Tuesday, October 3, 2023

எதிர்வினை குறைத்தல்!

இன்றைய இறைமொழி 

செவ்வாய், 3 அக்டோபர் 2023

பொதுக்காலம் 26-ஆம் வாரத்தின் செவ்வாய்

செக்கரியா 8:20-23. லூக்கா 9:51-56

எதிர்வினை குறைத்தல்!

லூக்கா நற்செய்தியின் இரண்டாம் பகுதி ஒரு நீண்ட பயணம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கலிலேயாவில் தொடங்குகிற இயேசுவின் பயணம் சமாரியா, யூதேயா எனக் கடந்து விண்ணகத்தில் நிறைவுபெறுகிறது. பயணத்தின் இலக்கு விண்ணகம் என்பதை இயேசு அறிந்தவராக இருந்தார். ஆனால், அவருடைய இலக்கு எருசலேம் (யூதேயா) என்று நினைக்கிற சமாரியக் கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களின் நிராகரிப்பைக் காண்கிற யாக்கோபும் யோவானும் அவர்கள்மேல் கோபம் கொண்டு அவர்களை எரித்துவிடத் துணிகிறார்கள். 'வானிலிருந்து நெருப்பு பொழியச் செய்யவா?' என்னும் சொற்கள் அவர்கள் தங்களையே எலியா போல நினைத்துக்கொண்டார்கள் என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் முதல் ஏற்பாட்டில், அகசியா அனுப்பிய தூதரும் அவருடன் சென்ற ஐம்பதின்மர்மேலும் (இரு முறை, இரு குழுவினர்) வானிலிருந்து நெருப்பு பொழியச் செய்து சுட்டெரிக்கிறார் எலியா (காண். 2 அர 1). அங்கே, அவர்களுடைய நோக்கம் இறைவாக்கினரை நோக்கியதாக அல்லாமல், குறிசொல்பவர்களை நோக்கியதாக இருந்ததால் அவ்வாறு நிகழ்கிறது. சீடர்களின் அவசரத்தையும் கோபத்தையும் இயேசு கடிந்துகொள்வதோடு, தம் பயணத்தின் பாதையையும் மாற்றிக்கொள்கிறார்.

இயேசு இங்கே நேர்முகமாகச் செயலாற்றுகிறார், தெளிவான நோக்கம் கொண்டிருக்கிறார். அவருடைய நோக்கம் விண்ணகம் நோக்கியதாக இருக்கிறது. சமாரியக் கிராமத்து மக்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஏனெனில், அவர்களுடைய பார்வை குறுகியதாக இருந்தது. யாக்கோபும் யோவானும் கோபம் கொண்டு எதிர்வினை ஆற்றுகிறார்கள். அவர்களுடைய பார்வையும் குறுகியதாக இருக்கிறது. மேலும், இயேசு நெருப்பைக் கொணர்கிறவர் அல்லர், மாறாக, இரக்கம் கொணர்கிறவர் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.

முதல் வாசகத்தில், அழகான சொல்லோவியம் ஒன்றை வாசிக்கிறோம். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் எருசலேம் திரும்புகிறார்கள். இப்போது ஆண்டவர்தாமே எருசலேமின் நெருப்பின் மதிலாகச் சூழ்ந்து நின்று நகரையும் மக்களையும் காப்பாற்றுகிறார். சுற்றுச்சுவர் இல்லாத எருசலேம் அனைவரையும் ஈர்க்கும் தளமாக இருக்கிறது. 

மற்ற இனத்தார் ஒருவர் மற்றவரை நோக்கி, 'நாம் ஆண்டவருடைய அருளை மன்றாடச் செல்வோம்' என மொழிகிறார்கள். இஸ்ரயேல் மக்கள் ஒவ்வொருவருடைய மேலாடையைப் பற்றிக்கொள்கிற பத்துப்பேர் 'கடவுள் உங்களோடு இருக்கிறார்' என நாங்கள் கேள்விப்பட்டதால் நாங்களும் உங்களோடு இருக்கிறோம் என அவர்களோடு வருகிறார்கள். இந்த நிகழ்வைக் கற்பனை செய்து பாருங்களேன்! பத்துப் பேர் நம்முடைய ஆடைகளைப் பிடித்துக்கொண்டு, 'நாங்களும் உன்னோடு வருகிறோம். ஏனெனில் கடவுள் உன்னோடு இருக்கிறார்!' என்று சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்!

மற்றவர்கள் கடவுளை நோக்கி வருவதோடல்லாமல், நாம் மற்றவர்களுக்குக் கடவுளின் உடனிருப்பைக் காட்டுகிறோம் என்பது இன்னும் நமக்கு மகிழ்ச்சி தருகிறது.

கடவுளின் உடனிருப்பு அனைவரும் நெருங்கி வரச் செய்கிறது. எல்லா எதிர்வினைகளும் குறைந்து நேர்முகமான செயல்பாடுகள் மலர்கின்றன. சில நேரங்களில் இயேசுவின் சீடர்கள்போல கடவுளை அருகில் வைத்துக்கொண்டே நாம் எதிர்வினை ஆற்றுகிறோம்.

இன்று நம் வாழ்வில், நாம் எதிர்வினைகள் குறைத்து நேர்முகமான செயல்பாடுகளை அதிகரித்துக்கொள்தல் நலம். பொறுமை காத்து, நிகழ்வுகளை அலசி ஆராய்ந்து பதிலிறுப்பு செய்தால் எதிர்வினைகள் குறையும்.



No comments:

Post a Comment