Sunday, August 2, 2015

அப்பமா? அப்பாவா?

இன்று மாலை ரோசாப்பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்தேன். இரண்டு வாரங்கள் விடுமுறைக்காக தன் சொந்த ஊருக்குப் போய்விட்டு வந்திருந்தார். ஒரு அறையிலிருந்து மறு அறைக்கு கைவண்டியுடன் வரும் அவர் இன்று தனி ஆளாhக வந்து கதவைத் திறந்தது ஆச்சர்யமாக இருந்தது.

'வாழ்த்துக்கள்' என்றவாறு வீட்டுக்குள் நுழைந்தேன்.

'விடுமுறை எப்படி இருந்தது?' என்று கேட்டேன்.

'ரொம்ப நல்லா இருந்தது. நானும் என் கணவரும் சேர்ந்து வாழ்ந்த இல்லத்திற்குச் சென்றுவிட்டு வந்தது புதிய தெம்பைத் தருகிறது' என்றார்.

ரோசாப்பாட்டி தன் 50ஆம் வயதில் தன் கணவரை இழந்தவர். இப்போது வயது அவருக்கு 87.

'அந்த வீட்டுல உள்ள உங்க கணவர் என்ன சொன்னார்?' என்று கேட்டேன்.
'ரோசா, நீ எப்போ இங்கு வந்தாய்?' என்று சொன்னார் அவர்.

இதே கேள்வியைத்தானே நாளைக்கு கப்பர்நாகூமில் கூடிவந்த மக்களும் இயேசுவிடம் கேட்கின்றனர்: 'ரபி, நீர் எப்போது இங்கு வந்தீர்?'

இந்தக் கேள்விக்கு இரண்டு பரிமாணங்கள் உண்டு:

அ. இந்தக் கேள்வியைக் கேட்பவர் ஓரிடத்தில் நிற்க, அந்த இடத்திற்கு கேட்கப்படுகிறவர் வந்தால், இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். இந்தச் சூழலில் கேள்வியில் ஒளிந்திருப்பது எதிர்பார்ப்பு. உதாரணத்திற்கு, சின்ன வயசுல விடுதியில் படிக்கும்போது, பார்வையாளர் ஞாயிறன்று அம்மா வருவார்கள் எனக் காத்திருந்து, அம்மாவும் வந்து, ஆனால் எந்தத் தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படாமல், தற்செயலாக தண்ணீர் குடிக்க வந்தபோது அம்மா நிற்பதைப் பார்த்து, 'எப்போமா வந்தீங்க?' என்று கேட்கும் கேள்வி. இந்தக் கேள்வியில் கேட்கும் நான் ஓரிடத்தில் இருக்கிறேன். கேட்கப்படும் என் அம்மா அந்த இடத்திற்கு வருகின்றார்.

ஆ. இந்தக் கேள்வியைக் கேட்பவர் வேறொரு இடத்தில் இருந்து வர, கேட்கப்படுபவர் ஒரே இடத்தில் நின்றாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிறோம். இந்தச் சூழலில் இந்தக் கேள்வியில் ஒளிந்திருப்பது ஏமாற்றம். அதாவது, 'என்னப்பா உன்னைய ஊர் முழுக்க தேடுறேன். நீ இங்க நின்னுகிட்டு இருக்க. இங்க எப்போ வந்த?' என்று கேட்பது.

இயேசுவைப் பார்த்து மக்கள் கேட்பது இரண்டாம் வகை.

இயேசுவோட பதில் ரொம்ப சிம்ப்பிளா இருக்கு:

அருட்திரு. சகாயம் அவர்களின் வார்த்தைகளில் குறிப்பிடுகிறேன்.

'உங்களுக்கு அப்பா கொடுக்கிற அப்பம் வேண்டுமா? அல்லது அப்பம் கொடுக்கிற அப்பா வேண்டுமா?'

உங்களின் தேடல் அப்பமா? அல்லது அப்பாவா? என எதிர்கேள்வி கேட்கிறார் இயேசு.

நம் பதில் என்னவாக இருக்கும்?


1 comment:

  1. இதிலென்ன ஃபாதர் சந்தேகம்? அப்பா நம்மோடிருக்கையில் அப்பம் நம் கைகளில் தானாக வந்து விழும் என்ற நிச்சயத்தால் 'அப்பா'தான் வேண்டும் என்று பிறந்த குழந்தை கூடச் சொல்லுமே!தந்தையின் சிறு வயது விடுதி வாழ்க்கையின் மலரும் நினைவுகள் என் விடுதி வாழ்க்கையையும் கூட நினைவு படுத்துகின்றன.கணவர் மறைந்து ஆண்டுகள் 37 ஆகியும் இன்னும் அவர் தன் கூடவே இருப்பதாக நினைத்து,அவரின் நினைவுச் சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ரோசாப் பாட்டி இந்தக் காலத்தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு.இறைவன் அவருக்கு நல்ல உடல், உள்ள சுகத்தைக் கொடுத்து ஆசீர்வதிக்கட்டும்!

    ReplyDelete