Wednesday, March 1, 2017

பிறவிப் பயன்

கடந்த வாரம் விரகனூர் சென்றேன். விரகனூர் பக்கம் செல்லும் போதெல்லாம் நான் பயின்ற 'பேதுரு கல்லூரிக்கு' செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த நெடுநாள் ஆசை அன்றுதான் நிறைவேறியது.

அன்று மாலை.

நானும் என் நண்பரும் அங்கே சென்றோம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மணம் இருக்கும். ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு மணம் இருக்கும். அந்த மணம் இன்னும் இருக்கிறது அந்த இடத்தில்.

1998-2000 மற்றும் 2004-2005 என இரண்டு கூட்டல் ஒன்று ஆண்டுகள் அந்த வளாகத்தில் ஓடி விளையாடியிருக்கிறேன்.

2004-2005ஆம் ஆண்டு நடந்ததை விட 1998-2000ஆம் ஆண்டுகளில் நடந்தவைதாம் எனக்கு பசுமையான நினைவுகளாக என் மனத்திரையில் ஓடின.

ப்ளஸ் டு முடித்து ஆங்கிலம் படிப்பதற்காக அங்கே சென்றேன். அந்த பயிற்சியை 'மைனர் செமினரி' என அழைத்தார்கள். கொஞ்சம் விவிலியம், கொஞ்சம் உலகம், கொஞ்சம் ஆன்மீகம், நிறைய இங்கிலீஷ் என இருந்தது அந்தப் பயிற்சி.

ப்ளஸ் டு வரை யூனிஃபார்ம் அணிந்துவிட்டு, யூனிஃபார்ம் இல்லாமல் நான் வாழ்க்கையைத் தொடங்கிய இடம் அதுதான்.

மூன்று விடயங்கள் நான் அங்கே முதல் முதலாக செய்தேன்:

அ. அரும்பு மீசை

எனக்கு மீசை தாமதமாகவே வளர்ந்தது. சில பசங்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே மீசை இருந்தது. அப்படி வளர்ந்த மீசையை ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் யாரும் இல்லாத நேரம் நானே ஷேவிங் பண்ண நினைத்து ஒரு பக்கம் கன்னத்தை வெட்டிக்கொண்டேன். அதைப் பார்த்த என் நண்பன் சாம்சன் ஓடோடி வந்து உதவினார். என் கன்னம் தொட்டு, 'இப்படிச் செய்! அப்படிச் செய்யாதே!' என்று என் அரும்பு மீசை ஒதுக்கினார் நண்பர்.

ஆ. கையில் வாட்ச்

சின்ன வயசுல இருந்து எனக்கு வாட்ச் கட்டணும்னு ரொம்ப ஆசை. ஆறாம் வகுப்பில் க்ரூப் ஃபோட்டோ எடுத்தார்கள். க்ரூப் ஃபோட்டோவில் வாட்ச் கட்டி நிற்பது அன்றைய ஃபேஷனாக இருந்தது. எல்லாரும் தங்கள் வீடுகளிலிருந்து வாட்ச் கொண்டு வந்திருந்தார்கள். என் அப்பா வாட்ச் கட்டியதே இல்லை. ஆகையால் எனக்கு அந்த கொடுப்பினையும் இல்லை. ஏழாம் வகுப்பு பழனிக்குமார் அண்ணனிடம் ஓடிப்போய் கடன் வாங்கினேன். ஆனால் என் கை மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த செயின் வாட்ச் என் கையிலிருந்து கழன்று ஓடியது. 'நீ உடைத்துவிடுவாய். கொடு!' என கொடுத்த வேகத்தில் திரும்ப வாங்கிக்கொண்டார் பழனிக்குமார். ஆக, வாட்ச் கட்டாமல் க்ரூப் ஃபோட்டோவிற்கு நின்றேன். 10ஆம் வகுப்பு தேர்வு நேரத்தில் மார்ட்டின் அவர்களும், 12ஆம் வகுப்பு தேர்வு நேரத்தில் அற்புதசாமி அவர்களும் தங்கள் வாட்ச்களை கொடுத்து உதவினர். முதன்முதலாக நான் வாட்ச் கட்டியது விரகனூரில்தான். சோனட்டா. கறுப்பு நிறம். மிக குட்டியாக இருக்கும். நிறைய பேர் அதை லேடிஸ் வாட்ச் என்றார்கள். ஆனால், எனக்கு அது வாட்ச்சாக மட்டுமே தெரிந்தது. நான் ஆங்கில ஃபொனடிக்ஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக அருள்தந்தை. ஜான்திரவியம் பரிசாக வழங்கினார். முதல் முதலாக கட்டியதால் என்னவோ சோனட்டாவின்மேல் எனக்கு இன்னும் ஓர் ஈர்ப்பு.

இ. இடுப்பில் கைலி

முதல் முதலாக இடுப்பில் கைலி ஏறியதும் இங்குதான். கைலி - இது ஆண்களின் தாவணி.

ஒரு வீட்டின் கொடியில் தாவணி காய்ந்தது என்றால் அந்த வீட்டில் ஒரு வயசுப்பெண் இருக்கிறார் என்பது எப்படி உண்மையோ, அப்படி உண்மையானதுதான் கைலி. வயதுக்கு வந்த ஆண்கள் கட்டுவது கைலி. கைலிக்கு பனைமரம் போல பல பயன்பாடுகள் உண்டு.

ப்ளு கலரில் குட்டிக் கட்டம் போட்ட கைலி. அப்பா வாங்கிக் கொடுத்தது. அப்பா கடைசிவரை கைலியும் கட்டியது இல்லை. 'கைலி கட்டுறவங்க எல்லாம் ரௌடி' என்பது எங்க அப்பா வைத்திருந்த சில மூடநம்பிக்கைகளில் ஒன்று.

நிற்க.

கல்லூரி முழுவதும் சுற்றி வந்தபோது நிறைய எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

முதல் முதலாக சைட் அடித்த லீமா என்ற பெண். பக்கத்தில் இருந்த கான்வென்டில் இருந்த மூன்று பொண்ணுங்களில் ஒருத்தி அவர். இவரின் பெயர் எந்த அளவிற்கு என் மனதில் பதிந்தது என்றால், நான் மிலான் சென்றபோது ஒரு மெட்ரோவில் பயணம் செய்தேன். லீமா என்ற ஒரு நிறுத்தம் ஸ்பீக்கரில் சொல்லப்பட்டவுடன் எனக்கு இவள்தான் நினைவிற்கு வந்தாள்.

இரவில் வெந்நீர் குடிக்க வருவோம். ஒரு பெரிய பாத்திரத்தில் புகை வாடை அடிக்கும் அந்த தண்ணீரை குடிப்பது அவ்வளவு இனிமையாக இருந்தது.

காலையில் திருப்பலி முடிந்தவுடன் ஆங்கிலம் சத்தமாக வாசிக்க வேண்டும். அந்த கொய்யா தோப்பு பகுதிக்குச் சென்றால் இன்றும் என் குரலை என்னால் கேட்க முடிகிறது.

தொட்டி தண்ணீர் குளியல்.

துவைக்கும் சோப்பின் வாசம்.

புளியம் பழம்.

இளநீர்.

அந்த நேரத்தில் பாய்ந்து வரும் நீலக்கலர் கமாண்டர் ஜீப். அதை ஓட்டி வரும் மணி அண்ணன்.

காதுகேட்காத அலங்காரம் தேய்க்கப் போடும் எல்லாத் துணிகளையும் ஓட்டை ஆக்கிவிடுவார்.

செபமாலை செபித்த கெபிகள்.

'வியா இம்மாகொலாத்தா' என அருள்தந்தை ஹெர்மஸ் பெயரிட்டு அழைத்த சாலைகள்.

ஸ்டடி ஹாலில் பேசியதற்காக ஏறி நின்ற சேர்.

சிற்றாலயத்தில் தூங்கி வழிந்தபோது என்னைத் தாங்கிய சுவர்.

நான் சுடிதார் அணிந்து ஃபோட்டு எடுத்த வராண்டா.

முதன்முதலாக நான் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை.

சவரிராஜ் ஃபாதர் அறை.

இருதயம் அடிகளாரின் ஆன்மீக வழிகாட்டல்.

நான் செக்ரடரியாக வேலை செய்த அருள்தந்தையர். அமல்ராஜ் மற்றும் கென்னடி அவர்களின் அறைகள்.

பாதிக் கேட்கும் கேட்காமல் ஒலிக்கும் ரேடியோ. அதை கேட்டு எழுதிய ஆங்கில செய்தி.

நிற்க.

நண்பருடன் நடந்தது என்னவோ என் உடல்தான். ஆனால் என் உள்ளம் 17 ஆண்டுகளுக்கு முன் பயணம் செய்துவிட்டு ஓடி வந்தது.

அன்று இரவு தூக்கம் இல்லாமல் கழிந்தது.

பிறவிப் பயன் அடைந்ததுபோல இருந்தது.

அந்த கல்லூரி இன்று 'மெடோனா கல்லூரி' என்ற பெண்கள் கல்லூரியாக மாறி நிற்கிறது.

ஆனால், 'டேய்...பாஸ் பண்ணுடா பந்தை!' என்ற எம் இளவல்களின் ஓசை இன்னும் அந்த க்ரவுண்டில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

(படத்தில் என் அருகில் இருப்பது அருள்தந்தை கென்னடி, பாளை மறைமாவட்டம்)


4 comments:

  1. நேற்றைய தினம் ஆன்மீகம் சொட்டச் சொட்ட ஒரு பதிவைத் தந்த தந்தை இன்று தான் தன் குருத்துவ வாழ்வின் வாசலாகப் பாவிக்கும் ' விரகனூர் இளங்குரு மடத்தில்' கழித்த, கிடைத்த இனிமையான அனுபவங்களை மலரும் நினைவுகளாக( இதிலும் கொஞ்சம் ஆன்மீக வாடை அடிப்பதும் உண்மைதான்) சுவைபட சித்தரித்துள்ளார. இங்கே நாம் மெச்ச வேண்டியது இவரது ஞாபக சக்தியைத்தான் எனினும் அதோடு கூட தன் வாலிபத்தின் ஆரம்ப கட்டங்களில் தனக்கு வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லிக்கொடுத்தவர்களையும்,சொல்லித்தந்த நிகழ்வுகளையும் அச்சரம் பிசகாமல் வர்ணித்திருப்பது அவரது ஞாபக சக்திக்குப் பின்னே ஒளிந்திருக்கும் ' 'நன்றி' உணர்வையும் பறைசாற்றுகிறது. பாதி அரும்பிய மீசை,யாரோ ஓசி கொடுத்த கைக்கடிகாரம், பக்கத்து கான்வென்டின் லீமா பொண்ணு, தனக்கு வகுப்பெடுத்த தந்தையர்,தனது முதல் ஆங்கில உரை....ஏன் அவர் தூங்கி விழுந்த போது அவரைத் தாங்கி நின்ற சுவர்...இவரைக் கடந்து செல்லும் எல்லாமே/ எல்லோருமே இவருக்கு வாழ்க்கையில் முக்கியம் என்பதைக்காட்டுகிறது. இடையிடையே வாட்ச் கட்டாத, கைலியின் வாடை தெரியாத இவரின் தந்தையின் ஞாபகத்தைக் நினைவு கூர்ந்துள்ள விதம் என் கண்களைப் பனிக்க வைக்கிறது. காலையில் பார்த்தவரை மாலைக்குள் மறக்க நினைக்கும் இளவல்கள் நிரம்பி வழியும் கால கட்டத்தில் இப்படி ஒரு ' பிள்ளையா?'. பழையதை அசை போடுவதே பெரிய விஷயம்...அதைப்பிறருடன் பகிர்ந்து கொள்வது அதைவிட நல்ல விஷயம். தந்தையே! தங்களின் இந்த 'உள்ளத்து எளிமையை' யாருக்காகவும், எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள்.இறைவன் மென்மேலும் தங்களைத் தன் அருளாலும்,ஆற்றலாலும் நிரப்ப என் வாழ்த்துக்கள்!!!




    விரகனூர்

    ReplyDelete
  2. யேசு உங்களுடைய இந்த எதார்த்த மனநிலை, கடந்தவைகளை நினைவுகூர்ந்து அதை அப்படியே ஏற்று வெளிப்படுத்தும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. நீங்கள் தொடர்கின்ற பயணத்தின் எல்லா நிகழ்வுகளிலும் இறை கரம் உங்களோடு இருந்து வழி நடத்த செபிக்கின்றேன். வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  3. Nostalgic, Father...we travelled along with you...

    ReplyDelete

  4. நான் சுடிதார் அணிந்து ஃபோட்டு எடுத்த வராண்டா.
    // You should have uploaded that photo, Father.. :-)

    ReplyDelete