Sunday, April 19, 2020

நிக்கதேம்

இன்றைய (20 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவா 3:1-8)

நிக்கதேம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஓர் இரவில் இயேசுவைச் சந்திக்க வருகிறார் நிக்கதேம். இயேசுவை அடக்கம் செய்யும் நிகழ்விலும் இவர் வருகிறார். இவர் ஒரு பரிசேயர். நிறையக் கற்றவர். ஆளுநர் பிலாத்து வரை ஆள்களைத் தெரிந்தவர்.

இயேசுவிடம் ஓர் இரவில் வருகின்றார்.

யோவான் நற்செய்தியில் உரையாடல்கள் தொடங்கும் பகுதி இதுதான். மேலும், யோவான் நற்செய்தியில், இயேசு, யூதர்கள், புறவினத்தார், சமாரியர்கள், கிரேக்கர்கள், உரோமையர்கள் என்று ஒவ்வொரு வட்டமாக கடந்து செல்வதுபோல யோவான் தன்னுடைய நற்செய்தியைக் கட்டமைக்கிறார். அவ்வகையில், ஒட்டுமொத்த யூதப் பானையின் பதத்துக்கு ஒரு சோறாக வந்தவர்தான் நிக்கதேம்.

மேலும், யோவான் நற்செய்தியில் பொருள் இரண்டு நிலைகளில் நகரும். ஒன்று, மேலோட்டமான நிலை. இரண்டு, ஆழமான நிலை. கதைமாந்தர்கள் பேசும் அனைத்தும் மேலோட்டமான நிலையில் இருக்கும். இயேசு பேசும் அனைத்தும் ஆழமான நிலையில் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இயேசு சமாரியப் பெண்ணிடம், 'நான் வாழ்வுதரும் தண்ணீரை உமக்கு அளிப்பேன்' என்பார். ஆனால் பெண்ணோ, 'உம்மிடம் வாளி இல்லையே! கிணறு ரொம்ப ஆழமானதே!' என்பார்.

இயேசு பிலாத்துவிடம், 'உண்மையை அறிவிக்கவே வந்தேன்' என்பார். ஆனால் பிலாத்துவோ, 'உண்மையா அது என்ன?' என்பார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் அப்படி ஒன்று நடக்கிறது.

இயேசு நிக்கதேமிடம், 'மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது' என்கிறார்.

ஆனால், நிக்கதேம், 'வயதான பின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?' எனக் கேட்கின்றார்.

ஏன் இந்த முரண்பாட்டு இலக்கியக் கூற்றை யோவான் கையாளுகின்றார்?

நற்செய்தியை வாசிக்கும் வாசகர், இயேசுவின் வழிநடத்துதலால் மட்டுமே மேலோட்டமான பொருளிளிலிருந்து ஆழமான பொருளுக்குக் கடந்து செல்ல முடியும் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு கையாளுகின்றார்.

நிக்கதேம் மூன்று நிலைகளில் தனக்குத் தானே முரணாக இருக்கின்றார்:

அ. இயேசுவை, 'கடவுளிடமிருந்து வந்தவர்' என ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரை 'ரபி' அல்லது 'போதகர்' என அழைக்கின்றார்.

ஆ. இயேசுவை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றார். ஆனால், மற்றவர்களுக்கு அஞ்சி இரவில் இயேசுவிடம் வருகின்றார்.
இ. மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்பதை அறிந்துள்ளார். இருந்தாலும் புரியாதவர்போல கேள்வி கேட்கின்றார்.

முரண்கள் நம் வாழ்விலும் இருக்கக் கூடியவை.

முரண்களை நாம் முழுமையாக ஒழித்து ஒற்றைத்தன்மைக்கு கொண்டுவர முடியாது. அப்படிக் கொண்டுவரவும் தேவையில்லை.

இதையே, சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக் கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்' (காண். சஉ 7:18) என்கிறார்.

ஆக, இன்று என் ஆன்மீக வாழ்வில் நான் எதிர்கொள்ளும் முரண்கள் எவை?

நற்செயல்: ஒரு பேப்பர் எடுத்து, அதை இரண்டாகப் பிரித்து, ஒரு பக்கம் நம்மிடம் இருக்கும் நல்ல பண்புகளையும், அதற்கு மறுபுறம் அதற்கு எதிரான நன்மைகுறை பண்புகளையும் பட்டியலிடலாம். இரண்டும் முரண்கள்தாம். ஆனால், இரண்டும் இருக்கும் நாம் முரண் அல்ல. அல்லது ஏன், முரணாகக் கூட இருக்கலாம்?

4 comments:

  1. "நீர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால்,
    அனைத்திலும் வெற்றி பெறுவீர்..."Quite strengthening one.

    நல்ல பண்புகள்....
    நன்மைகுறை பண்புகள் 👍

    அருட்பொழிவு தின வாழ்த்துகள்!🤝

    ReplyDelete
  2. யோவான் நற்செய்தியில் கதைமாந்தர்களின் பேச்சு மேலோட்டமான நிலையிலும்,இயேசுவின் பேச்சு ஆழமான நிலையிலும் இருக்குமெனில் இது பாமரனுக்கு எவ்வாறு போய்ச் சேரும்? இதையே நான் ஒரு முரண்பாடாகப் பார்க்கிறேன்.ஒட்டு மொத்த யூதப்பானையின் பதத்துக்கு ஒரு சோறாக வந்தவர் தாம் நிக்கதேம். தந்தை தரும் முகவுரை அழகு! முரண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார். முரண்கள் முரண்களாக இருப்பதுவே ஒரு அழகுதான்! இதற்கு “ ஆம்” சொல்கிறது சபைஉரையாளரின் வரிகளும்!
    கண்டிப்பாகச்செய்கிறேன்.....ஆனால் இதனால் என்ன பயன் என்று தந்தை கூறினால்! ஏற்கனவே மனத்தளவில் இருக்கும் முரண்பாடுகளை எழுத்தளவில் எழுதிப் பார்ப்பதால் என்ன லாபம்? ஒருவேளை நம் முரண்பாடுகளை கருப்பு வெள்ளையில் பார்க்கையில் கொஞ்சம் கூடுதல் உறுத்தல் இருக்குமோ! இருக்கலாம்.... செய்துதான் பார்ப்போமே!
    ஒரு வித்தியாசமான யுத்தியால் முரண்பாடுகளைக் களையலாம் என்ற வழிசொல்லும் தந்தைக்கு ஒரு சபாஷ்!

    இன்று தன் குருத்துவத் திருப்பொழிவின் 11 ம் ஆண்டை நிறைவு செய்திருக்கும் தந்தைக்கும் அவரின் சகாக்கள் அருட்பணியாளர்கள் இஞ்ஞாசி,வரன்,லாரன்ஸ்,ப்ரின்ஸ், மதன்பாபு மற்றும் டைட்டஸ் இவர்களுக்கு வாழ்த்துக்களும்! செபங்களும்!! இன்றும் என்றும் இறைவனின் உடனிருப்பு இவர்களுக்குத் துணையிருக்க வேண்டுகிறேன்! அன்புடன்...ஆசீருடன்....

    ReplyDelete
  3. பாராட்டுக்கள்.
    நல்ல பண்புகள்....
    நன்மைகுறை பண்புகள் ...
    அருட்பொழிவு தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. ஆழமான நிலையில் பேசுகின்ற யேசுவை அறிந்து, உணர்ந்து, அனுபவித்து, போதித்து, "அவரோடு" உடன் நடக்கும் தந்தைக்கு அருட்பொழிவு தின வாழ்த்துக்களும் ஜெபங்களும்.

    ReplyDelete