Wednesday, November 30, 2022

நல்லது மற்றும் எளிது

இன்றைய (1 டிசம்பர் 2022) நற்செய்தி (மத் 7:21-27)

நல்லது மற்றும் எளிது

நம் வாழ்க்கை 'நல்லது அல்லது சரியானது மற்றும் எளிது' என்னும் இரு துருவங்களுக்கிடையே இழுக்கப்பட்டுக ;கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, காலையில் 6 மணிக்கு அலாரம் அடித்தவுடன் எழுவது நல்லது மற்றும் சரியானது. ஏனெனில், நாம் வேலை செய்வதற்கு நிறைய நேரம் கிடைக்கின்றது. ஆனால், அது எளிது அல்ல? எது எளிது? இன்னும் கொஞ்ச நேரம் தூங்குவது. தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பது என் விருப்பம். மதிப்பெண் பெறுவதற்கு எது சரியானது? கடின உழைப்பைச் செலுத்திப் படிப்பது. எது எளிதானது? புத்தகம் அல்லது மற்றவரைப் பார்த்து எழுதுவது.

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியுடன் இயேசுவின் மலைப்பொழிவு நிறைவுபெறுகிறது. மற்ற ரபிக்களின் போதனை நிறைவுறுவது போல இயேசுவின் மலைப்பொழிவும் 'பாறையில் அல்லது மணலில் வீடு கட்டுதல்' என்னும் வார்த்தைப் படத்துடன் நிறைவு பெறுகிறது.

ஞான நூல்களில் 'இரு வழி நடத்தை' என்னும் ஓர் இலக்கியக் கூறு உண்டு. அதன்படி, வாசகரின் முன் இரு வாழ்வியல் எதார்த்தங்களை முன்மொழிகின்ற ஆசிரியர், அவற்றில் ஒன்றைத் தேர்ந்துகொள்ளுமாறு பணிக்கிறார். இரு வழிகளில் ஒரு வழி ஞானம் சார்ந்தது, மற்றது மதிகேடு சார்ந்தது. ஞானம் வாழ்வுக்கும் மதிகேடு இறப்புக்கும் அழைத்துச் செல்கிறது வாசகர் இவற்றில் நல்ல வழியைத் தேர்ந்துகொள்ள வேண்டும். இதே ஞானக்கூறு இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

'ஆண்டவரே, ஆண்டவரே' என வாய்மொழியால் அழைத்தல் ஒரு வழி. கடவுளின் திருவுளம் நிறைவேற்றுதல் மற்ற வழி.

முந்தைய வழி எளிதானது. பிந்தைய வழி சரியானது.

இதே வாக்கியம் தொடர்ந்து உருவகமாகத் தரப்படுகின்றது. உருவகத்தில் வரிசை மாறுகிறது.

'பாறை மேல் வீடு கட்டுதல்' சரியானது. 'மணல் மேல் வீடு கட்டுதல்' எளிதானது.

எளிதானதை விடுத்துச் சரியானதைப் பற்றிக்கொள்பவரே இயேசுவின் சீடர் என்பது இப்பகுதியின் வாழ்க்கைப் பாடம்.

முதல் வாசகத்தில் (எசா 26:1-6), 'பாறை' என்பது ஆண்டவரின் உறுதி, வாக்குப்பிறழாமை, நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கவும், 'மண்' என்பது தீயோர் அடையும் நிலையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில், எளிதானதைப் பற்றிக்கொள்ள விரும்புபவர்கள் மெசியாவை நிராகரிக்கின்றனர். சரியானதைப் பற்றிக்கொள்பவர்களே அவர்களைக் கண்டுகொள்கிறார்கள்.

மரியாவை முதலில் மறைமுகமாக விலக்கிவிட நினைக்கும்போது யோசேப்பு எளிதானதைச் செய்ய விரும்புகிற நபராக அறிமுகம் செய்யப்படுகின்றார். ஆனால், சரியானது என்பது மரியாவை ஏற்றுக்கொள்வது என்பதை அவரே அறிந்துகொள்கின்றார்.

நம் வாழ்விலும் எளிதானதை விடுத்து, நல்லதையும் சரியானதையும் மட்டுமே பற்றிக்கொள்ள முயற்சி செய்தல் நலம்.


No comments:

Post a Comment