Sunday, May 6, 2018

லீதியா

நாளைய (7 மே 2018) முதல் வாசகம் (திப 16:11-15)

அலங்கரிக்கப்பட்ட அரங்கங்களிலும், தூய்மையான ஆலயங்களில் நடக்கவில்லை திருத்தூதர்களின் தூதுப்பணி.

ஆற்றங்கரைகளிலும், காற்றுத் தூசியிலும் தான் நடந்தேறியது.

பிலிப்பி நகருக்கு வெளியே இருந்த ஆற்றங்கரை ஒன்றில் பவுல் போதிக்கும் நிகழ்வை நாம் திப 16:11-15ல் வாசிக்கின்றோம். ஆற்றங்கரையில் இருந்த பெண்கள் கூட்டம் அவரின் போதனைக்குச் செவிகொடுக்கிறது. துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள், குளித்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் குழந்தைகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர்கள், ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்கள் வீட்டின் பெரிய பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், குளிக்கவா-வேண்டமா என ஆற்றையும், கரையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என எல்லாரும் பவுலின் குரலுக்குச் செவிகொடுத்திருப்பார்கள்.

இவர்களில் 'லீதியா' என்ற பெண்ணைப் பற்றி எழுதுகின்றார் லூக்கா.

இவர் ஒரு வியாபாரி. 'செந்நிற ஆடைகளை விற்றுக்கொண்டிருந்தவர்' என லூக்கா எழுதுகிறார். நம்ம ஊர் நல்லி சில்க்ஸ் உரிமையாளர் என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம். இவர் செய்த வேலையிலிருந்து, பெண்கள் அக்கால சமுதாயத்தில் பெற்றிருந்த அங்கீகாரம், மதிப்பு மற்றும் தன்மதிப்பையும் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் வைத்த கண் வாங்காமல் பவுலையே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

திறந்த உள்ளம் கொண்ட இவரை கடவுள் மனம் மாற்றுகிறார். வீட்டோடு திருமுழுக்கு பெறுகின்றார். திருமுழுக்கு அவர் இருந்த ஆற்றங்கரையில்தான் நடந்திருக்க வேண்டும். மெழுகுதிரி, ஞானப்பெற்றோர், கிறிஸ்மா, ஆயத்த எண்ணெய், வெள்ளை ஆடை, ஃபோட்டோகிராஃபர் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் நடந்தேறுகிறது லீதியாவின் திருமுழுக்கு.

ஆக, ஆற்றங்கரையும் கூட இறைவனை அறிந்து கொள்ளும், அறிவிக்கும் தளமாக இருக்கிறது.

இறைவனின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட லீதியா, திருத்தூதர்களைத் தன் இல்லத்தில் ஏற்றுக்கொள்கின்றார்.

'...அவற்றுக்குச் சொல்லுமில்லை. பேச்சுமில்லை. அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது.'
(திபா 19:3-4)

2 comments:

  1. அலங்கரிக்கப்பட்ட மேடைகளிலும்,தூய்மையான ஆலயங்களிலும் நடக்கவில்லை திருத்தூதர் பணி.மாறாக ஆற்றங்கரைகளிலும்,காற்றுத்தூசியிலும் தான் நடந்தேறியது என்று அழகாகத்தன் பதிவை ஆரம்பிக்கிறார் தந்தை.திறந்த உள்ளம் கொண்ட லிடியாவை மனம் மாற்றுகிறார் இறைவன்; இறைவனைத்தன் உள்ளத்திலும்,திருத்தூதரைத்தன இல்லத்திலும் ஏற்றுக்கொள்கிறார் லிடியா.சாதாரண விஷயங்களையும் தன் எழுத்தின் வழியே அசாதாரணமாக்கும் தந்தை பாராட்டிற்குரியவர்.தந்தையின் 19ம் திருப்பாடலின் அந்த இறுதி வரிகள்...
    " அவற்றிற்கு சொல்லுமில்லை; செயலுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.
    ஆயினும் அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது.
    அவை கூறும் செய்தி உலகின் கடை எல்லை வரை எட்டுகிறது."
    இறைவார்த்தையின் சக்தி,மற்றும் மேன்மை குறித்த வார்த்தைகளை நினைவுறுத்தும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!!!
    " லிடியா" என்ற அழகான பெயரை இரசித்திருக்கிறேன்...அது விவிலியக் கதை மாந்தர் என்று தெரியாமல்.தந்தைக்கு ஒரு வேண்டுகோள்.இந்த லிடியா போன்ற விவிலியப் பெண்கள் குறித்து இன்றும் விஷயங்களைப் பரிமாறலாமே! நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Yesu good evening. Good reflection Yesu

    ReplyDelete