Monday, April 27, 2020

பசியே இராது

இன்றைய (28 ஏப்ரல் 2020) நற்செய்தி (யோவான் 6:30-35)

பசியே இராது

நேற்றைய தினம் அருணகிரிநாதரின் சில பாடல்களை வாசித்துக்கொண்டிருந்தேன். முக்திநிலை என்பது மாற்றங்களைக் கடந்த நிலை என்கிறார் அவர்.

அது என்ன மாற்றங்களைக் கடந்த நிலை?

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதும், 'ஒரே ஆற்றுக்குள் இரண்டு முறை இறங்க முடியாது' என்பதும் வாழ்வியல் எதார்த்தம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

பகல்-இரவு, இன்பம்-துன்பம் என வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது.

நம் உடல் மாறுகிறது.

நம் உணர்வு மாறுகிறது.

நம் சிந்தனை மாறுகிறது.

நம் புரிதல் மாறுகிறது.

நம் அறிதல் மாறுகிறது.

ஆனால், மாற்றத்தை விட்டு கடக்கின்ற நிலையை அடைய முடியுமா?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் பேருரை தொடர்கிறது.

'என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.
என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது' என்கிறார்.

பசி-நிறைவு, தாகம்-நிறைவு என வாழ்க்கை மாறுகிறது.

இந்த நாள்களில் நாம் உள்ளடைப்பில் இருக்கின்றோம். இந்த உள்ளடைப்பின் துன்பத்தை நாம் ஏன் பொறுத்துக்கொள்கிறோம்? கொரோனா நம்மைவிட்டுப் போய்விடும் அல்லது நாம் நோயின்றி வாழலாம் என்ற எண்ணத்தில்தாம். ஆக, பலன் எந்த அளவிற்கு கூடுதலாக இருக்குமோ அந்த அளவிற்கு வலியை நாம் தாங்கிக்கொள்கிறோம்.

பசியை தாங்கிக்கொள்கிறோம். ஏனெனில், உணவு உண்ணும்போது நாம் பெறுகின்ற இன்பத்திற்காக. ஆனால், அந்த இன்பம் சில மணி நேரங்களில் மறைந்து மறுபடியும் பசி எடுக்கிறது. தாகமும் அது போலவே.

ஆக, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மாற்றம் என்ற எதார்த்திற்குள் சிக்கிக்கொள்கிறோம்.

இதைக் கடப்பதே முக்தி நிலை.

இதைக் கடப்பதே நிலை வாழ்வு.

பசியே இராது என்றால், எப்போதும் நிறைவு மட்டுமே இருக்கும்.

இதையே இயேசு முதல் ஏற்பாட்டோடு ஒப்பிட்டு, 'அவர்கள் மன்னா உண்டார்கள், ஆனால், அவர்களுக்கு மீண்டும் பசித்தது' என்று சொல்லி, தான் தருகின்ற உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.

எல்லா நேரமும் ஒரே மாதிரியான உணர்வைப் பெற நம்மால் இயலுமா?

நமக்கு நடக்கும் எதுவும் நம்மைப் பாதிக்காத வண்ணம் நாம் நம்முடைய மனநிலையை ஒரே உணர்வில் தக்கவைத்துக்கொள்ள முடியுமா?

இறையனுபவம் பெற்றவர்களுக்கு முடியும்.

எடுத்துக்காட்டாக, பவுல் சொல்வதுபோல, 'எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும், வளமையிலும் வாழத் தெரியும்' என்பது போல. வறுமை என்று பவுல் வாடுவதுமில்லை. வளமை என்று பவுல் கொண்டாடுவதுமில்லை.

இதுவே பசியற்ற, தாகமற்ற நிலை.

நற்செயல்: என் உடல் மாற்றத்தையும், சிந்தனை மாற்றத்தையும் உற்றுக் கவனிப்பது.

2 comments:

  1. “என்னிடம் வருபவருக்கு பசியோ,தாகமோ இராது” எனும் இயேசுவின் வார்த்தைகளைத் தந்தை தனதாக்கி இன்றைய நாளுக்குப் பொருத்திப்பார்க்கிறார்.நாம் உண்பதும்,குடிப்பதும் மீண்டும் பசியும்,தாகமும் எடுக்க வேண்டுமென்பதற்காக எனும் கூற்று சிறிது வித்தியாசமாகப்பட்டாலும் உண்மை அதுதானே என மனம் கூறுகிறது. அவரது உடலை உண்டு,இரத்தத்தைப்பருகுபவர்கள் மீண்டும் பசி,தாகத்திற்கு உள்ளாக மாட்டார் என விவிலியம் சொல்லிடினும் நடப்பது அதுவல்ல. அதுவே மாற்றத்தை விரும்பும் நம் மனம். இந்த மாற்றத்தைக் கடப்பதே நிலை வாழ்வு எனில் நாம் என்று அதற்கு உரிமை கொண்டாட முடியும்? பதில் கூற ஆளில்லை.ஆனாலும் பவுலின் வார்த்தைகளில் ‘இதுவும் முடியும்’ என்கிறார் தந்தை. வறுமையிலும்,வளமையிலும் வாழத்தெரிந்தால் என்னாலும் பசி,தாகமற்ற நிலையை அடைய முடியுமா? அதை அடைவதற்கான “ இறையனுபவத்தை” பெற இயலுமா? தெரியவில்லை...அதற்காக எப்படி முயற்சி செய்வது என்றும் புரியவில்லை.இறைவனுக்கே வெளிச்சம்...

    கண்டிப்பாக! நாளுக்கு நாள் மாறும் என் உடல் மாற்றத்தையும்,நொடிக்கு நொடி மாறும் என் சிந்தனை மாற்றத்தையும் உற்றுக்கவனிக்க முயல்வேன்...

    ReplyDelete