Tuesday, October 18, 2022

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்

இன்றைய (19 அக்டோபர் 2022) நற்செய்தி (லூக் 12:39-48)

மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம்

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் இரு வார்த்தைப் படங்கள் உள்ளன: பணியாளர், பொறுப்பாளர். முதல் வாசகத்தில், புறவினத்தாருக்கு தான் செய்த நற்செய்திப் பணியைப் பொருத்தவரையில் தான் ஒரு பொறுப்பாளர் என்றும், தான் கிறிஸ்துவின் பணியாளர் என்றும் முன்மொழிகின்றார் பவுல். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்கள் விழிப்புநிறை பணியாளர்களாகவும், நம்பிக்கைக்குரிய மற்றும் விவேகமான பொறுப்பாளராகவும் திகழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

'மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாக எதிர்பார்க்கப்படும்' என இறுதியில் மொழிகின்றார் இயேசு.

இதை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

தாலந்து அல்லது மினா எடுத்துக்காட்டில், 'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதாகக் கருதப்படுவதும் எடுக்கப்படும்' என்கிறார் இயேசு. ஏறக்குறைய இதன் தழுவலாகவே இருக்கின்றது இயேசு சீடர்களுக்குச் சொல்லும் அறிவுரை அல்லது எச்சரிக்கை.

மேலும், தன் சீடர்கள் தன்னைக் காணும் பேறு பற்றியும் இயேசு கூறுகின்றார். மற்றவர்களுக்கு மறைபொருளாக உள்ளது தன் சீடர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதை எண்ணி அவர்களைப் பாராட்டுகின்றார் இயேசு. 

'மிகுதியாகக் கொடுக்கப்பட்டது' என்பது பொறுப்புணர்வையே குறிக்கிறது.

2 அரசர்கள் நூலில் அரசர்களின் சிலை வழிபாட்டால் ஒட்டுமொத்த யூதா நாடும் தண்டனைக்கு உள்ளாகிறது. அதாவது, அரசர்கள் தங்கள் பொறுப்புணர்வை மறந்து செயல்பட்டார்கள். தங்களிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்திருந்தார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) கடவுள் நம்மிடம் ஒப்படைத்தவை பற்றியும், நம் அழைத்தல் பற்றியும் அக்கறையுடன் இருப்பது.

(ஆ) பொறுப்புணர்வுடன் வாழ்க்கை நடத்துவது.

(இ) நமக்கு மேல் உள்ள கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராகவும், நம் நிலையில் உள்ளவர்களோடு விவேகமாகவும் செயல்படுவது.


No comments:

Post a Comment