Sunday, October 8, 2023

திருச்சட்டம் கடந்த போதனை


இன்றைய இறைமொழி 

திங்கள், 9 அக்டோபர் 2023

பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் திங்கள்

யோனா 1:1-17. லூக்கா 10:25-37

திருச்சட்டம் கடந்த போதனை

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்கிறார். திருச்சட்டத்தின் இருபெரும் கூறுகளான இறையன்பு மற்றும் பிறரன்பை முன்மொழிகிறார் இயேசு. இரண்டாம் பிரிவில், பிறரன்புக்கான எடுத்துக்காட்டாக நல்ல சமாரியனை முன்மொழிகிறார். இறுதியில், 'நீரும் போய் அவ்வாறே செய்யும்!' என்று சொல்லித் திருச்சட்ட அறிஞரை அனுப்புகிறார் இயேசு. திருச்சட்டத்தையும் கடந்த போதனை ஒன்றை சமாரியன் தருகிறார். 

குற்றுயிராகக் கிடந்த நபருக்கு அந்நியராகத் தெரிந்த மூவரில் - குரு, லேவியர், சமாரியர் – சமாரியர் மட்டுமே அடுத்திருப்பவராக மாறுகிறார். அந்நியராக இருப்பதிலிருந்து அடுத்திருப்பவராக மாறுவது என்பது ஓர் இயக்கம். அந்த இயக்கம் வலி மிகுந்தது. தன் பயணத்தை நிறுத்தி, தன் திட்டங்களை மாற்றி, தன் நலனை ஒதுக்கி வைத்து மற்றவர் நலனை முன்வைக்கிற ஒருவர்;தான் அடுத்திருப்பவராக மாற முடியும். 

பரிவு அல்லது இரக்கம் என்பது நாம் முன்பின் அறியாதவர்களுக்குக் காட்டப்பட வேண்டும். நம்மைச் சாராத ஒருவர்மேல் நமக்குப் பரிவு வருகிறது என்றால் நாம் அனைவரையும் இறைவனில் அன்பு செய்யக்கூடிய நபராகக் காணத்தொடங்குகிறோம் என்பது பொருள்.

'நீரும் போய் அவ்வாறே செய்யும்!' என்கிறார் இயேசு. திருச்சட்டத்தை அறிதலில் அல்ல, மாறாக, அதைக் கடைப்பிடிப்பதில்தான் நிலைவாழ்வு அடங்கியுள்ளது என்பதை இங்கே உணர்த்துகிறார் இயேசு. அறிவார்ந்த நம் எண்ணங்கள் அல்ல, மாறாக, நம் செயல்பாடுகளே நாம் யார் என்பதை மற்றவருக்கு எடுத்துரைக்கின்றன.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் யோனாவின் அழைப்பு நிகழ்வையும் அவர் தப்பித்து ஓடுவதையும் காண்கிறோம். ஆண்டவராகிய கடவுள் யோனாவை அழைத்து, நினிவே நோக்கி அனுப்புகிறார். அசீரியா நாட்டின் தலைநகரம் நினிவே. அசீரியர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்மீது கிமு 722-இல் படையெடுத்து அவர்களை அடிமைப்படுத்தியவர்கள். அசீரியர்கள் மற்றும் இஸ்ரயேல் மக்களின் திருமணக் கலப்பால் வந்த இனமே சமாரியர்கள். இஸ்ரயேல் மக்கள் அசீரியர்கள்மேல் கொண்டிருந்த இன வெறுப்பை யோனா தப்பி ஓடுதல் நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

யோனா நினிவேக்கு எதிர்திசையில் பயணம் செய்கிறார். தன் இருத்தல் மறந்து தூங்குகிறார். தன்னைக் கடலுக்குள் மக்கள் தள்ளிவிட்டு தான் இறந்துவிடவும் துணிகிறார். இம்மூன்று நிலைகளில் அவருடைய தப்பி ஓடுதல் அல்லது அழைத்தல் நிராகரிப்பைக் காண்கிறோம்.

இவருக்கு எதிர்மாறாக, கப்பலில் இருந்த நபர்கள் ஆண்டவராகிய கடவுளைக் கண்டுகொள்பவர்களாகவும், அவர்மேல் அச்சம் கொண்டு அவருக்குப் பலி செலுத்துகிற நம்பிக்கையாளர்களாகத் திகழ்கிறார்கள். 

யோனா கடவுளிடமிருந்து தப்பி ஓட முயன்றாலும், ஆண்டவராகிய கடவுள் தான் ஏற்பாடு செய்திருந்தபடி ஒரு பெரிய மீன் அவரை விழுங்குமாறு செய்கிறார். 

அசீரியர்களுக்கு அந்நியராகவே இருக்க விரும்பினார் யோனா.

எரிக்கோவுக்குப் பயணம் செய்த நல்ல சமாரியனோ முன்பின் தெரியாத அந்நியருக்கும் அடுத்தவராக மாறுகிறார். 

யோனா கண்டுகொள்ளாமல் செயலாற்றுகிறார்.

சமாரியன் பொறுப்புணர்வுடன் செயலாற்றுகிறார்.


No comments:

Post a Comment