Thursday, October 12, 2023

தீமையை நன்மையால் வெல்க!

இன்றைய இறைமொழி 

வெள்ளி, 13 அக்டோபர் 2023

பொதுக்காலம் 27-ஆம் வாரத்தின் வெள்ளி

யோவேல் 1:13-15; 2:1-2. லூக்கா 11:15-26

தீமையை நன்மையால் வெல்க!

'தீமையை வெல்பவரும் தீமையோடு தொடர்புடையவர் என்ற எண்ணம் மாற்றி, தீமையை நன்மையால் வெல்லக் கூடிய திடம் பெறுதல்'

போதிக்கிற, நலம் தருகிற, பேய்களை ஓட்டுகிற பணியைச் செய்துவருகிறார் இயேசு. அவருடைய பணிகள் பற்றிய கண்ணோட்டங்கள் வௌ;வேறாக இருக்கின்றன. சிலர் அவரை இறைமகன் என்றும் மெசியா என்றும் ஏற்றுக்கொள்கின்றனர். பலர் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுடன், அவரைப் பற்றி இடறல்படுகிறார்கள் அல்லது அவரை எதிர்க்கிறார்கள். இயேசு சந்தித்த எதிர்ப்பையும் தயக்கத்தையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம்.

'இவர் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்' என்று இயேசுவின்மேல் குற்றம் சுமத்தி அவரை எதிர்க்கிறார்கள் சிலர். பெயல்செபூல் என்னும் சொல் முந்தைய மொழிபெயர்ப்பில் 'பெயல்செபூப்' என்று உள்ளது. 'பெயல் செபூப்' மற்றும் 'பெயல்செபூல்' என்னும் சொற்கள் இஸ்ரயேலின் சமகாலத்துக் கடவுளர்களான 'பாகால்-செபூப்' மற்றும் 'பாகால்-செபூல்' என்னும் பெயர்களிலிருந்து வந்திருக்கலாம். பெலிஸ்தியக் கடவுளான எக்ரோன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டார் (காண். 2 அர 1:2-16). புறவினத்துக் கடவுள் சாத்தானாகக் கருதப்பட்டு, காலப்போக்கில் அவரே சாத்தானின் தலைவராக வரையறுக்கப்படுகிறார். இன்று நம் ஊரிலும் பிற கடவுளர்களை பேய்க் கடவுள்கள் என்று சொல்லும் அறியாமை நிலவுகிறது. இன்னும் சிலர் இயேசுவிடமிருந்து அறிகுறி அல்லது அடையாளம் கேட்கிறார்கள். இவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.

தம்மேல் வந்த எதிர்ப்புக்கு உருவகம் வழியாகப் பதில் கூறுகிறார் இயேசு. 'தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்' என்கிறார். அதாவது, இறையாட்சியைப் போதிக்க வந்த இயேசுவே இறையாட்சியிலிருந்து பிளவுபட்டவராக தீய ஆவியால் வழிநடத்தப்பட்டால் இறையாட்சி நிலைக்காது. ஆக, தாம் செய்வது கடவுளின் கரத்தால் என்றும், தம் செயல்கள் வழியாக இறையாட்சி இங்கே வருகிறது என்றும் கூறுகிறார்.

மேலும், வலியவன் ஒருவனைக் கட்டினாலன்றி, அவனுடைய வீட்டுப் பொருள்களைக் கொள்ளையடிக்க இயலாது என்று சொல்வதன் வழியாக, தாம் கடவுளின் வல்லமையால் சாத்தானைக் கட்டி விட்டதாக மொழிகிறார். இவ்வாறாக, வலியவனாகிய சாத்தானை விடத் தாம் உயர்ந்தவர் என எடுத்துச் சொல்கிறார்.

'என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்' என்னும் இயேசுவின் சொற்கள் இயேசுவுடைய எண்ணத்தோடு நம் எண்ணம் இணைந்திருக்க வேண்டும் என நமக்கு நினைவூட்டுகின்றன.

தொடர்ந்து, இயேசு இன்னொரு எடுத்துக்காட்டையும் சொல்கிறார். ஒருவரிடமிருந்து வெளியேறுகிற தீய ஆவி, மீண்டும் ஏழு பொல்லாத ஆவிகளுடன் அவரிடமே திரும்பி வருகிறது. தீய ஆவி நம்மிடமிருந்து போய்விட்டது எனச் சொல்லி, தம் வீட்டைக் கூட்டிப் பெருக்கி, அழகுபடுத்தி ஓய்ந்திருக்கிறார். ஓய்ந்திருந்த அந்த நேரத்தில் தீய ஆவி அவரை மீண்டும் வெற்றிகொள்கிறது. ஆக, தீமைக்கு எதிரான போராட்டம் ஒரே நாளில் முடியக் கூடியது அல்ல. அது ஒவ்வொரு நாளும் நடைபெற வேண்டும். தீய ஆவியின் செயல்களைத் தவிர்த்து தூய ஆவியாரின் அல்லது இறையாட்சியின் கனிகளை நாம் கைக்கொள்ள வேண்டும்.

இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதன் வழியாக, தம் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், தீமையை நன்மையை மட்டுமே வெல்ல முடியும் எனவும் அறிவுறுத்துகிறார்.

இந்த வாசகம் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நாம் இயேசுவோடு இணைந்திருக்கிறோமா? அல்லது தீமையுடன் இணைந்திருக்கிறோமா? நம் ஆன்மிக வாழ்வில் நமக்கு எதிராக நாமே பிளவுபட்டு நின்றால் நாம் வீழ்ந்துவிடுவோம். எதைத் தெரிந்துகொள்கிறோமோ அதை மட்டுமே பற்றிக்கொள்ள வேண்டும். தீமையை விடுத்து நன்மையைப் பற்றிக்கொள்ள வேண்டும்.

(ஆ) கடவுளின் எண்ணங்களிலிருந்து நம் எண்ணங்கள் முரண்பட்டதாக இருந்தாலும், நம் செயல்கள் கூட்டிச் சேர்க்கும் செயல்களாக அல்லாமல், சிதறிப்போகும் செயல்களாக இருக்கும். இதற்கு மாறாக, பவுல், கடவுளால் அன்பு செய்யப்படுபவர்கள் வாழ்வில் தூய ஆவியார்தாமே அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துகிறார் என மொழிகிறார்.

(இ) தீமைக்கு எதிரான தொடர் போரட்டத்தை வென்றெடுக்க வேண்டும் எனில், நன்மைச் செயல்கள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும். நன்மையால்தான் தீமையை வென்றெடுக்க முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் நாளின் வருகை பற்றி முன்னுரைக்கிறார் யோவேல். ஆண்டவரின் நாளில் தீமை அழிக்கப்பட்டு, நன்மை நிலைநாட்டப்படும்.

நிற்க.

தீமை, தீமையின் தொடக்கம், தீமையின் வடிவங்கள் பற்றி விரித்துரைக்கிற 'கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி' (எண்கள். 385-421), இறந்து உயிர்த்த கிறிஸ்து இயேசு நன்மையால் தீமையை வென்றார் என மொழிகிறது.


No comments:

Post a Comment