Thursday, April 30, 2020

யோசேப்பு

இன்றைய (1 மே 2020) திருநாள்

யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர்

தொழிற்சாலைகள் இன்று முடங்கி, பல தொழிலார்கள் தங்களுடைய இல்லங்களிலிருந்து வேலை செய்ய, சில தொழிலார்கள் தொழில் செய்ய முடியாமல் இருக்க, இன்னும் சிலர் தங்கள் தொழில்களை இழந்து நிற்க, இந்த மே தினம், மௌனமாக நம்மிடமிருந்து நகர்கிறது.

உழைப்பு, தொழில், வேலை, பணி, செயல் என நாம் பல பெயர்கள் இட்டாலும் இவை சுட்டிக்காட்டுவது ஒன்றைத்தான்.

'மனிதன் ஒரு தொழிலாளி' என்று மனிதனை வரையறை செய்கிறார் மாற்கு.

இன்று, தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித யோசேப்பின் திருநாளைக் கொண்டாடுகிறோம். யோசேப்பு தச்சுத் தொழில் செய்பவராக நாம் பல ஓவியங்களைப் பார்த்திருக்கிறோம். யோசேப்பு தச்சுத் தொழில் செய்தார் என்பது மாற்கு நற்செய்தியிலும், யாக்கோபின் முன்நற்செய்தி எனப்படும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூலிலும் காணக்கிடக்கிறது.

மனிதர்களின் பாவத்தால் தொழில் அல்லது வேலை வந்தது எனப் பலர் சொல்வதுண்டு. மனிதர்களின் வீழ்ச்சியால் வந்தது அல்ல தொழில். மனிதர்களை எழுச்சிபெற வந்ததே தொழில்.

விவிலியம் வேலை அல்லது தொழிலை எப்படி புரிந்துகொள்கிறது?

1. வேலை என்பது கடவுளின் பெரிய திட்டத்தின் ஒரு பகுதி (காண். தொநூ 1, 2, எசா 65).

2. நாம் வேலை செய்யும்போது கடவுளின் உடன் படைப்பாளர்கள் ஆகின்றோம் (காண். தொநூ 1:27, 2:5, 2:15, எபே 2:10)

3. கடவுள் நமக்குத் திறன்கள், ஆற்றல்கள், மற்றும் கொடைகளைக் கொடுத்து, சில குறிப்பிட்ட ஆளுமை நிலைகளில் பணியாற்றவும், செயல்படவும் அழைக்கிறார் (காண். விப 31:1-5, மத் 25:14-30)

4. தரம், குணம், மற்றும் அறநெறி ஆகியவை தொழிலின் அடித்தளங்கள் (காண். மத் 25:21, கொலோ 3:23-24, எரே 17:10)

5. நம் வேலை கிறிஸ்துவின் நுகத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது (காண். 2 கொரி 6:14-15, மத் 11:29-30)

6. பிறரன்பும், பிறர்பணியுமே நம் வேலையின் இலக்காக இருக்க வேண்டும் (காண். 2 கொரி 5:16-21, மாற் 12:31, மத் 7:12, பிலி 2:3-4)

7. உழைப்பும் ஓய்வும் மாறி மாறி வரக்கூடிய வாழ்வியல் முதன்மைகள் (காண். விப 20:8-11, யோவா 15:4, எபி 4:10, 1 யோவா 3:19)

8. செல்வம் மற்றும் முதலீடுகள் இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்ல வேண்டும் (காண். 1 கொரி 4:7, 1 திமொ 6:17-19, திப 2:45)

9. கடவுளின் பணி உறவுநிலைகள் வழியாகப் பலுகி பெருகுகிறது (காண். 1 திமொ 3:15, தீத் 2:3-8, இச 6:4-9)

10. பணி அல்லது தொழில் அல்லது வேலை கடவுளின் கொi (காண். சஉ 5:19, 4:4, 2:4-11)

நாம் நம்முடைய ஓய்விற்காக அல்ல, நாம் செய்த பணிக்காகவே, வேலைக்காகவே நினைவுகூரப்படுவோம்.

உழைப்பே இந்த உலகை நகர்த்துகிறது என்பதை அறிந்தவரும், தன் மகன் இயேசுவுக்கு அறிவித்தவரும் நம் திருவிழா நாயகன் வளன்.

நற்செயல்: நம் உழைப்பால், வேலையால், தொழிலால் நாம் அடைந்துள்ள அக, புற மாற்றங்களை எண்ணிப் பார்த்தல்.


1 comment:

  1. இன்று எங்களது பங்கின் பாதுகாவலர்....பார் போற்றும் சூசை...உழைப்பாளர்களின் உறவினர்... ஆடம்பரமாக வீதிகளில் எடுத்துச்செல்ல வேண்டியவர் பூட்டிய ஆலயத்திற்குள் சலனமின்றி நிற்கிறார் என்பது எம் மனத்தைக் கனக்க வைக்கிறது.மனிதன் ஒரு ’தொழிலாளி’ எனவும் ’மனிதர்கள் வீழ்ச்சி பெற அல்ல....எழுச்சி பெறவே வந்தது தொழில்’ என்கிறார் தந்தை.தந்தைக் குறிப்பிடுள்ள தொழில் குறித்த விவிலிய சாராம்சங்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவையே எனினும் எனக்கு நெருக்கமாகப் படுவது 2,6,9 மற்றும் 10. ”நாம் நம் ஓய்விற்காக அல்ல...பணிக்காகவே நினைவு கொள்ளப்படுவோம்.” பசைவைத்து மனத்தில் ஒட்டிக்கொள்ளும் வரிகள். தொழிலை இழந்து,தொழிற்சாலைகளை இழந்து வருமானம்...ஏன் அனைத்தையுமே இழந்து நிற்கும் நம் மக்களுக்காக வளனாரைத்துணைக்கழைப்போம்.

    கண்டிப்பாக கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்க்கையில் இப்பொழுதுள்ள என் வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளது பல.ஒருசில வீட்டுவேலைகளை மட்டுமே செய்து பழக்கப்பட்ட நான், அத்தனையும் என் தலையில் விழுந்த போது மூச்சுமுட்டி நின்றதும், இப்பொழுது என்னாலும் முடியும் என்று அனைவரும் என்னைப் பெருமையுடன் சிலாகிப்பதும் எனக்குப் புதிதான விஷயங்கள்! என் மனமும்.உடலும் திடம் கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

    தந்தைக்கும், அனைவருக்கும் புனித.வளனாரின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete