Thursday, December 16, 2021

ஞானமே வாரும்!

கிறிஸ்து பிறப்பு நவநாள் - 1 (17 டிசம்பர் 2021)

ஞானமே வாரும்!

(கிறிஸ்து பிறப்பு நவநாள் நேற்று தொடங்குவதாகக் குறிப்பிட்டிருந்தது தவறு எனக் கண்டேன். மன்னிக்கவும்.)

இன்று கிறிஸ்து பிறப்பு நவநாளின் முதல் நாள். மேலை நாடுகளில் இந்த நவநாள்கள் ஒவ்வொன்றிலும், கிறிஸ்துவுக்கு ஒரு பெயர் சூட்டி மெழுகுதிரிகள் ஏற்றுவதுண்டு. இலத்தீனில்  ERO CRAS 'ஏரோ க்ராஸ்' என எழுதப்படும் அச்சொல்லுக்கு, 'நான் வருகிறேன்' என்பது பொருள். அவ்வரிசையில் முதல்நாளில் கிறிஸ்துவுக்கு வழங்கப்படும் பெயர், 'ஞானம்.'

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 49:1-2,8-10) யாக்கோபு தம் புதல்வர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்விலிருந்து ஒரு பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. 'என்னைச் சுற்றி நில்லுங்கள். வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழ இருப்பதை நான் அறிவிக்கப் போகிறேன்' என்று மொழிகின்ற குலமுதுவர் யாக்கோபு, 'யூதா! நீ ஒரு சிங்கக் குட்டி, என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்! ஆண் சிங்கமென, பெண் சிங்கமென அவன் கால் மடக்கிப் படுப்பான். அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? அரசுரிமை உடையவர் வரும் வரையில், மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில், யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது. அவன் மரபைவிட்டுக் கொற்றம் மறையாது!'

(இந்த நேரத்தில் நாம் ஒன்றை மனத்தில் வைக்க வேண்டும். யாக்கோபு ஆசி வழங்கும்போது யாரும் அங்கே நின்று அதைப் பதிவு செய்யவில்லை. பதிவு செய்தவர்கள் பிற்காலத்தில் தங்கள் குலத்தின் பெருமையை உயர்த்தியும், மற்றவர்களைத் தாழ்த்தியும் எழுதுவது இயல்பு. அந்த வகையில், யூதா குலம் பின்னாள்களில் அரசாண்டதால், தங்கள் அரசாட்சி பற்றி தங்கள் தந்தையே முன்னுரைத்ததாக எழுதி, தங்கள் அரசாட்சியைத் தக்கவைப்பதற்கான பாடத்தை அவர்கள் உருவாக்கியிருக்கலாம். ஏனெனில், இஸ்ரயேலின் முதல் அரசர் சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர். பென்யமின் குலத்திற்கும் யூதா குலத்திற்கும் இடையே நிறைய பகை இருந்தது. ஏனெனில், பன்னிரு குலங்களில் பத்து குலங்கள் வடக்கேயும், பென்யமின் மற்றும் யூதா குலங்கள் தெற்கேயும் குடியேறின. அந்தப் பகையின் பின்புலத்தில்தான் பென்யமின் குலம் நீதித்தலைவர்கள் மற்றும் 1 சாமுவேல் நூல்களில் தாழ்வாகப் பதிவிடப்பட்டுள்ளது.)

யாக்கோபுக்கு பிறந்த 12 குழந்தைகளில் யூதா நான்காவது நபர். இவருடைய தாய் லேயா. பல இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் சிங்கம் என்பது அதிகாரம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக இருக்கிறது. யாக்கோபு தரும் ஆசியில், (அ) சிங்கம் இரை கவர்கின்றது, (ஆ) சிங்கம் கால் மடக்கிப் படுத்திருக்கிறது. அதாவது, யூதாவின் ஆட்சியில் உணவு நிறைவாகக் கிடைக்கும் என்றும், போர்கள் இன்றி மக்கள் அமைதியுடன் இளைப்பாறுவார்கள் என்பதையும் இவ்வடையாளங்கள் குறிக்கின்றன. மேலும், 'செங்கோல்' மற்றும் 'கொற்றம்' ஆகியவை அரசாட்சியைக் குறிக்கின்றன. யூதாவின் ஆட்சி பாபிலோனிய அடிமைத்தனத்தோடு முடிவடைகிறது. அப்படி என்றால், யாக்கோபின் ஆசி பொய்யாகி விடுமா? இல்லை! நீடித்த அரசாட்சியை ஏற்படுத்தும் மெசியா வருவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. நீடித்த அரசாட்சியை ஏற்படுத்துகின்ற மெசியா இயேசு என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
 
நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1:1-17) மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்துள்ள இயேசுவின் தலைமுறை அட்டவணையைக் காண்கின்றோம். தொடக்கநூலில் பல தலைமுறை அட்டவணைகள் உள்ளன. பண்டைக்கால அரசர்களுக்கு தலைமுறை அட்டவணைகள் எழுதப்படுவது வழக்கம். 'இராஜாதி இராஜ ...' என்று நம் நாட்டில் அரசர்கள் அழைக்கப்படுவதிலும் அவர்களுடைய தலைமுறை அடங்கியுள்ளது. இவ்வரிசையில் இயேசுவுக்குத் தலைமுறை அட்டவணை எழுதத் தலைப்படுகின்றனர் மத்தேயு மற்றும் லூக்கா. மத்தேயு ஆபிரகாமில் தொடங்கி இயேசுவில் முடிக்கின்றார். தலைமுறைகளை 14 என மும்முறை பிரிக்கின்றார். லூக்கா இயேசுவில் தொடங்கி ஆதாமில் முடிக்கின்றார். இருவரும் வௌ;வேறு தரவுகளின் பின்புலத்தில் எழுதுகின்றனர். ஆகையால்தான், இயேசுவின் தாத்தா பெயர் மத்தேயுவில் யாக்கோபு என்றும், லூக்காவில் ஏலி என்றும் உள்ளது. மத்தேயுவின் எண்ணிக்கையிலும் குறைவு இருக்கிறது. மத்தேயு பெண்கள் மற்றும் புறவினத்தாரின் பெயர்களையும் உள்ளிடுகின்றார்.

14 என்ற எண் தாவீதைக் குறிக்கிறது, நிறைவைக் குறிக்கிறது, பெண்கள் மற்றும் புறவினத்தாரின் பெயர்களைக் குறிப்பதால் இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என்று மத்தேயு முன்வைக்கிறார் என்று வழக்கமாகப் பொருள்கொள்வதுண்டு.

இன்றைய முதல் வாசகம் மற்றும் நற்செய்தி வாசகத்தை இணைத்துப் பார்த்தால் மூன்று விடயங்கள் தெளிவாகின்றன: ஒன்று, முதல் வாசகம் அரசரை மையப்படுத்தியதாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்தில் சாதாரண மனிதர்களும் இடம் பெறுகின்றனர். இரண்டு, அரசர்களின் வழிநடத்துதல் அல்ல, மாறாக, கடவுளின் ஞானமே தலைமுறைகளை நகர்த்தி வருகின்றது. மூன்று, இயேசு என்னும் நபர் கடவுளின் மகன் என்றாலும், மெசியா என்றாலும், நம்மோடு நம் தலைமுறைகளோடு இணைந்து பிறப்பதால் அவர் நம்முடன் ஒருவராகின்றார். ஏதோ ஒரு வகையில் நாம் இயேசுவின் தலைமுறையோடு இணைந்திருக்கிறோம் என்ற உணர்வே நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. இந்த தலைமுறை தொடரும். ஆகையால்தான், 'கதிரவன் உள்ள வரையில் அவர் பெயர் நிலைக்கும்' என்று திருப்பாடல் ஆசிரியர் பாடுகின்றார் (திபா 72).

இயேசுவே கடவுளின் ஞானம் என்று பவுல் மற்றும் யோவான் பதிவு செய்கின்றனர். ஞானத்தால் அரசுகள் நகர்கின்றன. கடவுள் தன் ஞானத்தால் காலத்தின் நகர்வுகளை நிகழ்த்துகின்றார். அவருடைய ஞானத்தின் ஒரு துகள் நாம் எனில், அன்றாட வாழ்வில் ஞானம் பெற்றவர்களாக வாழவும் செயல்படவும் முயற்சி செய்வோம்.

'ஞானமே, வாரும்!' என்று இன்று நாம் இறைவேண்டல் செய்வோம்.

1 comment:

  1. கிறிஸ்து பிறப்பு நவநாளின் முதல் நாளில் இயேசு “ ஞானம்” எனும் பெயரால் வழங்கப்படுகிறார்.யாக்கோபின் நான்காவது மகன் யூதாவின் ஆட்சியின் பெருமை சொல்லும் முதல் வாசகம் “நீடித்த அரசாட்சியைத்தரும் மெசியா வருவார்” எனும் நம்பிக்கையின் செய்தியோடு முடிகிறது.அரசர்களின் வழிநடத்துதல் அல்ல…மாறாக கடவுளின் ஞானமே தலைமுறைகளை நகர்த்தி வருகிறது.எப்பெயரில் இறைமகன் அழைக்கப்பட்டாலும்,நம் தலைமுறைகளோடு இணைந்து பிறப்பதால் அவர் நம்மில் ஒருவராகிறார் எனும் நற்செய்தி எடுத்து வைப்பதும் நம்பிக்கையின் செய்தியே!
    அரசுகளையும்,காலத்தின் நகர்வுகளையும் நகர்த்தும் இயேசுவின் ஞானம் நம்மையும் நகர்த்த… வழிநடத்த “ ஞானமே வாரும்!” என்ற இறைவேண்டல் செய்வோம். ஏனெனில் “ கதிரவன் உள்ள வரையில் அவர் பெயரும் நிலைத்திருக்கும்” எனும் நித்தியம் அவரின் ஞானத்தை நம்மில் நிரப்பட்டும்! நவநாளின் முதல்நாள் செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete