Wednesday, May 22, 2019

ஒரே உள்ளமும் உயிரும்

இன்றைய (23 மே 2019) முதல் வாசகம் (திப 15:7-21)

ஒரே உள்ளமும் உயிரும்

வட இந்தியாவில் ஒரே உயிரும், இரு உடலும் கொண்ட 'சியாமிஸ் இரட்டையர் சகோதரிகள்' வாக்களிக்க வந்த நிகழ்வும், முதல் முறையாக ஒரே உயிர் இருந்தாலும், இவர்கள் இருவர் என்ற அடிப்படையில் இருவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது என்றும் கடந்த நாள்களில் பெருமையாகப் பேசப்பட்டது.

இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கிறது. புதிய நம்பிக்கையைத் தழுவியிருக்கும் புறவினத்து இனியவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று சிலர் நிர்பந்திக்க, அதைப் பற்றிய திருத்தூதர்களின் கருத்தைக் கேட்பதற்காக பவுலும், பர்னபாவும் எருசலேம் செல்கின்றனர்.

அங்கே திருத்தூதர்கள் இவர்களை வரவேற்கின்றனர். இவர்களின் செயல்களைப் பற்றிக் கேட்டறிகின்றனர். தொடக்க காலத்தில் எருசலேம் திருச்சபைதான் முதன்மையான திருச்சபையாக இருந்தது. அதன் தலைவராக யாக்கோபு இருந்தார். உரோமைத் திருஅவை முதலிடம் பெற்றது அரசியல் காரணங்களுக்காகவே என்பது வரலாறு.

பேதுருவும், யாக்கோபுவும் எருசலேம் சங்கத்தில் ஆற்றும் உரைகளைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கேட்கிறோம்.

முதலில், இவர்கள் இருவரின் பரந்த உள்ளம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அதாவது, பவுலும் பர்னபாவும் தங்கள் பணிகளைப் பகிர்ந்துகொண்ட போது இவர்கள் பொறாமைப்படவோ, போட்டியுணர்வுகொள்ளவோ இல்லை. மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, அடுத்தவர்களின் வெற்றியை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதற்கு பெரிய உள்ளம் தேவை. அது இவர்களிடம் இருக்கிறது.

தொடர்ந்து, பேதுரு, 'நம் மூதாதையரோ நாமோ சுமக்க இயலாத நுகத்தை இப்போது நீங்கள் இந்தச் சீடருடைய கழுத்தில் வைத்துக் கடவுளை ஏன் சோதிக்கிறீர்கள்?' எனக் கேட்கின்றார். புறவினத்துச் சீடர்களைத் தன்னைப் போல அல்லது தன் இடத்தில் வைத்துப் பார்க்கிறார். நான் அந்த இடத்தில் இருந்தால் எப்படி நினைப்பேன்? என்று தன்னை சீடர்களின் காலணிகளுக்குள் நிறுத்துகிறார் பேதுரு. மேலும், இப்படி எளியவருக்கு துன்பம் தருவது கடவுளையே சோதிப்பதாகவும் என்ற இறையச்சமும் பேதுருவிடம் இருக்கிறது.

அடுத்ததாக, யாக்கோபு, இறைவாக்கு நூல்களைச் சுட்டிக்காட்டி, அனைவருக்கும் ஆண்டவரின் இல்லத்தில் இடம் உண்டு என்று சொல்வதோடு, அவர்கள் பின்பற்ற வேண்டிய சில ப்ராக்டிகல் விடயங்களை மட்டும் சொல்கிறார். 'கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுத்தல் ஆகாது!'

இவ்வாறாக, இவர்கள் இருவருமே பிறரைக்குச் சுமையாகவோ, தொல்லையாகவோ இருக்கக் கூடாது என்று ரொம்ப சென்ஸிட்டிவாக இருக்கின்றனர். 'சென்ஸிட்டிவிட்டி' அல்லது 'பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்தல்' ஒரு உன்னதமான கொடை.

இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை வழியாகச் சொல்கிறார் இயேசு: 'என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவும்.' மகிழ்ச்சி என்ற உணர்வு நிறைவு பெறுவது இயேசு அங்கே இருக்கும்போதுதான். எல்லாரிடமும் அந்த இயேசுவைப் பார்க்கின்றனர் திருத்தூதர்கள்.

1 comment:

  1. அழகான,அர்த்தமுள்ள ஆங்கில வரிகளுடன் தன் பதிவைத் தொடங்கியுள்ளார் தந்தை.அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது!? சிலரைப்பார்த்திருப்போம்.எப்பவுமே முகத்தில் ஒரு இறுக்கத்தோடு இருப்பதை.இவர்கள் தங்கள் உணர்வுகளையும் பிறருக்கு வெளிக் காட்ட மாட்டார்கள்; அதேபோல் எதிராளியின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளமாட்டார்கள். உண்மைதான்...தந்தை சொல்வது போல் ‘ சென்ஸிட்டிவிட்டி’ அல்லது ‘பிறருடைய உணர்வுகளைப் புரிந்து கொள்தல்’ என்பது உன்னதமான கொடை. பேதுருவும்,யாக்கோபும் சொல்வதுபோல போட்டியும்,பொறாமையுமற்ற,அடுத்தவரின் வெற்றி குறித்து மகிழக்கூடிய, கடவுளின் மக்களுக்குத் தொல்லை கொடுக்காத ஒரு ‘இதயத்தை தா!’ என்று இறைவனை இறைஞ்சுவோம். அன்றாட வாழ்வில் ‘மனிதம்’ காக்கப்பட நாம் மேற்கொள்ளக்கூடிய அழகான கருத்துக்களை எடுத்துரைத்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete