Wednesday, May 29, 2019

கூடாரத் தொழில்

இன்றைய (30 மே 2019) முதல் வாசகம் (திப 18:1-8)

கூடாரத் தொழில்

'ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்' என்பது தமிழ் பழமொழி. எந்த மாடும் ஆடுவதில்லை. எந்த மாடும் பாடுவதில்லை. ஒருவேளை அசைகிற மாட்டை ஆடுகிற மாடும், கத்துகின்ற மாட்டை பாடுகின்ற மாடு என்று நம் முன்னோர்கள் சொன்னார்களோ?

தன் நற்செய்தி அறிவிப்புப் பணியில் பவுல் இந்த முறையைத்தான் தான் பயன்படுத்துகிறார். கொரிந்து நகரத் திருச்சபைக்குத் தான் எழுதிய முதல் திருமடலில், 'எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:22) என மார்தட்டுகிறார் பவுல்.

இவர் எப்படி எல்லாருக்கும் எல்லாமானார் என்பதைத்தான் இன்றைய முதல் வாசகம் சொல்கிறது. எப்படி?

அக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கணவன்-மனைவி ஆவர். இவர்கள் பிறப்பால் யூதர்கள். உரோமையில் குடியேறிய இவர்கள் கிளவுதியு மன்னனின் ஆணைக்கிணங்க இத்தாலியைவிட்டு வெளியேறி கொரிந்தில் குடியேறுகின்றனர். இவர்கள் தொழில் கூடாரம் செய்வது. கூடாரம் செய்வது எப்படிப்பட்ட வேலை என்பது சரியாகத் தெரியவில்லை. தற்காலிகக் கூடாரம் அமைப்பவர்களா அல்லது நிரந்தரக் கூடாரம் அமைப்பவர்களா, கூரை வேய்பவர்களா, அல்லது கூடாரத் துணி நெய்பவர்களா, கூடாரத்திற்கான ஓலை பிண்ணுகிறவர்களா, அல்லது வீடு கட்டுபவர்களாக - எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

இங்கே, கணவனும் மனைவியும் ஒரே வேலையைச் செய்கின்றனர். ஆக, இந்தச் சமுதாயத்தில் பெண் வேலையில் ஆணுக்குச் சமமாக இருந்திருக்கிறாள். இவர்களைச் சந்திக்கின்ற பவுல் இவர்களோடு தங்குகின்றார். இவர்களோடு இணைந்து கூடாரத் தொழில் செய்கின்றார். பவுல் எவ்வளவு ஆண்டுகள் செய்தார் என்பது தெரியவில்லை. ஆனால், எதற்காகச் செய்தார் என்பது தெரிகிறது. அதாவது, தன்னுடைய செலவிற்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்மதிப்புடன் அதைத் தானே சம்பாதிக்கிறார் பவுல். ஒருவேளை அக்கிலாவும்-பிரிஸ்கில்லாவும் ஏழைகளாக இருந்திருக்கலாம். அவர்களுக்குத் தான் சுமையாக இருக்கக் கூடாது என்ற நிலையில் தனக்குரிய உணவை உண்ணத் தானே உழைத்திருக்கலாம் பவுல்.

பவுலின் இந்தத் தன்மதிப்பும், யாருக்கும் எதிலும் கடன்படக் கூடாது அல்லது யாருக்கும் சுமையாய் இருக்கக் கூடாது என்ற உணர்வும் நாம் இன்று கற்றுக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது.

இன்று சில நேரங்களில் அருள்பணி செய்பவர்கள் தங்கள் அருள்பணி நிலையை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு, தங்களின் அருள்பணிக்காக மற்றவர்களின் சுமைகளைக் கூட்டும் நிலை சில இடங்களில் இருக்கிறது. தான் திருத்தூதுப்பணி செய்தாலும், அப்பணிக்கு உரிய ஊதியத்திற்கு உரிமை பெற்றிருந்தாலும் பவுல் மற்ற வேலையையும் செய்கின்றார். மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் செய்யும் வேலையை அவர்களின் வாழ்விற்கு அர்த்தம் கொடுக்கிறது.

'என் வாழ்க்கை என் கையில்' என பவுல் முதல் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்.

இரண்டாவதாக, பவுலின் பழகும் திறன்.

இன்று நாம் ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். மாலையில் வீட்டுக்கு வந்து, 'இன்று அந்த வீட்டில் யாரும் என்கூட பேசவில்லை. அல்லது யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை' என்று புலம்புகிறோம். ஆனால், 'நாம் அங்கே எத்தனை பேரோடு பேசினோம்? எத்தனை பேரைக் கண்டுகொண்டோம்?' ஆக, பழகுவதற்கான முயற்சியை நாம் முதலில் எடுக்க வேண்டும். இதைத்தான் செய்கிறார் பவுல்.

அக்கிலா-பிரிஸ்கில்லா வீட்டில் இருந்தாலும் அங்கிருக்கிற தொழுகைக்கூடத் தலைவரையும் நண்பராக்குகின்றார் பவுல். அந்த நட்பின் வழியாக அவரையும் நம்பிக்கையாளராக மாற்றுகின்றார் பவுல்.

முதலில், உழைப்பு.

இரண்டாவது, பழகும் திறன்.


1 comment:

  1. “ செய்யும் தொழிலே தெய்வம்” எனும் முதுமொழிக்கு அர்த்தம் சேர்க்கும் ஒரு பதிவு. கூடார வேலை செய்து வாழ்க்கை நடத்திய அக்கில்லா- பிரிஸ்கில்லா தம்பதியைப் பவுலடியாரோடு அழகாக்க் கோர்க்கிறார் தந்தை.தான் தங்கியிருக்கும் வீட்டாருக்கு சுமை சேர்க்க விரும்பாத பவுல்,அவர்களுடன் சேர்ந்து அவருடைய ஜீவனத்திற்குத் தானே உழைத்தது போற்றப்பட வேண்டிய குணமெனில்,தம் இல்லம் தேடிவந்த ஒருவரைத் தம்மவராக சேர்த்துக்கொண்ட அக்கில்லா- பிரிஸ்கில்லா தம்பதியரும் போற்றுதற்குரியவரே!
    இப்பொழுதெல்லாம் ஒரு ஐந்தாறு பேர் சேரும் கூட்டங்களில் கூட, ஒரு புதியவரைப் பார்த்து புன்னகைக்க எண்ணுகையில்,அவரைக்குறித்த ஒரு சந்தேகமும் கூடவே எழுந்து நம்மை திசை திருப்புவதும் நமக்குப் புதிதான விஷயமல்ல. இதை ‘ விவேகம்’ என்று சொல்பவரும் உளர். ஒரு புதியவரைப்பார்க்கையில் நம் உள்ளத்தின் ஓரத்தில் எழும் எண்ணங்களைப் புன்சிரிப்பாகவும்,வார்த்தையாகவும் அவரிடம் பரிமாறும் போது மட்டுமே அந்த எண்ணங்கள் அர்த்தம் பெறுகின்றன. இன்றைய நம் நாயகன் நமக்குச்சொல்லும் உழைப்பு மற்றும் ஒருவருடன் பழகும் முறை..... இவற்றை நம் வாழ்விலும் பின்பற்றி நடந்தால் தந்தை சொல்லும் “ நம் வாழ்க்கை நம் கைகளில் தான்” அழகான பாடங்கள் தரும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!.

    ReplyDelete