Thursday, November 1, 2018

இறந்த விசுவாசிகள்

நாளைய (2 நவம்பர் 2018) திருநாள்

இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு

நாளைய இறந்த நம் முன்னோர்களின் நினைவைக் கொண்டாடுகிறோம்.

நாளைய இரண்டாம் வாசகம் (உரோ 5:5-11)ஐ மையமாக வைத்து இந்த நாளின் பொருளை அறிந்துகொள்ள முயல்வோம்.

உரோமை 5:5ஐ கொஞ்சம் முன்னால் நீட்டிக்கொள்வோம்:

'... ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும்,
மன உறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என காத்திருக்கிறோம்.
அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது.'

துன்பம் - எல்லா வகையான வலி, கஷ்டம், எடுக்க வேண்டிய முடிவுகள், அந்த முடிவுகள் அடுத்தவர் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம்.

மன உறுதி - அதாவது, கையில் காயம் பட, காயம் பட எப்படி கை மரத்துப் போகிறதோ (உறுதி பெறுகிறதோ), அது போல அல்லதை மறுத்து, நல்லதைச் செய்வதால் நம் மனம் அடையும் உறுதியான நிலை.

தகைமை - ஆங்கிலத்தில், கேரக்டர். 'கேரக்டர் இஸ் வாட் யூ ஆர் இன் தெ டார்க்' என்பார்கள். அதாவது, யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கும்போது நாம் எப்படி இருக்கிறோமோ அதுதான் நம் கேரக்டர். சாப்பாட்டு அறையில் எல்லாரும் இருக்க கரண்டியால் காய்கறியை எடுக்கும் நான், சுற்றிமுற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லை என்று தெரிந்து, என் கையால் பாத்திரத்தில் இட்டு எடுக்கிறேன் என்றால், அங்கே தூய்மை என்பது குணநலன் அல்லது குணம் அல்ல. மாறாக, அது நான் அடுத்தவர்களுக்காக அணியும் முகமூடி. ஆக, இயல்பாகவே என்னுள் உள்ள குணம்.

எதிர்நோக்கு - அதாவது, எதிர்நோக்கு இருந்தால் மட்டுமே நம்மால் வாழ முடியும். எதிர்நோக்கு என்றால் காத்திருத்தல். நான் நல்லது செய்யும்போது அடுத்தவர் என்னைப் பாராட்டுவார்கள் என்ற சின்ன எதிர்நோக்கிலிருந்து, இறைவன் எனக்கு விண்ணகம் தருவார் என்ற பெரிய எதிர்நோக்கு வரை அனைத்தும் எதிர்நோக்குதான்.

நாளைய முதல் திருப்பலியில் நாம் வாசிக்கும் நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 25:31-46) ஆண்டவர் - அரசர் - வலப்பக்கமும் இடப்பக்கமும் மனிதர்களைப் பிரித்து அவர்களோடு உரையாடுவதையும், அந்த உரையின் பின்புலத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்படுவதையும் பார்க்கிறோம்.

பசித்தோர்க்கு உணவு, தாகமுற்றோருக்கு தண்ணீர், அந்நியருக்கு வரவேற்பு, ஆடையற்றவருக்கு ஆடை, நோயுற்றோருக்கு கவனிப்பு, சிறையில் இருந்தவரைச் சந்தித்தல் என செயல்கள் செய்யப்படுவது தனக்கே செய்யப்படுவதாகச் சொல்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் எதிர்பார்க்கும் செயல்கள் எதுவும் நாம் செய்யும் செயல்கள் பட்டியலில் இல்லை: சமைப்பது, உண்பது, படிப்பது, வேலைக்குச் செல்வது, திருமணம் செய்வது, அருள்பணி ஏற்பது, டிவி பார்ப்பது என நாம் செய்யும் எந்தச் செயலும் ஆண்டவரின் லிஸ்டில் இல்லை. ஏனெனில், இவை அனைத்தும் செய்பவர் மையச் செயல்கள். ஆனால், ஆண்டவர் குறித்துக்காட்டும் செயல்கள் பிறர்மையச் செயல்கள்.

எல்லாரும் பிறர்மையம் கொண்டிருக்க வேண்டும் என்றால், அடுத்தவர்கள் எதற்காக இருக்கிறார்கள்? என்ற கேள்வியும் இங்கே வருகிறது.

ஆனால், ஆண்டவர் காட்டும் செயல்களைச் செய்வது செய்பவருக்குத் துன்பம் தருகிறது.

இத்துன்பம் மனவுறுதியையும், இம்மனவுறுதி தகைமையையும், இத்தகைமை எதிர்நோக்கையும் தருகிறது.

எதிர்நோக்கு நமக்கு ஏமாற்றம் தராது. ஏனெனில் அவர் நம்மை வலப்பக்கம் கூட்டிக்கொள்வார்.

இவ்வுலகில் துன்பம் அனுபவிக்காதவர்கள், உத்தரிக்கிற நிலையில் சிறிதுகாலம் துன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது நம் திருஅவையின் போதனை. ஆக, பாதி வழி வந்த இவர்களை மீதி வழி நகர்த்துகிறது இவர்கள் சார்பாக நாம் மேற்கொள்ளும் துன்பங்கள். துன்பங்களை நாம் பட்டு பலன்களை இவர்களுக்குக் கொடுக்கிறோம். இந்த ஒன்றே நம்மை புனிதர்கள் ஆக்கிவிடுகிறது.

ஏனெனில், பவுல் சொல்வதுபோல, 'ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால் இயேசு பாவிகளுக்காக உயிர் கொடுத்தார்.' உத்தரிக்கிற நிலையில் இருப்பவர்களுக்காக நாம் துன்பப்படும்போது நாம் அவர்களுக்கு உயிர்கொடுக்கிறோம்.

'உத்தரிக்கிற நிலை ஆன்மாக்களே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!' என சில ஆலயங்களில் நான் கேட்டதுண்டு.

இந்த ஆன்மாக்கள் ஆண்டவரைப் பார்த்துவிட்டன. ஆனால் பாதி வழியில் நிற்கின்றன.

அவரைப் பார்த்துவிட்டதால் இவர்கள் பாக்கியசாலிகள்.

பாதிவழி நிற்பவர்கள் மீதி வழி நகர்த்தப்படும்போது, நாமும் கொஞ்சம் நம் துன்பம், மனவுறுதி, தகைமை, எதிர்நோக்கு பற்றி கருத்தாய் இருத்தல் நலம்.

2 comments:

  1. " ஆண்டவர் எதிர்பார்க்கும் செயல்கள் எதுவும் நம் பட்டியலில் இல்லை; நாம் செய்யும் எந்தச் செயலும் ஆண்டவர் எதிர்பார்க்கும் லிஸ்டில் இல்லை" என்கிறார் தந்தை.ஏன் இல்லை? எனும் கேள்வி என்னுள் எழுகிறது. என்னுடைய அன்றாட வேலை என்று நான் செய்யும் பல செயல்கள் பிறர்மையம் கொண்டது தானே! பின் எதற்கு " பிறர் மையச் செயல்களென" தனியான லேபிள் குத்த வேண்டும்? ஆண்டவருக்காகவென நாம் செய்யும் செயல்கள் நமக்கு அந்த நிமிடத்தில் வேண்டுமெனில் சில உபாதைகளைத்தரலாம்...ஆனால் அவற்றுக்குப்பின்னால் நமக்குக்கிடைக்கப்போகும் மன உறுதி,தகைமை,எதிர்நோக்கு என்பவை நமக்கு உந்துசக்தியைத தரும் பட்சத்தில் எதுவுமே துன்பமில்லை என்று சொல்கின்றன விவிலிய வரிகள்.இறுதியாக நாம் அணியப்போகும் மணிமுடி ஒன்றே நம் கண்களுக்குத்தெரியும் பட்சத்தில் எதுவும் இலகுவே! இவ்வுலகில் துன்பத்தை நாம் தழுவ்வில்லை எனில் 'உத்தரிக்கிற நிலை' ஒன்றிலிருந்து நாம் தப்ப முடியாது என்பதும்,பாதி வழி வந்த இவர்களை மீதி வழி நகர்த்துவது இவர்களுக்காக நாம் செய்யும் செபங்களும்,படும் துன்பங்களும் என்று தந்தை சொல்வது பலரால் மறுக்கப்படும் கருத்து எனினும் அதுவே உண்மை என்பது எங்களைப்போன்றவர்களில் உதிரத்தில் ஊறியுள்ள கருத்து. பாதிவழியில் நிற்பவர்களைப் 'பாக்கியசாலிகள்'ஆக்கும் நாமும்கூட பாக்கியசாலிகளே! அவர்களை நம் செபத்தில் என்றும் நினைவு கொள்வதை நம் கடமையாக்க்கொள்வோம்.....
    பி.கு என் கண்களையும், கருத்தையும் கண்ணீரில் மிதக்க வைக்கும் ஒரு பதிவை இன்று எதிர்பார்த்தேன்.ஆனால் தந்தை முழுக்க முழுக்க ஒரு ஆன்மீக ரேஞ்சுக்கு ஆக்கிவிட்டார்.ஆனால் ஒன்று....இன்றையத் தலைமுறையினர் ஒத்துக்கொள்ள மறுக்கும் ' உத்தரிக்கிற நிலை" குறித்த தந்தையின் கருத்துக்கள் அவர்களின் உள்ளங்களத்தட்டும் என்பது உறுதி.தந்தையின் "மெகா முயற்சி" க்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. "நாமும் கொஞ்சம் துன்பம், மனவுறுதி, தகைமை, எதிர்நோக்கு பற்றி கருத்தாய் இருத்தல் நலம்."
    நன்று.... நன்றி.

    ReplyDelete