Sunday, March 19, 2017

யோசேப்பு

நேற்று மாலை வாக்கிங் சென்ற போது சாந்தி அக்கா வந்தார். பாப்பிறை குருமடத்தில் நான் படித்துக்கொண்டிருந்தபோது அவர் வேலைக்குச் சேர்ந்தார். அந்த நாள்களில் தான் அவருடைய கணவரும் இறந்துபோனார்.

பார்த்து ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஆனதால், 'எப்படி இருக்குறீங்க அக்கா?' என்று கேட்டேன்.

'நல்லா இருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே இருந்தவர் டக்கென கண் கலங்கிவிட்டார்.

'என்னை பாதியில் விட்டு விட்டு அவர் போய்விட்டார்'

'எனக்கு இருக்கும் ஒரு மகன். அவன் ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டான். என் பேச்சை கேட்கவில்லை. ஒரு குழந்தை. இப்போது அந்தப் பெண் இவனிடமிருந்து விவாகரத்து கேட்கின்றாள்'

'இரண்டு பேரும் சண்டையில் வீட்டில் இருந்த பாதிப்பொருள்களை உடைத்துவிட்டனர்'

'வாய்த்ததும் (கணவன்!) சரியில்லை. வந்ததும் (மகன்) சரியில்லை' என்று சொல்லிக்கொண்டே இருந்தவரின் ஆட்டோ வர, அவர் ஒரு புன்முறுவலோடு அதில் ஏறிச்சென்றுவிட்டார்.

நிற்க.

நாளை தூய யோசேப்பு, மரியாளின் கணவர் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

எனக்கு மிக மிக மிக பிடித்த புனிதர் இவர்.

இவரைப் பார்த்த நாள்முதல்தான் என் வாழ்வில் மாற்றம் வந்தது. எப்படி?

ஒன்பதாம் வகுப்பில் நான் குருமாணவனாக அடி எடுத்து வைத்தபோது, ஞானஒளிவுபுரம் குருமடம் இருந்தது இவரின் ஆலயத்தின் வளாகத்தில்தான். நான் முதல் முதலாக வாசகம் வாசித்தது, முதன் முதலாக முன்னுரை கொடுத்தது, நன்மை கொடுத்தது என தொடர்ந்து, நான் அருள்பணியாளராக அருள்பொழிவு பெற்றது என எல்லாம் இவரைச் சுற்றியே நடந்தது. நான் இதே பணித்தளத்தில் உதவிப்பங்குத்தந்தையாக இருந்தது அதன் முத்தாய்ப்பு.

சாந்தி அக்காவுக்குள் ஒரு மனக்குமுறல் இருந்ததுபோல, யோசேப்புக்கும் இருந்தது.

தனக்கு நிச்சயம் ஆகியிருக்கிற இளவல் மரியா கருவுற்றிருப்பது அவருக்கு நெருடலாக இருக்கும்.

ரொம்ப பிராக்டிக்கலா பாருங்களேன்!

எனக்கு பிடிச்ச தோழி ஒருத்திக்கு ஃபோன் பண்ண, அவளின் ஃபோன் என்கேஜ்ட் ஆக இருந்தாலே, ஒரு சின்ன இன்செக்யூரிட்டி நம்மை கவ்விக்கொள்கிறது.

'யார்ட்ட பேசிகிட்டு இருப்பா?'

இந்தக் கேள்வியின் பின்னால் இருப்பது சந்தேகம் அல்ல. மாறாக, பொஸஸிவ்னஸ். என்னவள் என்னிடம்தான் - என்னிடம் மட்டும்தான் - பேச வேண்டும் என்ற உணர்வு. இந்த பொஸஸிவ்னஸ்தான் நட்பை இணைக்கிறது. இதன் மறுமுகம் என்னவென்றால், சில நேரங்களில் இதுவே சில நேரங்களில் நட்பை பிரித்துவிடுகிறது.

மரியாளின் மேல் உள்ள பொஸஸிவ்னஸ்தான், 'இவர் எப்படி கருத்தாங்கியிருக்கிறார்?' என்ற கேள்வியை யோசேப்பு எழுப்ப காரணமாகிறது.

யோசேப்பிடம் நான் இரசிக்கும் குணத்தை இரண்டு வார்த்தைகளில் சொல்லிவிடலாம்:

அ. அவரின் தன்மானம் (dignity)

தன் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், மரியாளின் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவரை மறைவாக விலக்கிவிட திட்டமிடுகின்றார். தன்மானம் உள்ள ஒருவர்தான் மற்றவரின் தன்மானத்தையும் மதிப்பார்.

தன் மகன் இயேசுவுக்கு இவர் இந்த குணத்தைத்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்.

இயேசு எந்த ஒரு நேரத்திலும் தன் தன்மானத்தை இழந்துவிடவே இல்லை.

'வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தையும் காட்டுங்கள்' என்று சொன்னவர், தான் தலைமைக்குருவின் அரண்மனையில் அறையப்பட்டபோது, 'ஏன் என்னை அறைந்தாய்?' என்று கேட்கின்றார்.

ஆ. அவரின் பயமின்மை (fearlessness)

மரியாவை ஏற்றுக்கொண்டபின் தனக்கு என்ன நேர்ந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளலாம் என்ற பயமின்மை. திருமணத்திற்கு முன்னேயே குழந்தை, குழந்தைக்கு நெருக்கடி, அங்கே ஓட்டம், இங்கே ஓட்டம், குழந்தை காணாமல்போகிறது, வேகமாக வளர்கிறது, ஊரெல்லாம் போதிக்கிறது - யோசேப்பு நினைத்த மாதிரி அவருக்கு வாழ்க்கை அமையவே இல்லை. இருந்தாலும் பயமில்லாமல் இருக்கிறார். 'இதை செய்யணும், அதை செய்யணும்' என்ற பரபரப்பு இல்லை. 'இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை' என்ற பதற்றம் இல்லை.

முழுமையான மனச்சுதந்திரம் உள்ள ஒருவர்தான் பயமில்லாமல் இருக்க முடியும்.

'தன்மானம்,' 'பயமின்மை' - இவற்றைத்தான் நம் அப்பாக்களும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

யோசேப்பு - நல்ல கணவர், நல்ல அப்பா.


6 comments:

  1. பல காரணங்களுக்காக,...நான் அவரிடம் கேட்டதையெல்லாம் வாரி வழங்கிய காரணத்திற்காக எனக்கும் கூட மிக நெருக்கமானவர் இந்த யோசேப்பு. மரியாளை அவர் மணக்கவேண்டும் எனும் இறைத்திருவுளத்திற்கு இணங்க வேண்டி அவர் சந்தித்த இன்னல்கள் எண்ணிலடங்கா.மணமுடிக்குமுன்பே ஒரு குழந்தையை மரியாள் சுமந்துள்ளாரெனத் தெரிந்தும், அவரை விலக்கிவிட எண்ணாத அவரது பெருந்தன்மைக்குப் பின்னே எத்தனை,எத்தனை அவமானங்களையும்,உள்ளக்குமுறல்களையும் அவர் கடந்து வந்திருக்க வேண்டும்?இதற்கு ஒரே காரணம்.." மரியாவை ஏற்றுக்கொண்டபின் தனக்கு என்ன நேர்ந்தாலும் தாங்கிக்கொள்ளலாம் என்ற பயமின்மை" என்று தந்தை சொல்வது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.'பயமின்மை' யோடு ' 'தன்மானத்தையும்' தன் அணிகலன்களாகக் கொண்டதே இவரைப் புனிதராக மட்டுமல்ல...ஒரு நல்ல கணவராகவும்,நல்ல அப்பாவாகவும் உயர்த்தியுள்ளது.சாந்தி அக்கா மற்றும் தன் ஆரம்ப கால ' அருள்பணியாளர்' மலரும் நினைவுகளைக் கலந்து ' யோசேப்பை' பற்றி அழகிய கவிதை படைத்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! புனித யோசேப்பின் ஆசி நம் அனைவருக்கும் அபரிமிதமாக்க் கிடைக்க வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. விவிலியம் சார்ந்த விஷயங்களை மட்டுமின்றி மனித மனங்களைப் பற்றிய சிந்தனைகளையும் தன் கருத்துக்களாய்,எழுத்துக்களாய் பலரை வியப்பில் புருவங்களைத் தூக்க வைத்திருக்கும் தந்தை " இயேசு கருணா" அவர்களுக்கு இவ்வலைதளத்தில் தொடர்புடைய அனைவரின் பெயராலும் வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் உரித்தாக்குகிறேன். இவருடைய " விவிலிய இறையியல்" எனும் படைப்பிற்காக இவருக்கு கடந்த மார்ச் பதினான்காம் தேதி அனைத்து ஆன்றோர்களும்,சான்றோர்களும் புடைசூழ பூனே பாப்பிறைக்கல்லூரியில் கொடுக்கப்பட்ட " முனைவர்" பட்டம் இவருக்கு முற்றிலும் உகந்ததே! இன்றைய விழா நாயகர் யோசேப்பைப் போல ' 'தன்மானத்திற்கும்', 'பயமின்மை'க்கும் சொந்தக்காரராக இவரைப் பார்க்கிறேன்."முனைவர்" தந்தையே! இறைவன் மென்மேலும் தங்கள் மீது தன் அருட்கொடைகளைப் பொழியவும்,அவரின் கருத்துக்கள் மற்றும் அவரைப்பற்றிய இறைச்செய்திகளை உலகத்திற்குப் பறைசாற்றும் கருவியாக நீங்கள் தொடர்ந்து இயங்கவும், அதற்கான நல்ல உடல்,உள்ள சுகத்தை இறைவன் தங்களுக்குத் தாராளமாகத் தாரை வார்த்திடவும் அனைத்து வாசகர்களின் பெயரால் வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்!!! இறைவன் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  3. Anonymous3/19/2017

    Dr Yesu. Congratulations to you

    ReplyDelete
  4. Kavitha michael3/20/2017

    Congrats thambi

    ReplyDelete
  5. Kavitha michael3/20/2017

    இன்றைய சூழ்நிலையில் பரபரப்பையும் பதற்றத்தையும் மட்டுமேகொண்டு செயல்படுகிற அப்பாக்களுக்கும் கணவர்களுக்கும் யோசேப்பு தலைசிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார்என்பதை எடுத்துரைத்த எனதருமை தம்பிக்கு வாழ்த்துக்களும் செபங்களும்.God bless.lv

    ReplyDelete
  6. Dear Yesu.

    CONGRATULATIONS.

    ReplyDelete