Thursday, October 27, 2022

புனித சீமோன், யூதா

இன்றைய (28 அக்டோபர் 2022) திருநாள்

புனித சீமோன், யூதா

இன்று நம் தாய்த்திருச்சபை திருத்தூதர்களும் புனிதர்களுமான சீமோன், யூதா திருநாளைக் கொண்டாடுகிறது. 'தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா அல்லது ததேயு' என்று இவர்களை அழைக்கின்றார் லூக்கா. சீமோனை மையமாக வைத்த பக்தி முயற்சிகள் அதிக அளவில் இல்லை. ஆனால், அன்னை மரியாள், அந்தோனியார்க்கு அடுத்த நிலையில் உலகெங்கும் அதிக பக்தர்களை ஈர்க்கக்கூடியவர் யூதா ததேயு எனலாம். 'கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்' அல்லது 'கையறுநிலையின் பாதுகாவலர்' இவர். இவர் இயேசுவின் உறவினர் என்பதும், கானாவூரில் இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வு நடந்தது இவருடைய திருமணத்தில்தான் என்பதும் மரபுவழிச் செய்தி. நான் உரோமையில் என் படிப்பிற்காகச் சென்றிருந்தபோது எனக்கு அடைக்கலம் தந்தது புனித யூதா ததேயு பங்குத்தளம்தான். இன்று அந்தப் பங்குத்தளத்தின் திருநாள். கையின் இடுக்கில் ஒரு பெரிய கட்டையும், இடுப்பில் தான் எழுதிய கடிதப் பகுதியையும், இரண்டு கைகளில் இயேசுவின் முகம் தாங்கிய துணியையும் (வெரோணிக்காவுக்கு இயேசு வழங்கியது) ஏந்தியவராக இவர் காட்சி அளிப்பார் அந்தப் பங்குத்தளத்தில். 

திருத்தூதர்கள் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள இணைப்புக் கோடுகள் அல்லது பாலங்கள். இவர்களை அடித்தளங்கள் என்கிறார் பவுல் (காண். முதல் வாசகம்). 

இவ்விரு திருத்தூதர்களும் இன்று நமக்குச் சொல்வது என்ன?

அ. அழைத்தல் அனுபவம் பெறுதல்

'இயேசு ஒரு மலைக்குப் போனார். கடவுளிடம் வேண்டினார். விடிந்ததும் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்' என்று வேகமாக நாம் நற்செய்தி நூலில் வாசித்துவிடுகின்றோம். ஆனால், அந்த நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தால் நமக்கு வியப்பின்மேல் வியப்பாக இருக்கிறது. பெரிய கூட்டம். அந்தக் கூட்டத்தின் நடுவில் சில சீடர்கள். எல்லாரும் நிற்கிறார்கள். இயேசு அவர்கள் முன்னால் நின்று, 'நீ வா! சீமோன் ... நீ வா! ததேயு! உன்னைத்தான் ... வா!' என்று சொல்லும்போது மற்ற சீடர்கள் நடுவில், மற்ற மக்கள் நடுவில் அவர்கள் எவ்வளவு ஆனந்தம் அடைந்திருப்பார்கள்! 'நானா!' என்று ஓடியிருப்பார்கள். சிலர் தயங்கியிருப்பார்கள். ஆனால், அழைக்கப்பட்ட அனைவரும் சென்றுவிடுகின்றனர். கூட்டத்திலிருந்து பெயர் சொல்லி அழைக்கப்படுதல் ஒரு முக்கியமான அனுபவம். நம்மை யாராவது கூட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதிச் செயல்பட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில், கூட்டத்தில் நம்முடைய தனித்தன்மை அழிக்கப்படுகிறது. ஆக, என்னுடைய தனித்தன்மையை இறைவன் எனக்கு நினைவூட்டும் நிகழ்வுதான் அழைத்தல் அனுபவம். இன்றும் குருத்துவ அருள்பொழிவில் திருத்தொண்டர்களையும், திருத்தொண்டர் அருள்பொழிவில் மாணவர்களையும், துறவற சபையில் முதல் மற்றும் இறுதி வார்த்தைப்பாடு கொடுக்கும் இளவல்களையும், திருமுழுக்கின் போது நம்மை பெயர் சொல்லி அழைப்பதன் பொருள் இதுதான். இந்த அழைத்தல் அனுபவம் ஒருநாள் அனுபவம் அல்ல. இது அன்றாட அனுபவமாக இருத்தல் வேண்டும். 

ஆ. அவரோடு நிற்றல்

இவர்கள் இயேசுவுடன் நிற்க வேண்டும். ஆக, இவர்களுக்கென்ற தனிப்பட்ட நிற்றல் இனி இல்லை. இவர்கள் தங்கள் குடும்பத்தோடும், உறவினர் நண்பர்களோடும் இனி நிற்க முடியாது. இயேசுவோடு நிற்க அவர்கள் மற்றவற்றை இழக்க வேண்டும். இல்லை என்றால், இயேசுவை நெறித்துக்கொண்டு நிற்பது போல ஆகவிடும். இயேசுவுடன் நிற்க நான் என்னுடைய முதன்மைகளைக் கைவிட வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் என் இல்ல அதிபருடன் வெளியே செல்ல வேண்டுமென்றால், எனக்கென அன்று நான் வைத்திருக்கும் வேலைகளை விட்டு எழ வேண்டும். இதையும் பார்த்துக்கொண்டே அவரோடு செல்ல முடியாது. அவரோடு சென்றுகொண்டே இவற்றைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்க்க நேரிட்டால் இரண்டிலும் முழுமை இராது.

இ. அவருடைய பணிகளைச் செய்தல்

இயேசு திருத்தூதர்களுடன் சமவெளில் நின்றுகொண்டு மூன்று பணிகளைச் செய்வதாகப் பதிவு செய்கிறார் லூக்கா: மக்களுடன் பேசுகிறார் அல்லது போதிக்கிறார், அவர்களின் பிணிகளை நீக்குகின்றார், தீய ஆவியை அகற்றுகிறார். போதித்தல், நலம் தருதல், தீமையை அகற்றுதல் - இம்மூன்றும்தான் திருத்தூதருடைய பணிகள். திருத்தூதராக இருப்பவர் இந்த மூன்று பணிகளிலும் சமரசம் செய்துகொள்ளவே கூடாது. இன்று பல நேரங்களில் நான் போதிக்கத் தயங்குகிறேன். நலம் தரும் வார்த்தைகளைக் பேசுவதில்லை. என்னிடம் உள்ள தீமையை அகற்றுவதையே பெரிய போராட்டமாகக் கருதுகிறேன். இப்பணிகளோடு சமரசம் செய்துகொள்ளும்போது என் பணியில் பிறழ்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

இறுதியாக,

'மக்கள் யாவரும் இயேசுவைத் தொட முயன்றனர்' என முடிகிறது நற்செய்தி வாசகம்.

இயேசுவைத் தொடுவதற்கான கருவிகள்தாம் திருத்தூதர்கள். நீங்களும் நானும் திருத்தூதர்களாக இருந்தால் இன்னும் பலர் இயேசுவைத் தொட முடியும் - இன்றும் என்றும்!

யூதா ததேயுவின் படம் அல்லது திருஉருவத்தை நாம் கண்டிருப்போம். பச்சைநிற மேலாடை அணிந்து, ஒரு கையில் கையில் கோல், இன்னொரு கையில் சுருள், உச்சந்தலையில் நெருப்புத் துண்டு எனக் காட்சியளிக்கிறார் இப்புனிதர்.

இப்புனிதரின் பக்தி முயற்சி அமெரிக்காவில், குறிப்பாக இஸ்பானியம் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில், மிகவும் பிரபலமானது. பல மணி நேரங்கள் செலவழித்து மக்கள் இப்புனிதரை நாடிச் செல்வர். இஸ்பானிய மக்கள் பத்திரமாக அமெரிக்காவில் கால் பதிக்க இவர் உதவியதாக நம்புகின்றனர் இம்மக்கள்.

புனித யூதா ததேயுவின் கையில் இருக்கும் சுருள் பற்றிய கதையாடல் ஒன்றும் பாரம்பரியத்தில் உண்டு. அதன்படி, எதேஸ்ஸா நாட்டைச் சார்ந்த (இன்றைய துருக்கி) அரசர் அப்கார் என்பவர் தனது தொழுநோயைப் போக்க இயேசு வருமாறு அவருக்குக் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். எதேஸ்ஸாவுக்குச் செல்ல மறுக்கின்ற இயேசு, தன் முகத்தை ஒரு சுருள்துணி ஒன்றில் பதித்து, அதை யூதா ததேயுவிடம் கொடுத்தனுப்புகிறார். அந்த முகத்தைக் கொண்டு அரசரின் தொழுநோயைப் போக்குகின்றார் புனிதர்.

பெந்தகோஸ்தே திருவிழாவுக்குப் பின், மத்திய கிழக்கு நாடுகளில் மறைப்பணி செய்கின்ற புனிதர் அங்கேயே மறைசாட்சியாக இறக்கின்றார். இவருடைய எலும்புகள் உரோமைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புனித பேதுருவின் கல்லறைக்கு அருகில் வைக்கப்படுகின்றன. 

புனித ப்ரிஜித் மற்றும் புனித பெர்நார்துக்குத் தோன்றுகிற இயேசு, 'கைகூடாதவற்றைக் கைகூடச் செய்பவர் புனித யூதா ததேயு' என வெளிப்படுத்துகிறார். அன்றுமுதல், கைவிடப்பட்டவர்களின், கையறுநிலையில் இருப்பவர்களின் காவலராக இருக்கின்றார் புனித யூதா ததேயு.

இவர் நமக்கு இன்று மூன்று வாழ்வியல் பாடங்களைக் கற்பிக்கின்றார்:

(அ) இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வையுங்கள்

புனித யூதா ததேயு எழுதிய கடிதம் ஒன்று நம் புதிய ஏற்பாட்டில் இருக்கின்றது. மிகச் சிறிய புத்தமாக அது இருந்தாலும் மிகப் பெரிய கருத்துகளைத் தாங்கியுள்ளது. யூதா திருமுகம் ஒட்டுமொத்த விவிலிய வரலாற்றையும் ஒரே அதிகாரத்தில் சொல்லி, இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ள அழைக்கிறது. 'தூய்மைமிகு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டி எழுப்புங்கள்' (காண். வ. 20). மேலும், 'நம்பத் தயங்குவோருக்கு இரக்கம் காட்டுங்கள்' (காண். வ. 22) என்று நம்பிக்கையில் தளர்பவர்களையும் ஏற்றுக்கொள்ள அழைக்கின்றார். நம் வாழ்வில் வரும் எதிர்பாராத இழப்பு, சோர்வு, நம்பிக்கையின்மை ஆகிய நேரங்களிலும் கடவுள் நம்மேல் இரக்கம் காட்டுகிறார் என்பது இவருடைய புரிதல்.

(ஆ) இயேசுவுக்கு அருகில் இருங்கள்

திருத்தூதர்களில் ஒருவராக இயேசுவோடு எப்போதும் உடனிருக்கும் யூதா ததேயு, தன் உடனிருப்பில் இறுதிவரை நிலைத்திருக்கின்றார். இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் இறைவனோடு நாம் உடனிருத்தல் அவசியம்.

(இ) கடவுள் உன்னை அனுப்பும் இடத்திற்குச் செல்லத் தயாராக இரு!

கடவுள் தன்னை அனுப்ப விரும்பிய நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் யூதா. நம் இருத்தலிலும், நம் இயக்கத்திலும் இறைவனோடு இணைந்து கனிதருகிறோம். எனவே, அவர் அனுப்பும் இடத்துக்குச் செல்லத் தயாராக இருத்தல் நலம்.

நிற்க.

புனித யூதா ததேயுவை நோக்கிச் செபம்

மாட்சிக்குரிய திருத்தூதர் புனித யூதா ததேயுவே!

இயேசுவின் திருஇருதயத்தின் நிழலில் நின்றுகொண்டு 

நான் உமக்கு வணக்கம் செய்கிறேன்.

உம்மேல் கடவுள் பொழிந்த அளவற்ற இரக்கப் பெருக்கிற்காக, 

இயேசுவின் திருஇருதயத்தின் வழியாக, கடவுளைப் போற்றிப் புகழ்கிறேன்.

அவரின் அன்பிரக்கத்தின் வழியாக என்மேல் நீர் இரக்கம் காட்டுவீராக!

என் எளிய வேண்டுதலைப் புறக்கணியாதேயும்!

என் நம்பிக்கை உழன்றுபோக விடாதேயும்!

கைவிடப்பட்டவர்களின் காவலராகக் கடவுளால் நியமிக்கப்பெற்றவரே!

என் அருகில் வாரும்!

அதனால், நான் கடவுளின் இரக்கப் பெருக்கைப் புகழ்ந்து பாடுவேன்.

என் வாழ்வு முழுவதும் உமக்கு நன்றி சொல்லும் நான்,

விண்ணகத்தில் உம்மைக் கண்டும் உமக்கு நன்றி பகர்வேன்!

ஆமென்.

புனித யூதா ததேயுவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!

உம் துணையை நாடும் அனைவருக்கும் துணைவராய் இரும்!

No comments:

Post a Comment