Tuesday, May 14, 2019

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய (15 மே 2019) முதல் வாசகம் (திப 12:24-13:5)

ஒதுக்கி வையுங்கள்

இன்றைய முதல் வாசகத்தில், தூய ஆவியார் திருச்சபையாரிடம், 'பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கிவையுங்கள்' என்று கூறுகிறார்.

இரண்டு விடயங்கள் இங்கே கவனிக்க வேண்டியவை.

ஒன்று, தூய ஆவியாரின் குரலைக் கேட்பது.

தொடக்கத் திருஅவையில் உள்ளவர்களால் எப்படி தூய ஆவியாரின் குரலைக் கேட்க முடிந்தது? அல்லது மற்ற குரல்களிலிருந்து தூய ஆவியாரின் குரலை எப்படி வேறுபடுத்த முடிந்தது. ரொம்ப எளிது. நாம் யாருக்கு நெருக்கமாக இருக்கிறோமோ அவர்களுடைய குரலை நம்மால் பிரித்து அறிய முடிகிறது. அறிமுகம் இல்லாத அனைத்துக் குரல்களும் நமக்கு வெறும் சத்தமே. ஆக, ஆவியாரோடு கொண்டுள்ள நெருக்கம் ஆவியாரின் குரலைக் கண்டுகொள்ள நம்மைத் தயார்செய்கிறது.

இரண்டு, ஒதுக்கி வையுங்கள்.

மகாபாரதத்தில், போருக்கு யாரைத் தலைவராக நிர்ணயிப்பது என்று கௌரவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, தன் பெயரை துர்யோதணன் முன்வைப்பார் என்று கர்ணன் நினைத்துக்கொண்டே இருப்பார். ஆனால், பீஷ்மரின் பெயர் முன்வைக்கப்படும். தன் பெயர் முன்மொழியப்படாததால் கோபப்பட்டு, கோபத்தை சோகமாக அடக்கிக்கொள்வார் கர்ணன். ஆனால், போரின் நடுவில்தான் துர்யோதணன் சொல்வார், 'கர்ணா! உன்னை நான் இந்த நேரத்திற்காக ஒதுக்கி வைத்தேன். எல்லாரும் என்னைவிட்டுப் போகும் நிலையில் நீ என்னோடு இருக்க உன்னை நான் ஒதுக்கி வைத்தேன்' என்பார். அப்போது, கர்ணன் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போவார்.

உப்புமாவில் கறிவேப்பிலை, வெண்பொங்கலில் மிளகு போல ஒதுக்கிவைக்கப்படுவது நமக்கு வருத்தம் தரும். ஆனால், திருமணத்திற்கான பட்டாடை, நறுமணத் தைலம் என்று நாம் ரிசர்வ் செய்யப்படுவது நம் மதிப்பைக் கூட்டும். கடவுள் திருத்தூதர்களின் மதிப்பைக் கூட்டுகிறார்.

கடவுள் நம்மையும் ஒவ்வொரு பணிக்காக ஒதுக்கி வைத்திருக்கின்றார். 'அது எப்போது? எங்கே?' என்பது சில நேரங்களில் நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால், 'இதோ இப்போது! இதோ இங்கே!' என்று அவர் சொல்லும் அந்த நேரம் நாம் மிகவே ஆச்சர்யப்படுவோம்.

2 comments:

  1. கடவுள் நம்மையும் ஒவ்வொரு பணிக்காக ஒதுக்கி வைத்திருக்கும், நேரம், இடம், சந்தர்ப்பம், இவற்றை பொறுமையுடன் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றலை இறைவா! எமக்கு தா!...
    நன்றி
    🙏.

    ReplyDelete
  2. இனம் புரியாத ஒரு வெறுமை இன்று காலை முதல் என்னுள். இன்றையப்பதிவைப் படித்தவுடன் ஒரே ஆச்சரியம்...எனக்காகவே எழுதப்பட்டுள்ளது போன்று உணர்ந்தேன். ஆம்! தந்தையின் எழுத்துக்களில் பரிசுத்த ஆவியே என்னிடம் ஏதோ கிசுகிசுப்பது போல் உணர்ந்தேன்.கண்டிப்பாக நமக்கு நெருக்கமானவர்கள், நம்மீது கரிசனை கொண்டவர்கள் வாயிலாக தூய ஆவியாரின் குரல் நம் செவிகளை வந்தடைய முடியுமென்பது பலருக்கு அனுபவமாக இருக்கும். .அவர் நமக்காக வைத்திருக்கும் திட்டம் நாம் நினையாத நேரத்தில் “இதோ இப்போது! இதோ இங்கே! “ என்று நம்மைத் தேடிவரும் என்பதும் உண்மையே! தூக்கி எறியப்படும் கறிவேப்பிலைக்கும், மிளகுக்கும் இணையான திருத்தூதர்கள் மற்றும் நம் வாழ்க்கையை திருமணப்பட்டாடை மற்றும் நறுமணத்தைலம் ரேஞ்சுக்கு உயர்த்த வல்லவர் இறைவன் மட்டுமே! எனும் இனிய செய்திக்காகத் தந்தையை எத்தனை புகழ்ந்திடினும் தகும்!!!

    மகாபாரத்த்தின் துரியோதணன் உதிர்க்கும் “ கர்ணா! உன்னை நான் இந்த நேரத்திற்காக ஒதுக்கி வைத்தேன்.எல்லோரும் என்னை விட்டுப்போகும் நிலையில் நீ என்னோடு இருக்க உன்னை நான் ஒதுக்கி வைத்தேன்.” எத்தனை அருமையான...அழகான வார்த்தைகள்! நம்மை இறைவன் யாருக்காக,எதற்காக ஒதுக்கி வைத்திருக்கிறார்... கண்டறிய முற்படுவோம். வாசகர்களை யோசிக்க வைக்கும் அழகானதொரு பதிவிற்காகத் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete