Monday, March 9, 2015

நீயும் உன் உடன் பணியாளருக்கு!

'நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல
நீயும் உன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?'

(காண்க மத்தேயு 18:23-35)

தனக்கு எதிராகக் குற்றம் செய்யும் சகோதரர் ஒருவரை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? - ஏழு முறையா, எழுபது முறையா? - எனக்கேட்கும் தூய பேதுருவுக்குப் பதில் மொழியாக இயேசு கூறும் உருவகமே நாளைய நற்செய்தி வாசகம்.

இந்த உருவகம் விண்ணரசைப் பற்றிய உருவகம் என்று தொடங்கினாலும், மன்னிப்பு என்ற கருத்தோடுதான் நிறைவடைகிறது.

இந்த உருவகத்தில் வருபவர்கள் மூன்று பேர்:
1. அரசன்
2. பணியாளர் ஒன்று (10000 தாலந்து கடன்பட்டவர்)
3. பணியாளர் இரண்டு (100 தெனாரியம் கடன்பட்டவர்)

அரசனுக்குக் கீழ்தான் இந்த இரண்டு பணியாளர்களும் இருக்கின்றனர். இரண்டாம் பணியாளர் முதல் பணியாளரின் உடன்பணியாளர்.

தாலந்து என்பதுதான் உச்சகட்ட கரன்சி (நம்;ம ஊர் ஆயிரம் ரூபாய்த்தாள் போல!). ஒரு தாலந்து என்பது 20.4 கிலோ வெள்ளிக்குச் சமம். அல்லது ஒரு தாலந்து என்பது 6000 திராக்மாக்கள். அல்லது ஒரு தாலந்து என்பது ஒரு சாதாரண கூலிக்காரரின் 15 வருட சம்பளத்தின் மொத்தம். ஒரு தாலந்தே இவ்வளவு என்றால் பத்தாயிரம் தாலந்து எவ்வளவு இருக்கும் என நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அந்தக் காலத்தில் இதற்கு மேல் எண்ணே இல்லை. இதுதான் எண்ணின் உச்சம். ஆக, முதல் பணியாளர் பட்ட கடன் மிக, மிக, மிகப் பெரியது. கணக்கில் அடங்காதது. பணியாளரால் திரும்ப அடைக்க முடியாத அளவிற்கு பெரியது. இந்த நிலையில் தன் தலைவனாம் அரசனிடம மன்னிப்பு கேட்க, அரசனும் மன்னித்து விடுகின்றார். இந்த மன்னிப்பால் அரசனுக்கு எவ்வளவு பெரிய வருவாய் இழப்பு இருந்திருக்கும்? (இந்தப் பணத்தை வைத்து அந்தக் காலத்தில் சிரியா, பொனிசியா, யூதேயா மற்றும் சமாரியா என்ற நான்கு நாடுகள் ஓர் ஆண்டிற்கு ரோமிற்கு வரியாக இதைக் கட்டியிருக்க முடியும்!)

தெனாரியம் ஒன்பது ஒருநாள் கூலி. 100 தெனாரியம் என்பது 100 நாள் கூலி. உடன்பணியாளனின் கடன் முதல் பணியளானின் கடனில் ஆறுலட்சத்தில் ஒரு பகுதிதான் (1/600,000). இரண்டாம் பணியாளனும் இரக்கம் வேண்டி நிற்கிறான். ஆனால் இரக்கம் காட்ட மறுக்கிறான் முதல் பணியாளன்.

உருவகத்தின் நோக்கம் யார் அதிகம் மன்னித்தார் அல்லது யார் குறைவாக மன்னித்தார் என்பதல்ல.

வேறு என்ன?

நாம் இரக்கத்தை கடவுளிடமிருந்து பெறுகிறோம் என்றால் அதே இரக்கத்தை நமக்குக் கீழிருப்பவர்கள் மேலும் காட்ட வேண்டும்.

ஆக, இரக்கம் என்பது ஒருவழிப் பாதை அல்ல. இருவழிப்பாதை. ஒன்றை நாம் பெறும்போது, மற்றவருக்கு அதைக் கொடுக்க வேண்டும்.

'கடன் கொடுக்காதே! கடன் வாங்காதே!
கடன் கொடுத்தால் கடனும் போய்விடும்! நண்பனும் போய்விடுவான்!'
என்பார் ஷேக்ஸ்பியர்.

'நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்.
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்!'
(உரோமையர் 13:8)


5 comments:

  1. " இரக்கம்", "இரங்குவது"... இறைவனுக்கே உரித்தான குணம்.நம்மில் பலர் இன்று வாழ்க்கையின் முகடில் நின்று கொண்டு கீழே குனிந்து பார்க்கையில் நாமிருக்கும் உயரத்திற்கு 'ஏணி'யாய் இருந்து நம்மை ஏற்றிவிட்டவர்களையும்,இவ்வுயரத்தை நாம் அடைய ' உதவும் கரங்களாய்' இருந்தவர்களையும் நினைத்துப் பார்ப்பதுடன் மட்டுமல்ல; வாழ்வின் விளிம்பிலிருக்கும் நம் சகோதர்ருக்கு நாமும் அதே ஏணிப்படிகளாய்,அதே உதவும் கரங்களாய் இருப்போம். நாளை நம் இறைவன் நம்மைப்பார்த்து " உங்களில் சிறிய சகோதர்ருக்கு நீங்கள் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்" என்று சொல்ல நம்மைத் தகுதியுள்ளோராய் ஆக்குவோம்."இரக்கம் காட்டுவோர் பாக்கியவான்கள்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" தவக்காலத்துக்கேற்ற வலைப்பதிவு....

    ReplyDelete
  2. Anonymous3/10/2015

    The Lord is so gracious to me. Let me share with everyone

    ReplyDelete
  3. Anonymous3/10/2015

    School annual day was so grand. The purpose of calling M P was to get the government assistance for the primary school building. We arranged the programme in such a way she has promised to help us

    ReplyDelete
  4. Anonymous3/10/2015

    School annual day was so grand. The purpose of calling M P was to get the government assistance for the primary school building. We arranged the programme in such a way she has promised to help us

    ReplyDelete
  5. Anonymous3/10/2015

    The Lord is so gracious to me. Let me share with everyone

    ReplyDelete