்த தந்தையின், "தச்சனுக்கு விவசாயம் தெரிய வாய்ப்பில்லை தானே!".... இரசித்தேன்.அத்திப்பழம் போல் சுவை மிகுந்த ஒரு பதிவிற்காகத்தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete