Sunday, November 27, 2022

வார்த்தையின் ஆற்றல்

நாளின் (28 நவம்பர் 2022) நல்வாக்கு

வார்த்தையின் ஆற்றல்

'வார்த்தை மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவான் 1:14) என்னும் மனுவுருவாதல் மறைபொருளை நினைவுகூரும் திருவருகைக்காலத்தில், 'கடவுளின் வார்த்தை' கொண்டிருக்கின்ற ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

நற்செய்தி வாசகத்தில் (மத் 8:5-11), நூற்றுவர் தலைவரின் பையனுக்கு நலம் தருகின்றார். 'ஐயா! நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் பையன் நலமடைவான்' என்று இயேசுவின் வார்த்தையின் ஆற்றலின்மேல் நம்பிக்கை வைத்து சரணாகதி அடைகின்றார் நூற்றுவர் தலைவர். இயேசு அவருடைய நம்பிக்கையைப் பாராட்டுவதோடு, தூரத்திலிருந்தே நலம் தருகின்றார். இயேசுவின் வார்த்தை நோயிலிருந்து நலத்திற்குப் பையனை அழைத்துச் செல்கிறது.

ஆக, இயேசுவின் வார்த்தை நலம் அல்லது புதுவாழ்வு தருகிறது.

'அகமகிழ்வோடு ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்' என நம்மை அழைக்கிறது பதிலுரைப் பாடல் (திபா 122).

தகுதியற்ற நம்மைத் தேடி வந்து மனுவுரு ஏற்றார் இறைவனின் வார்த்தை. அந்த வார்த்தை புதுவாழ்வும் நலமும் தருகிறது. அந்த வார்த்தையைத் தேடிச் செல்லும் நம் உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது.

இறைவனின் வார்த்தை ஆற்றல் கொண்டுள்ளது போல நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும் ஆற்றல் உண்டு. ஆக, வார்த்தையானவர் நம் உதடுகளில் இருந்து நாம் பேசும் வார்த்தைகளைப் புனிதப்படுத்துவாராக. நம் செயலுக்கும் வார்த்தைக்கும் உள்ள நெருக்கத்தை அதிகரிப்பாராக. நாம் ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் வார்த்தைகளைச் சொல்ல நம்மைத் தூண்டி எழுப்புவாராக!


No comments:

Post a Comment