Friday, October 22, 2021

மனமாற்றத்திற்கான நேரம்

இன்றைய (23 அக்டோபர் 2021) நற்செய்தி (லூக் 13:1-9)

மனமாற்றத்திற்கான நேரம்

இயேசுவின் சமகாலத்தில் ஒருவர் செய்த பாவத்திற்கு அவர் உடனடியாகத் தண்டிக்கப்படுவார் என்றும், ஒருவருக்கு நேர்கின்ற விபத்து மற்றும் ஆபத்துகளுக்கு அவருடைய பாவச் செயல்களே காரணம் என்றும் மக்கள் புரிந்துகொண்டனர். இதே புரிதலை முன்வைத்து சில இடங்களில் இன்றும் போதகர்கள் போதிக்கின்றனர். கடவுள் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை என்ற புரிதல் நமக்கு அவசியம்.

இயேசுவைப் பொருத்தவரையில், விபத்துகள் மற்றும் ஆபத்துகள் இயல்பாக நடக்கக் கூடியவை. மேலும், அவற்றால் ஒருவர் பலியானார் என்றால் அதற்குக் காரணம் அவர் பாவி என்பது அல்ல. அதே வேளையில், நமக்கு விபத்தும் ஆபத்தும் எந்த நேரமும் வரலாம் என்ற நிலையில் உடனடியாக மனமாற்றம் அடைய வேண்டும்.

இரண்டாம் பகுதியில், மூன்று ஆண்டுகளாகக் கனி கொடாத அத்தி மரத்திற்கு மீண்டும் ஒரு வருடம் அவகாசம் கேட்கின்றார் தொழிலாளர். இது உருவகமாக இயேசுவின் போதனையைக் கேட்டு மனம் மாறாதவர்களைக் குறித்தாலும், இன்னொரு பக்கம் கடவுளின் பொறுமையையும் காட்டுகின்றது. கடவுளின் பொறுமை நம் மனமாற்றத்திற்கான நேர அவகாசமே.

இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கும் பாடங்கள் எவை?

(அ) ஒருவரின் இல்லாமை மற்றும் இயலாமை கண்டு அவரைப் பாவி எனச் சாடுதல் தவறு.

(ஆ) மனமாற்றத்திற்கான வாய்ப்பு இன்றே, இப்போதே வழங்கப்படுகிறது என்ற நிலையில், நாம் உடனடியாக நம்மை மாற்றிக்கொள்வது.

(இ) கடவுள் நமக்கு எப்போதும் இரண்டாம் வாய்ப்பை வழங்குகின்றார். எப்படியாவது கொத்தி எருப்போட்டு நம்மைக் கனிகொடுக்க வைக்க முயற்சி செய்கின்றார். அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வது நலம்.


1 comment:

  1. சில சமயங்களில்…நமக்கு அறிமுகமான சிலர் கஷ்டங்களுக்கு ஆளாகும்போது “ அவன் போட்ட ஆட்டத்திற்கு இது தேவைதான்” என்று சொல்லக்கேட்டிருப்போம். இந்த எண்ணம் தவறு; ஒருவரின் இல்லாமை அல்லது இயலாமை கண்டு அவர் பாவி எனச் சாடுதல் தவறு என்று சொல்ல வருகிறன்றன இன்றைய வாசகங்கள்.கனிகொடாத ஒரு மரத்தைப் புறந்தள்ளாமல்,அதைக்கொத்தி எருவிட்டு,அடுத்த பருவத்தில் கனிகொடுக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஒரு நல்ல …பொறுமை காக்கும் தோட்டக்காரராக செயல்படுவரே நம் விண்ணகத்தந்தை. தவறு செய்த அனைவருக்கும் ஒரு இரண்டாம் வாய்ப்பு கிடைப்பதில்லை.ஆனால் கிடைக்கும் பட்சத்தில் அதை ஒரு பொக்கிஷமாய் ஏற்று நாம் பாதை மாறுவதே விவேகம்! கருத்துமிக்க ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete