Monday, March 2, 2015

அதுக்கும் மேல!

'உங்கள் பாவங்கள் செந்தூரம் போல் இருந்தாலும், உறைந்த பனி போல வெண்மையாகும்.
இரத்த நிறமாய் அவை சிவந்திருந்தாலும், பஞ்சைப் போல அவை வெண்மையாகும்!'
(இசையாஸ் 1:18)

நாளைய முதல் வாசகத்தை பழைய மொழிபெயர்ப்பில் வாசித்தால் மிக ஒரிஜினலாக இருப்பதால் அதையே நாம் தெரிந்து கொள்வோம்.

புதிய மொழிபெயர்ப்பில் 'செந்தூரத்தை' 'கடுஞ்சிவப்பு' என மாற்றியதோடு மட்டுமல்லாம், எபிரேயத்தில் இரண்டு வாக்கியங்களாக இருப்பதை, நான்கு வாக்கியங்களாகப் பிரித்தும் விட்டனர்.

இந்த இறைவாக்கில் நான்கு உருவகங்களும், ஒரு 'பேரலலிசமும்' (parallelism) உள்ளது.

முதலில் பேரலலிசத்தைப் பார்ப்போம்.

எபிரேய இலக்கியத்தில் பிரபலமாக உள்ள ஒரு எழுத்துநடைக்குப் பெயர் 'பேரலலிசம்'. நம் தமிழில் இருக்கும் 'எடுத்துக்காட்டு அணி' போன்றது. எபிரேய செய்யுள், 'ஐ' பட விக்ரம் போல, 'அதுக்கும் மேல' போய், ஒரு வாக்கியத்திற்கும், அடுத்த வாக்கியத்திற்கும் தொடர்புபடுத்தி எழுதுகிறது. இந்த 'பேரலலிசத்தில்' பல வகை உண்டு. இன்று நாம் வாசித்த இந்த இறைவாக்கில் உள்ள பேரலலிசத்திற்குப் பெயர் 'சினனிமஸ் பேரலலிசம்!' (synonymous parallelism). முதல் வாக்கியத்தில் உள்ள சொற்கள் இரண்டாம் வாக்கியத்திலும் மற்றொரு சொற்களாக வரும்.

அ. உங்கள் பாவங்கள் // அவை
ஆ. செந்தூரம் போல // இரத்தநிறமாய் சிவந்திருந்தாலும்
இ. உறைந்த பனி போல // பஞ்சைப் போல
ஈ. வெண்மையாகும் // வெண்மையாகும்

ஆக, முதல் வாக்கியத்தில் சொல்லப்பட்டதுதான் இரண்டாம் வாக்கியத்திலும் திரும்பவும் சொல்லப்பட்டுள்ளது.

மற்றொரு எடுத்துக்காட்டு;: திபா 103:3

'அவர் -
உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்.
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.'

இதில் குற்றங்கள், நோய்கள் எனவும், மன்னிப்பது, குணமாக்குவது என்றும் இரண்டாம் வாக்கியத்தில் திரும்பவும் சொல்லப்படுகிறது.

இந்த பேரலலிசம் பயன்பாடு எதற்காகவென்றால், அர்த்தத்தை ஆழமாக வலியுறுத்துவதற்காக.

இப்போது உருவகங்களைப் பார்ப்போம்.

செந்தூரம், உறைந்த பனி, இரத்தம், பஞ்சு - இந்த நான்கும் இஸ்ரயேல் மக்களின் பலிகளோடு தொடர்புடையவை. அதாவது, எருசலேம் ஆலயம் கட்டப்படுவதற்கு முன் மக்கள் 'தொழுகை மேடுகள்' என்று சொல்லப்படும் இடங்களில் மட்டுமே வழிபாடுகள் செய்து வந்தனர். நம்ம ஊர்களில் பார்த்திருப்போம். மூன்று பனைமரங்கள் சேர்ந்திருந்தாலோ, அல்லது பனைமரம் தனித்திருந்தாலோ, அதில் சுலகு, தொட்டில், கண்ணாடி, துணி என கட்டி 'சிறுதெய்வ' வழிபாடு தொடங்கிவிடும். இந்த சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதும் எனக்கு ஆசை. ஏன்னா, இந்த சிறுதெய்வ வழிபாட்டில் கேனன் லா, வழிபாட்டு முறை, குருத்துவம், வாக்குறுதி என எதுவும் இருக்காது. யாரும் வழிபாட்டை தலைமையேற்று நடத்தலாம். யார்மேலும் சாமி இறங்க வாய்ப்பிருக்கிறது. இஸ்ரயேலின் வழிபாடு இப்படி 'சிறுதெய்வ' வழிபாடாக இருந்தபோது எசாயா இறைவாக்கினர் உரைத்த இறைவாக்கே இது.
செந்தூரத்தைக் கொண்டும், காளைகளின் இரத்தத்தைக் கொண்டும் தான் பாவம் போக்கும் பலிகள் நிறைவேற்றப்பட்டன. எசாயா இறைவாக்கினர் அவற்றையே உருவகங்களாக எடுத்துக் கையாளுகின்றார். பாவத்தின் நிறங்கள் சிகப்பாய் இருந்தாலும், மன்னிப்பின் நிறம் வெள்ளை. எசாயா காலத்தில் நிறங்கள் பற்றிய அறிவின் வளர்ச்சி இருந்திருக்க வாய்ப்பில்லை. 'நிறமற்ற' எல்லாவும் 'வெள்ளை' எனவே கருதப்பட்டன அந்தக்காலத்தில். ஆக, நிறமான ஒன்று நிறமற்றுப் போகும் என்பதுதான் எசாயாவின் இறைவாக்கு.

கடவுளின் மன்னிப்பு அவ்வளவு சக்தி வாய்ந்தது.

எப்படி?

பெண்களின் நெற்றியில் குங்குமத்தைப் பார்க்கும்போதெல்லாம், குங்குமம் எப்படிச் செய்கிறார்கள் என்று நினைப்பேன். இன்று நேரம் ஒதுக்கு விக்கிபீடியாவில் வாசித்தும் விட்டேன். மஞ்சளோடு சில 'ஆல்கலைகள்' கலப்பதால் உருவாவதுதான் குங்குமம் - விக்கிபீடியாவின்படி! இதுல என்ன ஒரு ஆச்சர்யம்னா, சிகப்பாக ஆக்கப்பட்ட 'குங்குமத்தை' மீண்டும் மஞ்சளாக்கவோ அல்லது வேறு நிறமாக்கவோ முடியாது. இது ஒரு 'ஒன்வே' ப்ராசஸ். அதுபோலத்தான் இரத்தத்தின் நிறத்திற்குக் காரணம் ஹீமோகுளோபினில் உள்ள 'இரும்பு ஆக்சைடுகள்தாம்' (சரின்னு நினைக்கிறேன்!). மனித இரத்தத்தின் நிறம் இரும்பு ஆக்சைடுகளைப் பொறுத்து மிகக் கொஞ்சமாக நிறம் மாறக்கூடியது. எசாயா குறிப்பிடும் இரத்தம் பலியிடப்படும் மிருகங்களின் ரத்தம்தான். இந்த இரத்தத்தின் நிறம் மாறக்கூடியது அல்ல(!).

ஆக, மாறமுடியாத ஒன்றை மாற்றுபவர்தான் இறைவன்.

இறைவன் மன்னிக்க முடியாத அளவிற்கு நாம் பாவம் செய்ய முடியாது. ஏனெனில் நம் பாவங்களை விட அவரின் மன்னிப்பு 'அதுக்கும் மேல!'

எசாயா சொல்றது ரொம்ப சிம்பிள்:

'பாவம் போகணும்னு அங்கேயும், இங்கேயும் ஓடாதீங்க. ஆண்டவரிடம் வாங்க. அவர் உங்கள் பாவங்களை மன்னிக்கிறார்!'



2 comments:

  1. இந்தத் தவக்காலத்துக்கு ஏற்றதொரு சிந்தனை. வழிபாடுகளில் அடிக்கடி நம் பாவப்பட்ட வாழ்க்கையையும்,அதை விட்டு வெளியே வருவது பற்றியும் அடிக்கடி ஞாபகப்படுத்தப்படுகிறோம். ஏசாயாவின் வார்த்தைகள் எந்த ஒரு பாவியும்'நிரந்தரப்பாவியில்லை' என்பதைக் கூறுகின்றன நாம் அவைகளுக்காக
    வருந்தும் பட்சத்தில்." பாவம் போகணும்னு அங்கேயும்,இங்கேயும் ஓடாதீங்க;
    ஆண்டவரிடம் வாங்க; அவர் உங்கள் பாவங்களை மன்னிக்கிறார்" நம், சுமையை இறக்கி வைக்க ஒரு 'சுமைதாங்கி' நமக்கிருப்பது எத்துணை ஆறுதலான விஷயம்!!! அழகான, ஆறுதல்தரும் பதிவு.

    ReplyDelete
  2. Anonymous3/03/2015

    नाइस विचारों को. धन्यवाद.

    ReplyDelete