Friday, May 4, 2018

புதிய கதவு

நாளைய (5 மே 2018) முதல் வாசகம் (திப 16:1-10)

புதிய கதவு

கடவுள் ஒரு கதவை அடைத்தால், இரண்டு கதவுகளைத் திறந்துவிடுவார் என்ற வாக்கு பவுலின் வாழ்வில் உண்மையாகிறது.

தன்னை திருத்தூதர்களுக்கு அறிமுகம் செய்த, தன் முதல் தூதுரைப் பயணத்தில் உடனிருந்த உற்ற தோழன் பர்னபா அவரிடமிருந்து பிரிய நேரிட்டது.

அந்தப் பிரிவை, வருத்தத்தை கடவுள் உடனே ஈடுசெய்கிறார்.

தன் அன்பு பிள்ளையான திமொத்தேயு பவுலுக்கு அறிமுகம் ஆகிறார் (காண். திப 16:1-5)

பவுல் திமொத்தேயுவின் மேல் கொண்டிருந்து அளவுகடந்த அன்பிற்கு அவர் அவருக்கு எழுதிய கடிதங்களே சான்று.
திமொத்தேயுவின் தாய் யூதர். தந்தை கிரேக்கர்.

இரண்டு பின்புலங்களில் இருந்து வருபவர்கள் வாழ்வில் பரந்த மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இரண்டு உலகங்களுக்கு, இரண்டு மதங்களுக்கு, இரண்டு சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனவர்கள். ஒன்றைவிட இரண்டு பெரிதுதானே.

தகுந்த நேரத்தில் தகுந்த நபரை அறிமுகம் செய்வது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று.

பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத் தொடக்கத்தில் பவுல்-சீலா-திமொத்தேயு என மூவர் இருந்தாலும், இவர்களோடு லூக்காவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் உள்ள கதையாடல்களில், 'நாங்கள் சென்றோம்,' 'நாங்கள் தங்கினோம்' என்று தன்மை பன்மையில் எழுதுகின்றார்.

திருத்தூதர்கள் ஆசியா, பித்தினியா போன்ற பகுதிகளுக்குச் செல்ல விரும்புகின்றனர் (காண். திப 16:6-10). ஆனால், இயேசுவின் ஆவியார் அவர்களைத் தடுக்கின்றார். ஆக, அவர்கள் துரோவா செல்கின்றனர். மேலும், துரோவாவில் ஒரு காட்சி கண்டு, மாசிதோனியாவுக்குச் செல்கின்றனர்.

இங்கே இரண்டு விடயங்கள் கவனிக்க வேண்டியவை:

அ. தூய ஆவியார், 'அங்கே போகக்கூடாது!' என்று தடுக்கின்றார்
ஆ. கனவில் 'இங்கே வாங்க!' என்று அழைக்கப்படுகிறார்கள்

அதாவது, முழுக்க முழுக்க தூய ஆவியானவரின் உடனிருப்பையும், தங்களுக்கு வரும் கனவுகள் மற்றும் காட்சிகளையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர்.

உள்ளுணர்வு (intuition) கொண்ட ஒருவரால்தான் இந்த இரண்டையும் உணர முடியும்.

காலங்காலமாக கனவுகள் நமக்கு மறைபொருளாகவே இருக்கின்றன.

என்ன நடந்தாலும், 'கடவுளின் தீர்மானம் என்ன?' என்பதை உணர்ந்து அதன்படி நடக்கின்றனர் திருத்தூதர்கள்.

1 comment:

  1. பர்னபாவின் இழப்பை ஈடுசெய்ய அன்புக்குரிய திமோத்தேயுவை பவுலுக்கு கொடையாகத் தருகிறார் இறைவன் என்பதைக்குறிக்கும் " கடவுள் ஒரு கதவை அடைந்தால் இரண்டு கதவுகளைத்திறந்து விடுகிறார் எனும் தந்தையின் எக்ஸ்ப்ரஷன் அழகு. அதைப்போலவே " ஒன்றை விட இரண்டு பெரிதுதானே!", "தகுந்த நேரத்தில் தகுந்த நபரை அறிமுகம் செய்வது இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று", " உள்ளுணர்வு கொண்ட ஒருவரால்தான் பரிசுத்த ஆவியின் உடனிருப்பையும், தங்களுக்கு வரும்,கனவுகள் மற்றும் காட்சிகளை அறிந்தவர்களாக இருக்க முடியும்" போன்ற வரிகளில் தந்தையின் நேர்மறை சிந்தனைகளும், அதை அவர் வெளிப்படுத்தும் அழகும் இரசிக்கும்படி இருக்கின்றன.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete