Sunday, May 20, 2018

அவன் இறந்துவிட்டான்

நாளைய (21 மே 2018) நற்செய்தி (மாற்கு 9:14-29)

அவன் இறந்துவிட்டான்

நாளை மீண்டும் ஆண்டின் பொதுக்காலத்தை தொடங்குகிறோம். தவக்காலம் மற்றும் பாஸ்கா காலத்தில் நாம் பெற்ற அருள்வரங்களை மெதுமெதுவாக அசைபோடும் காலம் பொதுக்காலம்.

மாற்கு நற்செய்தியாளர் நம்மோடு இந்தப் பயணத்தில் உடன்வருகின்றார்.

நாளைய நற்செய்தியில் இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வை வாசிக்கின்றோம். திருத்தூதர்கள் விரட்ட முடியாத தீய ஆவியை இயேசு விரட்டுகின்றார்.

இந்த நிகழ்வு ஒரு நம்பிக்கைப் பயணமாக இருக்கிறது. எப்படி?

தீய ஆவி ஒரு சிறுவனைப் பிடித்துக்கொள்கிறது. பாவம்! இந்தப் பேய்க்கு வயது வித்தியாசம் எல்லாம் தெரியாது போல! அந்தச் சிறுவனுக்கு வலிப்பு உண்டாக்குவதோடல்லாமல், தீயிலும், நெருப்பிலும் தள்ளிவிடவும் முயற்சி செய்கிறது. இந்த சிறுவனின் அப்பா அடுத்த கதைமாந்தர். தன் மகனது நோயை எப்படியாவது யாராவது குணமாக்கிவிட வேண்டும் என்று ஒரு தாய்போல காத்திருக்கின்றார். அந்த நாளும் வருகிறது. சீடர்களிடம் கொண்டுவருகின்றார். அவர்களால் ஓட்ட முடியவில்லை.

நம்பிக்கையில் எழும் முதல் தயக்கம் இது. அதாவது, ஒரு படி சறுக்குகிறது. 'சரி போதும்' என ஓய்ந்திருக்கலாம் இவர். 'இன்னொரு முறை முயற்சிப்போம்' என இரண்டாம் முறை முயற்சிக்கிறார்.

'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்க உதவி செய்யும்' என்று இயேசுவிடம் கேட்கின்றார் அப்பா.

'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார் இயேசு.

'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என தாள்பணிகின்றார் அப்பா.

பேயை ஓட்டியாயிற்று. எழுந்து நிற்க வேண்டிய சிறுவன் விழுந்து கிடக்கிறான்.

'அவன் இறந்துவிட்டான்' என்கிறது கூட்டம்.

அதாவது மறைமுகமாக, 'நீ தோற்றுவிட்டாய்' என்று அப்பாவை கேலி செய்கிறது கூட்டம்.

ஆனால், இயேசு அவன் கையைப் பிடித்து தூக்கிவிடுகிறார்.

நிற்க.

நம்பிக்கையில் இரண்டு சறுக்கல்கள் வரும்:

முதல் சறுக்கல், நாம் வேண்டுவது கிடைக்காதபோது.

இரண்டாவது சறுக்கல், நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்மறை எண்ண ஓட்டம்.

முதல் வகை சறுக்கலிலிருந்து எழ நாம் கைகளை மீண்டும் ஊன்றிக்கொள்ள வேண்டும்.

இரண்டாம்; வகை சறுக்கலிலிருந்து எழ நாம் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்.

என் வாழ்வில் நான் செத்துவிட்டவை என்று நம்பிக்கையில்லாமல் விட்டவற்றிற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க என்னால் முடியுமா?

'எல்லாம் முடிந்துவிட்டது' என்று நான் மற்றவர்களின் முயற்சிகளுக்கு குறுக்கே நிற்கின்றேனா?


1 comment:

  1. நாளை தொடங்கும் பொதுக்காலத்தை தவக்காலம் மற்றும் பாஸ்கா காலத்தின் போது நாம் பெற்ற வரங்களை அசைபோடும் காலம் என அழகாக ஆரம்பிக்கிறார் தந்தை.இயேசு தீய ஆவியை விரட்டும் நிகழ்வு... அடிக்கடி கேட்டதுதான்.ஆனால் தந்தை அதைக் காட்டும் கோணம் தான் சற்று வித்தியாசமானது.பேய் பிடித்த தன் மகனுக்காக இயேசுவிடம் கையேந்தி நின்ற தந்தையை மட்டுமல்ல, இயேசுவையும் சேர்த்தே கேலி செய்கிறது கூட்டம்.இந்த நேரத்தில் அந்தத் தந்தையிடம் மேலோங்கியிருந்தது " நம்பிக்கை" மட்டுமே.இப்பேர்பட்ட "நம்பிக்கை" நம் வாழ்வில் கை நழுவிப்போகையில் செய்ய வேண்டியது நம் கைகளை ஊன்றிக்கொள்வதும்,நம் காதுகளை மூடிக் கொள்வதுமே என்கிறார் தந்தை.அதைத் தொடர்ந்து வரும் கேள்விகள்..1 என் வாழ்வில் என் நம்பிக்கையின்மையால் செத்துவிட்ட விஷயங்களுக்கு நான் புத்துயிர் அளிக்க முடியுமா?2.' எல்லாம் முடிந்து விட்டது' என்று நான் மற்றவர்களின் முயற்சிகளுக்குக் குறுக்கே நிற்கிறேனா?... பதில் என்னவென்று யோசிப்போம். முதலாவது கேள்விக்கு பதிலை நிதானமாக யோசித்தாலும் கூடப் பரவாயில்லை; அந்த இரண்டாவது கேள்விக்கு " இல்லை; இல்லவே இல்லை" என நம் பதில் இருக்குமாறு ஒரு வாழ்க்கையை வாழும் வரம் கேட்போம்.பொதுக்காலத்தை ஒரு " நம்பிக்கையின்" காலமாக்க முயற்சித்துள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete