Sunday, April 26, 2020

எப்போது இங்கு வந்தீர்?

இன்றைய (27 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 6:22-29)

எப்போது இங்கு வந்தீர்?

இயேசு அப்பம் பலுகச் செய்தபின், வாழ்வுதரும் உணவு பற்றிய நீண்ட உரையைப் பதிவு செய்கின்றார் யோவான். அந்த உரைக்கான முன்னுரையே இன்றைய நற்செய்திப் பகுதி.

இந்த வாசகத்தில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன:

அ. ரபி, எப்போது இங்கு வந்தீர்?

மக்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. தாங்கள் உணவு உண்ட இடத்திலேயே இயேசுவைக் காணலாம் நினைத்து மக்கள் அங்கே வருகிறார்கள். ஆனால், அவரோ அதற்கு நேர் எதிரே உள்ள கப்பர்நாகூம் சென்றுவிட்டார். அங்கு அவரைத் தேடிச் சென்று, அவரைக் காண்கின்ற மக்கள், 'ரபி, எப்போது இங்கு வந்தீர்?' ஆனால், அந்த நேரத்தில் இயேசுவின் மைன்ட் வாய்ஸ், 'நீங்க எப்படா இங்க வந்தீங்க?' என்றும், அல்லது 'நீங்க ஏன்டா இங்க வந்தீங்க?' என்றும் இருந்திருக்கலாம்.

ஆனால், இயேசு இக்கேள்விக்கு விடையளிக்கவில்லை. மாறாக, அவர்கள் வந்ததன் நோக்கத்தை ஆய்வுக்கு உட்படுத்துமாறு அவர்களை அழைக்கின்றார்.

ஆ. எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இக்கேள்வியையும் மக்களே இயேசுவைப் பார்த்துக் கேட்கின்றனர். இது ஒரு நல்ல கேள்வி. ஓபனிங் நல்லாதான் இருக்கு. ஆனா, ஃபினிஷிங்தான் நல்லா இருக்காது. இயேசுவின்மேல் எறிய கற்களை எடுக்க ஆரம்பிப்பார்கள்.

இங்கே இயேசுவின் பதில் நேரிடையாக இருக்கிறது: 'கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்'

நம் சிந்தனைக்கு இன்று, இம்மக்களின் தேடலில் விழுந்த ஓட்டையை எடுத்துக்கொள்வோம்.

அது என்ன தேடலில் விழுந்த ஓட்டை?

முதல் நாள் நிகழ்வு: இயேசு படகில் ஏறவில்லை. சீடர்கள் மட்டுமே ஏறுகின்றார்கள்.

இரண்டாம் நாள் நிகழ்வு: நிறையப் படகுகள் வருகின்றன. ஆனால் அதில் இயேசுவும் இல்லை, சீடர்களும் இல்லை.

இதற்கிடையில் உள்ள ஒன்றை அவர்கள் காணவில்லை. அது என்ன?

'இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்'

இதுதான் அவர்களின் தேடலில் விழுந்த ஓட்டை.

இயேசுவை நேருக்கு நேராகப் பார்த்து அவரைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் அண்ணாந்து பார்க்க மறந்துவிட்டார்கள். அல்லது தங்களுக்கு வசதியான இடத்தில் மட்டும் இயேசுவை அவர்கள் தேடினார்கள்.

ஒருவேளை அவர் மலைக்குச் சென்றதை அவர்கள் கவனித்திருந்தால் இயேசுவைப் பற்றிய பார்வை அவர்களுக்கு மாறியிருக்கும். அவரது அரசாட்சி ஆன்மீகம் சார்ந்தது என எண்ணியிருப்பார்கள்.

கடவுள் இங்கேதான் இருக்க வேண்டும், கடவுள் இப்படித்தான் இருக்க வேண்டும் என மனித அறிவு அவருக்கு வரையறை இடவே விரும்புகிறது.

எனக்கு நானே என்னால் வரையறை இட இயலாதபோது, நான் கடவுளுக்கு வரையறை இடலாமா?

அல்லது நான் மற்றவர்களுக்கு வரையறை இடலாமா?

வரையறைகளை மிஞ்சும் இறைவனை நாம் நம்பினால் போதும். அவர் நம் வரையறைக்குள் வந்துவிடுவார். இதுதான் கடவுளின் வலுவின்மை.

நற்செயல்: நான் எங்கே இருக்கிறேன்? இங்கே நான் எப்படி, எப்போது வந்தேன்? நான் எங்கே போகவேண்டும்? என்ற இலக்கு நிர்ணயக் கேள்விகளைக் கேட்பது.


1 comment:

  1. நமக்கு வசதியான இடத்தில் இயேசு வருவாரென நம்பினால் பல நேரங்களில் நாம் சந்திப்பது ஏமாற்றமே! சரியாகச் சொல்கிறார் தந்தை....எனக்கு நானே வரையறை இட இயலாதபோது தூணிலும்,துரும்பிலும் இருக்கும் கடவுளுக்கு நான் வரையறை இடல் சரியாகுமா? இல்லை அது முடியும் காரியமா? வரையறைகளை
    மிஞ்சும் இறைவனை நம்பினால் போதும்...அவர் நம் வரையறைக்குள் வந்துவிடுவார்...சரிதான்... ஆனால் அதை ஏன் கடவுளின் ‘வலுவின்மை’ என எதிர்எமறையாக்க் கூறவேண்டும்? வலுவின்மையின் வரையறைதான் என்ன? இவ்வுலகின் அகராதியில் ‘வலுவற்றது’ என்பது இயேசுவுக்கும் பொருந்துமா...என்ன? ஒன்றும் புரியவில்லை.

    நான் எங்கே இருக்கிறேன்? பதில் சொல்ல முடிந்த கேள்விதான். எப்படி,எப்போது வந்தேன்? இதுவும் கூட கொஞ்சம் சமாளிக்கக் கூடிய கேள்விதான்.ஆனால் நான் எங்கே போக வேண்டும்? இதற்கு இப்பவா...இல்லை நம் கண்ணுக்குப் புலப்படாத எதிர்காலத்திலா? இப்ப என்றால் சரி.ஆனால் என் வாழ்வின் முடிவில் எனில்...? கண்ணுக்குத்தெரியாத கொரோனாவே இப்ப வருதா அப்ப வருதா என்று படையே நடுங்கையில் நான் என்று ,எங்கே போக வேண்டும்? கண்டிப்பாக என்னை இங்கே அனுப்பியவரிடம் தான்.கொஞ்சம் நேரம் ஒதுக்கிச் செய்வதுபோல் ‘நற்செயல்’ தரும் தந்தை இன்று.....இங்கேயே......இப்பொழுதே செய்ய வைத்துவிட்டார்.நன்று. என் பதில் தான் கொஞ்சம் கசமுசா.... பரவாயில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete