Saturday, August 8, 2015

உயிருள்ள உவமைகள்

'தனக்கருகில் இருக்கும் தன் சகோதரன் அல்லது சகோதரி படும் துன்பத்தைப் பார்த்துவிட்டு, அவர்மேல் இரக்கப்பட்டு, 'என் கடவுள் ஏன் என் சகோதரர்களுக்கு இப்படித் துன்பங்களைக் கொடுக்கிறார்?' என்று கேட்கக் கூடிய உள்ளம், அவர்கள் படும் துன்பங்களைப் பார்த்து தன்னைத் தானே வாழ்த்திக்கொண்டு, 'என்னை நன்றாக வைத்திருப்பதற்கு நன்றி!' என்று கடவுளுக்கு நன்றி கூறும் உள்ளத்தை விட மேலானது. ஏனெனில் முதலாமவர், அன்பினாலும், பரிவினாலும் உந்தப்பட்டு செபிக்கிறார். ஆகையால், கடவுளுக்கு இதயத்திற்கு அருகில் அவர் இருக்கிறார். இரண்டாமவருக்கு தன் தன்னிறைவுதான் மேன்மையாகத் தெரிகிறது. இந்தத் தன்னிறைவு இறையியல்பிற்குத் தூரமானது' என்பார் ஹோரஸ்.

மத்திய இத்தாலியின் காசல்போர்டினோ என்ற இடத்தில் உள்ள தன் இல்லத்திற்கு விடுமுறைக்குச் சென்றிருக்கும் ரோசா பாட்டியை சந்திக்க நேற்று போனேன். இன்று மாலைதான் ரோம் திரும்பினேன்.

'ஒருவரை முழுமையாக நம்ப வேண்டும் என்றால் அவரின் வீட்டைத் தெரிந்து கொள்ள வேண்டும்' என்பது செல்டிக் பழமொழி.

அவருக்கு ஒரு மகள் என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். வீட்டிற்குச் சென்றவுடன்தான் தெரிந்தது இரண்டு மகள்கள், ஒரு மகன் என்று. மூத்த மகள் ஒருவரின் சம்பளத்தில்தான் இவர்களின் வாழ்க்கை ஓடுகிறது. 35 வருடங்களுக்கு முன் தன் துணைவரை இழந்துவிட்டார் பாட்டி. இப்போது இவருக்கு வயது 87. இவரின் மூன்று பிள்ளைகளுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. மகனும் கொஞ்சம் கொஞ்சம் குடும்பத்திற்கு நிதியுதவி செய்கிறார். இரண்டாம் மகள் உடல்நலம் சரியில்லாதவராக இருக்கிறார். எந்நேரமும் பயத்துடன் இருக்கிறார். தன்மேல் பேய் இருப்பதாக அவரே அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். பாட்டிக்கு காலில் வாரிகோஸ். கால் நரம்புகள் எல்லாம் வெளியே வந்து ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று காலை முதல் வெள்ளி திருப்பலிக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்திருந்தார்.

'என்னைப் பின் செல்ல விரும்புகிறவர் தன்னையே துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு, என்னைப் பின்தொடரட்டும்' என்ற நற்செய்தியை வாசித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது, என் எண்ணம் முழுவதும் ரோசாப்பாட்டிதான் இருந்தார்.

இந்த வசனத்தை முழுமையாக வாழ்ந்தவர் இவராகத்தான் இருக்க முடியும் என நினைக்கிறேன்.

தனக்கென்று உள்ள எல்லாவற்றையும் இழந்துவிட்டார். உடல்நலமின்மை, சோர்வு, ஏமாற்றம், தனிமை என்ற சிலுவைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார். இப்போது இவருக்கு ஒரே தெம்பு கடவுள் மட்டும்தான். ஆனால், தன் வாழ்க்கையை நன்றாக வாழ்ந்துவிட்டதாக நிறைவுடன் இருக்கிறார். தன் பிள்ளைகள் திருமணம் முடித்துக்கொள்ளாதது வருத்தமாக இருந்தாலும், அவர்களின் சுதந்திரத்தில் தான் தலையிடவில்லை என்று மட்டும் முடித்துக்கொண்டார்.

இவரின் மனத்தைரியம் என்னை மிகவும் தொட்டது.

இரண்டாவது மூத்த மகள் கார்லா. இத்தாலியின் நிதியமைச்சரின் அலுவலகத்தில் வேலை செய்கிறார். தனியொருவராக நான்கு பேரை சுமப்பது இவருக்கு ஒன்றும் சுமையாக தெரியவில்லை. உடல்நலமில்லாத தன் அம்மா மேலும், தன் தங்கை மேலும் ஒரு நொடி கூட வருத்தத்தைக் காட்டவில்லை. எப்பவும் புன்முறுவல். எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது.

இயேசுவின் வார்த்தைகளை இன்றும் வாழ்வாக்கிக்கொண்டிருக்கும் உயிருள்ள உவமைகள் நம் நடுவில் இருக்கவே செய்கின்றனர்.


2 comments:

  1. 'உயிருள்ள உவமைகள்'.....உள்ளே இருக்கும் உயிரோட்டமான விஷயத்திற்குக் கட்டியம் கூறுகிறது தலைப்பு. நாம் வாழும் வாழ்க்கையின் வசந்தத்தை நிர்ணயிப்பது நமது சம்பாத்தியமோ, சில பல லட்சங்களோ,மாடமாளிகையோ இல்லை....அது நம் மனத்தில் சுரக்கும் 'அன்பில்' மட்டுமே அடங்கியுள்ளது என்பதை அறிக்கையிடும் ஒரு பதிவு.எத்தனயோ ரோசாப்பாட்டிகளையும்,கார்லாக்களையும்,அவர்களைப் போன்றவர்களையும் தினம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அவர்களது சிலுவையை நாம் தூக்க வில்லையெனினும், அந்தச் சிலுவையைத் தூக்கிச்செல்ல உதவும் சிமியோன்களாகவாவது இருக்கலாமே! யோசிப்போம்.தன் அனுபவங்கள் அத்தனையையும் பாடமாக்கித் தரும் தந்தைக்கு நன்றிகள்.இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்!!!

    ReplyDelete
  2. Well said both Fr. Jesu and Ms. Philomina. Keep it up.

    ReplyDelete