Friday, May 3, 2019

முதன்மையானது

இன்றைய (4 மே 2019) முதல் வாசகம் (திப 6:1-7)

முதன்மையானது

இன்றைய முதல் வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். திருச்சபையில் முதன் முதலாக திருத்தொண்டர்களாக எழுவரைத் தொடக்கத் திருச்சபை ஏற்படுத்தும் செய்யும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம்.

நாம் இன்று கற்றுக்கொள்ள வேண்டிய சில வாழ்வியல் பாடங்களை இந்நிகழ்வு நமக்குச் சொல்கிறது.

அ. 'கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் கவனிக்கப்படவில்லை'

இங்கே 'பந்தி' என்பது திருமண விருந்து அல்ல. மாறாக, தொடக்கத் திருஅவை கூடி வருகின்ற அன்பு விருந்து. ஏறக்குறைய நம் அன்பியக் குழுமம் போன்றது. இறைவார்த்தை வாசிப்பு, இறைவேண்டல், அப்பம் பிட்குதல், உணவு பகிர்தல் என்ற நான்கு நிகழ்வுகள் ஒவ்வொரு குழுமத்திலும் நடைபெறும். இப்படி இவர்கள் கூடி வரும் இடத்தில் மொழிப் பிரச்சினை வருகிறது. எபிரேய மொழி பேசுவோர் கிரேக்க மொழி பேசுவோரை விருந்திலிருந்து ஒதுக்குகின்றனர். குறிப்பாக கிரேக்க மொழி பேசுவோரின் கைம்பெண்கள் கண்டுகொள்ளப்பட மறுக்கிறார்கள். கைம்பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்கள் சமூகத்திலும் ஆன்மீகத் தளத்திலும் பாவிகள் எனக் கருதப்பட்டனர். இவர்களில் பலர் ஏழைகளாக இருந்தனர். இப்படி முழுக்க முழுக்க இறைவனையும் மற்றவர்களையும் சார்ந்திருக்கும் கைம்பெண்கள் விருந்தில் கவனிக்கப்படாமல் இருப்பது தவறே. இது திருத்தூதர்களின் பார்வைக்கு உடனடியாகக் கொண்டுபோகப்படுகிறது.

ஆக, ஒரு தனிநபருக்கு, குடும்பத்திற்கு, குழுமத்திற்கு இந்நிகழ்வு கற்பிப்பது என்ன? யாருக்கு என்ன தேவை என்பதை உடனடியாகக் கண்டுகொள்வது ஒரு நல்ல வாழ்வியல் பாடம்.

ஆ. 'திருத்தூதர்களின் நடவடிக்கை'

திருத்தூதர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றனர். மேலும், அனைவரையும் ஒன்றாகக் கூட்டுகின்றனர். முடிவைத் தாங்கள் மட்டும் எடுக்காமல் இணைந்து செயலாற்றுகின்றனர்.

ஆக, ஒரு பிரச்சினை வரும்போது அதற்கான நேரத்தை உடடினயாகச் செலவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து முடிவுக்கு வருவது.

இ. 'இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும்'

'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. ஆதலால், அன்பர்களே, உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். நாங்களோ இறைவேண்டலிலும் இறைவார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்.'

இன்று காலை நான் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'நாம் இருவரும் ஏதாவது பி.எட் படித்திருந்தால் ஒரு பள்ளிக்கூடத்தில் அமர்ந்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். அங்கே நம் உழைப்பிற்கான பலனை உடனடியாக அறியலாம். பத்துமாத வேலை. பத்து மாத இறுதியில் பலன். ஆனால், இந்தப் பணியில் - படிக்கும் பணியில், கற்றுக்கொடுக்கும் பணியில் - எந்த ரிசல்டும் இல்லை. எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்கிறது' என்று இருவருமே புலம்பிக்கொண்டோம்.

ஆனால், இந்தப் புலம்பலுக்கான விடை நம் முதல் வாசகத்தில் இருக்கிறது. திருத்தூதர்கள் முதன்மையை முதன்மையாக வைத்திருந்தார்கள். பந்தியில் பரிமாறும் பணியும் முக்கியம்தான். அதற்காக, அதைவிட பெரிய இறைவேண்டல் மற்றும் இறைவார்த்தைப் பணியை சமரசம் செய்ய முடியுமா? படிக்கத் தெரியாத திருத்தூதர்களின் மேலாண்மைக் கொள்கை ஆச்சர்யமாக இருக்கிறது. இன்றைய திருச்சபை ஒட்டுமொத்தமாக இறைவேண்டலையும், இறைவார்த்தையையும் விட்டுவிட்டு, 'பந்தி பரிமாறும் வேலையை' இன்று செய்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியதே. நானும் சில நேரங்களில் 'பந்தி தான் பரிமாறிக்கொண்டு இருக்கிறேன்.'

பந்தி பரிமாறுவது எளிது. பத்து நிமிடத்தில் வயிறு நிறைந்தவர்கள் நம்மை வாழ்த்துவார்கள். நமக்கு நிறைய முகங்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களை வைத்து நம் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம். அல்லது அவர்கள் நம்மை வைத்துச் சாதித்துக்கொள்வார்கள். ஆனால், இறைவேண்டலும் இறைவார்த்தையும் அப்படி அல்ல. தனிமையாக அமர்ந்து வாசிக்க வேண்டும், செபிக்க வேண்டும். ஆனால், இதன் பயன் நீடித்தது.

ஆக, நீடித்த ஒன்றுக்காக தற்காலிகமான ஒன்றை இழக்கத் துணிகின்றனர் திருத்தூதர்கள். முதன்மையானதை முதன்மையானதாக வைத்துக்கொள்தல் அவசியம். நம் வாழ்வின் பெரியவற்றுக்காக சிறியவை ஒருபோதும் துன்புறல் கூடாது.

ஈ. 'கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்'

மிக எளிய சடங்குமுறை. திருப்பலி உடைகள் இல்லை. பெரிய குழுமம் இல்லை. வருகைப் பாடல் இல்லை. வண்ண விளக்குகள் இல்லை. புகைப்படக் கருவிகள் இல்லை. நீண்ட பாடல்கள் இல்லை. ரொம்ப எளிய சடங்கு. கைகளை வைத்து வேண்டினர். அவ்வளவுதான், சடங்கு முடிந்துவிட்டது.

ஆக, தேவையற்ற வாழ்வியல் சடங்குமுறைகளை விடுத்து தேவையானதை மட்டும் பற்றிக்கொள்வது.

இப்படியாக,

திருத்தூதர்கள் முதன்மையானதை முதன்மையானதாக வைத்திருந்ததால் சீடர்களின் எண்ணிக்கை மிகுதியாகப் பெருகியது.

இன்றைய நம் வாழ்விற்கும் மறைத்தூதுப்பணிக்கும் திருத்தூதர்களின் 'முதன்மைப்படுத்துதல்' ஒரு நல்ல பாடம்.


1 comment:

  1. என்னதான் தந்தையும்,அவர் நண்பரும் பி.எட் படிக்காதது குறித்து புலம்பியிருப்பினும் ஒரு ஐந்து நிமிட தனிமை அவருக்கு எது மேலானது எனும் உண்மையை உணர்த்திவிட்டது நிஜம்.'பந்தி பரிமாறுவது' முக்கியமே எனினும் அதற்காக,அதைவிட மேலான இறைவேண்டலை ஓரங்கட்டலாமா? இன்றையத் திருச்சபை இறைவேண்டலையும்,இறைவார்த்தையையும் விட்டு விட்டு,'பந்தி பரிமாறும்' வேலையைச் செய்வது வருத்தத்திற்குரியதே என்று அவரே கூறுவது அவரின் விழிப்புணர்வைக்காட்டுகிறது.'நீடித்த ஒன்றுக்காகத் தற்காலிகமானதை இழக்கத்துணியாமல் திருத்தூதர்கள் முதன்மையானதை முதன்மையாக வைத்துக்கொள்தல் நலம்' என்கிறார் தந்தை.அதுமட்டுமல்ல...இன்றைய நம் வாழ்விற்கும்,மறைத்தூதுப்பணிக்கும் தேவையான ' முதன்மைப்படுத்துதலை' அனைத்து அருட்பணியாளர்களும் புரிந்து செயல்பட நம் அனைவரின் செபமும் அவர்களுக்குத் துணை நிற்கட்டும்! ( கைம்பெண்கள் குறித்த தந்தையின் பார்வை என்னை ஆச்சரியப்படுத்தியது) மேன்மையான விஷயங்களை மேன்மையான முறையில் எடுத்துச் சொன்ன தந்தையை இறைவன் தன் இமையாக வைத்துக்காப்பாராக!!!

    ReplyDelete