Friday, September 2, 2022

செய்யக் கூடாதது

இன்றைய (3 செப்டம்பர் 2022) நற்செய்தி (லூக் 6:1-5)

செய்யக் கூடாதது

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதில்லை - அதாவது, நோன்பின்போது உண்கிறார்கள் - என்று இயேசுவிடம் புகார் அளிக்கப்பட்டது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்கிறார்கள் சீடர்கள். இயேசுவின் சீடர்களுக்கும் உணவுக்கும் உள்ள இந்தத் தொடர்பை யாராவது ஆராய்ச்சி செய்தால் நலம். அப்பம் பிட்கும் நிகழ்விலும், 'போதகரே, அவர்களை அனுப்பிவிடும். உணவு உண்ணும் நேரம் ஆயிற்று' என்கின்றனர். 

வயல்களில் கதிர்களைக் கொய்து திண்ணுதல் என்பது இன்றும் கிராமங்களில் நடக்கின்ற ஒன்று. வழிப்பயணத்தில் ஒன்று அல்லது இரு கைகள் பறித்தல் சரி. அதற்கு மேலாக, அல்லது சேமிக்கும் அல்லது விற்கும் நோக்கத்துடன் பறிப்பது தவறு என்பதை இயேசுவின் சமகாலத்து வழக்கமாகவும் இருந்தது.

ஓய்வுநாள் சட்டத்தை முன்னிட்டு, ஒருவர் தன் கையை எந்த அளவு உயரத்துக்குத் தூக்கலாம் என்ற விதிமுறையை பரிசேயர்கள் உருவாக்கி வைத்திருந்தனர். அதன் பின்புலத்தில்தான் இயேசுவின் சீடர்கள் செய்த செயலைக் கடிந்துகொள்கின்றனர்.

இயேசுவோ, சட்டத்தையும் தாண்டி அவர்களின் பசியை - அடிப்படையான மனித உணர்வை - முன்மொழிந்து அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். மேலும், அத்தகைய சூழலில் தாவீது செய்த செயலையும் சுட்டிக்காட்டுகின்றார்.

மேலும், இந்த நிகழ்வு வழியாக மானிட மகன் ஓய்வுநாள் சட்டத்தையும் கடந்தவர் என முன்மொழிகின்றார்.

இந்த நிகழ்வை எப்படிப் புரிந்துகொள்வது?

எல்லா விதிமுறைகளோடும் நாம் சமரசம் செய்துகொள்ள இயலுமா? எந்த அளவுக்குச் சமரசம் செய்துகொள்ளலாம்? 

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் நல்ல தந்தையாக தன் திருஅவைக்கு அறிவுரை வழங்குகின்றார். பாவம் பவுல்! தன் குழுமத்தாரைக் கடிந்துகொள்ளவும் விரும்புகின்றார். அதே வேளையில் அவர்களின் நொறுங்குநிலை கண்டு வருந்தவும் செய்கின்றார். 

இறுதியில், தன்னை ஒரு தந்தை என முன்மொழிகின்றார்.

பரிசேயர்கள் தன் சீடர்களைச் சட்டம் கொண்டு கடிந்துகொள்ள முயன்றபோது, இயேசு நல்தந்தையாக அவர்களைக் காத்துக்கொள்கின்றார்.


No comments:

Post a Comment