Monday, August 17, 2015

எல்லாம் இறைமையம்

கிதியோனின் அழைப்பையும், அனுப்பப்படுதலையும் நாளை நாம் முதல் வாசகத்தில் (காண். நீத 6:11-24) வாசிக்கின்றோம். நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 19:23-30) சீடத்துவத்தின் விலை என்ன என்று சொல்கின்றார்.

முதல் வாசகத்தில் தொடங்குவோம். இஸ்ரயேலர் மிதியானியர்கள் கையில் அல்லலுறுகின்றனர். அவர்களை மிதியானியர்களிடமிருந்து மீட்க கடவுள் கிதியோனை அனுப்புகின்றார். வானதூதர் கிதியோனுக்குத் தோன்றுகின்றார் இப்போது. ஐந்து விஷயங்கள் இந்த முதல் வாசகத்தில் என் கவனத்தை ஈர்க்கின்றன:

அ. 'கிதியோன் மிதியானிரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருந்தார்!' (6:11)

இந்த வசனத்தை நன்றாக வாசியுங்களேன். கோதுமையை எங்கே அடிக்க வேண்டும்? திறந்த வெளி களத்தில். ஆனால் கிதியோன் எங்கே அடிக்கின்றார்? திராட்சை ஆலையில். 'திராட்சைக் குழியில்' என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு. ஆக, திராட்சை விளைச்சல் இல்லாமல் திராட்சைக் குழிகள் வெறிச்சோடிக்கிடக்கின்றன. ஆக, நாட்டில் பஞ்சம் இல்லையென்றாலும், மது போன்ற ஆடம்பரங்கள் இல்லாத நிலை. மேலும், திராட்சைக் குழியில் அடிக்கும் அளவிற்குத்தான் கோதுமை விளைச்சலும் இருக்கிறது. ஆக, நிலமும் நல்ல பலன் தரவில்லை.

பாலும் தேனும் பொழியும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மக்களுக்கு திராட்சை ரசமும், கோதுமையும்கூட இல்லை. அதாவது கடவுள் அவர்களோடு இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் இல்லை. அல்லது கடவுள் எப்போதெல்லாம் அவர்களோடு இருக்கிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் நலமாயிருக்கிறார்கள்.

இன்று நாமும் கிதியோனைப் போல நெருக்கடியான குழிக்குள் நின்றுகொண்டு கையில் இருக்கும் கொஞ்சம் கோதுமையை அடித்துக் கொண்டிருந்தால், கொஞ்சம் யோசிக்க வேண்டும் - சம்திங் ராங், 'கடவுள் என்னோடு இல்லை!'. இதை அப்படியே தலைகீழாய்ப்போட்டால், 'கடவுள் என்னோடு இருக்கிறார்!' என்று நான் சொல்கிறேன் என்றால், அதை என் அறிவு வளர்ச்சியிலும், ஆற்றல் வளர்ச்சியிலும், செல்வத்தின் வளர்ச்சியிலும் காட்ட வேண்டும். ஆக, ஒன்றும் இல்லாமையும், வறுமையும் கடவுள் நம்மிடம் விரும்பும் குணம் அன்று. நாம் நிறைவாக இருத்தல் அவரின் பிரசன்னத்தின் அடையாளம். இப்படிச் சொல்லித்தான் கால்வின் தன் சபையை பொருளாதார ரீதியில் வளர்த்தெடுத்தார் என சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

ஆ. 'ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்!' 'ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் ஏன் இவையெல்லாம் எமக்கு நேரிடுகின்றன!' (6:11-12)

மேலே சொன்னதன் தொடர்ச்சி இது. ஆண்டவரின் தூதரின் வாழ்த்தைக் கேட்டவுடன், துணிச்சலாக கிதியோன், 'என்ன பெரிய ஆண்டவர் இருக்கார்னு சொல்றீங்க! ஆண்டவர் எங்களோட இருந்தா நாங்க ஏன் இப்படி இருக்கிறோம்?' கண்டிப்பாக ஆடிப்போயிருப்பார் தூதர். கிதியோனின் இந்த வார்த்தைகளில் கொஞ்சம் வலியும், கொஞ்சம் நம்பிக்கையும் ஒளிந்திருக்கிறது. வலி ஏனெனில், கடவுள் அவர்களைக் கைவிட்டுவிட்டார். நம்பிக்கை ஏனெனில், கடவுள் இருந்தால் இப்படி ஒரு நிலை தங்களுக்கு வந்திருக்காது. ஆக, கடவுள் கண்டிப்பாக குறுக்கிட்டு ஏதாவது செய்வார்.

இ. 'நீ திரும்பிவரும்வரை நான் இங்கேயே இருப்பேன்!' (6:18)

கடவுளின் தூதருக்கே கட்டளை கொடுக்கின்றார் கிதியோன். கடவுளுக்கு பலி செலுத்த விழைகின்றார் கிதியோன். 'காத்திருக்கிறேன்!' என்கிறார் தூதர். கிதியோன் வீட்டில் போய் என்ன செய்கிறார்? 'ஆட்டுக்குட்டியையும், இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் புளியாத அப்பத்தையும் தயார் செய்தார்.' இது அரைமணி நேரத்தில் அல்லது ஒருமணி நேரத்தில் நடக்கும் நிகழ்வா? இல்லை! இப்போதுதான் கோதுமை மணியே அடிக்கின்றார். பின் எப்படி மாவு வந்தது? ஆக, கடவுள் பொறுமையின் கடவுளாக இருக்கிறார். இந்தப் பொறுமை நிச்சயம் கிதியோனுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கும். கடவுள் நம்மோடு வந்துவிட்டால் அவர் பொறுமையாக நம்மோடு இருக்கிறார். அவர் பரபரப்பான இறைவன் அல்ல. அவரின் நேரம் முடிவில்லாதது.

ஈ. 'ஆண்டவரின் தூதர் அவர் பார்வையிலிருந்து மறைந்தார். அப்போது அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார்!' (6:21-22)

நாம ஒருத்தர் இவர்தான் அப்படின்னா அறிந்து கொள்ள என்ன செய்வோம்? அவர் இருக்கிறாரா? என்று பார்ப்போம். ஆனால், ஒருவர் மறைந்தவுடன் இவர்தான் அவர் என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இது எபிரேய இலக்கியத்தில் இருக்கும் விந்தையான பண்பு. கடவுள் தங்கள் பார்வையில் இருந்து மறைந்தவுடன், அவரைக் கடவள் என மக்கள் கண்டுகொள்கின்றனர். இந்த பண்பை லூக்கா எம்மாவு நிகழ்விலும் பயன்படுத்துகின்றார் (24:31): 'இயேசு மறைந்தவுடன்தான் அவர் இயேசு என்று அறிந்து கொள்கின்றனர்!' ஆக, மறைந்திருப்பவர்தான் கடவுள். புலப்படாமல் இருப்பதே இறைமை. ஆக, நம் வாழ்வில் கடவுள் மறைந்திருப்பது போல இருந்தால் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று அர்த்தம்.

உ. 'நலம் நல்கும் ஆண்டவர்!' ('யாவே ஷலோம்!') (6:24)

ஆண்டவர் புதிய பெயர் பெறுகின்றார் இப்போது. கிதியோன் இந்த ஆண்டவருக்காக கட்டும் பீடம் ஆண்டவரின் பிரசன்னத்தையும், அவரின் உடனிருப்பையும் நினைவுபடுத்துகிறது. ஆண்டவர் மீட்பும், அமைதியும் தருகின்றார். ஆக, நாம் இறந்துவிடுவோம் என பயப்படத் தேவையில்லை. இன்று நாம் நம் ஊர்களில், பங்குகளில் வைத்திருக்கும் ஆலயங்கள் அல்லது பீடங்கள் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: ஆண்டவரின் பிரசன்னம்! இந்தப் பண்பைப் பின்பற்றி சிலர் தங்கள் வீடுகளிலும் ஆண்டவருக்கு என சின்ன பீடம் அல்லது மாடம் வைத்திருக்கின்றனர். இது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் புத்துணர்ச்சி.

ஆக, எனக்குரியது என எதுவும் இல்லாமல், எல்லாம் இறைமையம் ஆனால் எனக்கும், என் மக்களுக்கும் நலம் என்பது முதல் வாசகத்தின் ஒற்றைவரிச் செய்தி. இதைத்தான் இயேசுவும் சீடத்துவத்திற்கு ஒருவர் தரும் விலையாக முன்வைக்கின்றார். 'என் அடையாளமாய் இருக்கும் வீடு, என் சொந்தமாய் இருக்கும் உடன்பிறப்புகள், என் மூலமாய் இருக்கும் என் பெற்றோர், என் நம்பிக்கையாய் இருக்கும் என் பிள்ளைகள், என் ஊன்றுகோலாய் இருக்கும் நிலபுலம் என்ற இந்த ஐந்தை ஒருவர் விட்டுவிட்டு, இந்த ஐந்தும் என் கடவுளே என இறைவனைப் பற்றிக்கொண்டால் அதுவே விண்ணரசு! இதுதான் நற்செய்தி வாசகத்தின் ஒற்றைவரிச் செய்தி.



2 comments:

  1. மிதியானியர்கள் கையில் அல்லலுறும் தன் மக்களை மீட்டுவரத் தான் தேர்ந்தெடுத்த ஒரு நல்லவன் கிதியோனிடம் ஒரு வானதூதரின் வழியாக எப்படியெல்லாம் தன் பிரசன்னத்தை உணர்த்துகிறார் இறைவன்.அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் பணியின் பொருட்டு அவர் இட்ட அத்தனை ஏவல்களுக்கும் அவர் முன்னே மண்டி இடுகிறார் வான் தூதர். சொல்லாமல் சொல்கிறார் ஆண்டவர்..." நிறைவின் இறைவனான நம் இறைவன் வறுமையையும்,இல்லாமையையும் விரும்பவில்லை; மாறாக அவர் விரும்புவது நிறைவே"; " நாம் கூப்பிட்ட குரலுக்கு நம்மைத்தேடி வரும் இறைவன் பொறுமை காத்து நம்முடன் தன் உடனிருப்பை வெளிப்படுத்துகிறார"; போன்ற வரிகள் நாம் மேற்கொள்ள வேண்டிய சீடத்துவத்தின் மேன்மையை விளக்குகின்றன.தந்தையின் அந்த ஒற்றைவரி இறுதிச்செய்தி... கோதுமை மணி போன்றும்,திராட்சைக்கனி போன்றும் கிடைத்த இன்றைய நற்செய்தியை கோதுமையைப் பிசைந்து மாவாக்கி, திராட்சையைப் பிழிந்து இரசமாக்கி " இந்தா சாப்பிடு; குடி" எனக் கொடுப்பது போல் உள்ளது. " என் அடையாளமாய் இருக்கும் என் வீடு,என் சொந்தமாய் இருக்கும் உடன்பிறப்புகள்,என் முலமாய் இருக்கும் என் பெற்றோர்,என் நம்பிக்கையாய் இருக்கும் என் பிள்ளைகள்,என் ஊன்றுகோலாய் இருக்கும் நிலபுலம்..என்ற ஐந்தை ஒருவர் விட்டுவிட்டு இந்த ஐந்தும் என் கடவுளே எனப் பற்றிக்கொண்டால் அதுவே விண்ணரசு"... தந்தை வழியே வரும் இந்த முத்தான வார்த்தைகள் எத்துனை உண்மையானவை! அவற்றைப் பற்றிக் கொள்ளும் நாமும் உண்மைக்குக் ' கட்டியம்' கூற கூற முயற்சிக்கலாமே! தந்தையின் முயற்சிக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. என் அடையாளமாய் இருக்கும் வீடு, என் சொந்தமாய் இருக்கும் உடன்பிறப்புகள், என் மூலமாய் இருக்கும் என் பெற்றோர், என் நம்பிக்கையாய் இருக்கும் என் பிள்ளைகள், என் ஊன்றுகோலாய் இருக்கும் நிலபுலம் என்ற இந்த ஐந்தை ஒருவர் விட்டுவிட்டு, இந்த ஐந்தும் என் கடவுளே என இறைவனைப் பற்றிக்கொண்டால் அதுவே விண்ணரசு! இதுதான் நற்செய்தி வாசகத்தின் ஒற்றைவரிச் செய்தி.Thank you

    ReplyDelete