Friday, September 2, 2016

மன்மதன் அம்பு

'முன்பெல்லாம் மன்மதன்கள் அம்புகளை வைத்துக் கொண்டு
காதலியரைப் பின்தொடர்ந்தனர்.
இன்றோ அரிவாள்களை வைத்துக் கொண்டு பின்தொடர்கிறார்கள்!'

- கொஞ்ச வாரங்களுக்கு முன்பாக வந்த இந்த டுவிட்டர் கீச்சு தான் இப்போ நடைமுறையா போச்சு.
சுவாதி - ராம்குமார் தொடங்கி, பிரான்சினா - கீகன் என தொடர்ந்து கொண்டே போகிறது.

மானம், வீரம், காதல் என்று மூன்று பண்புகளையும் உயிர்போல் நினைத்து வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு ஏன் இந்த சோதனையோ?

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் தேவை என்று நினைத்ததால்தான் தெய்வப்புலவனும் இந்த மூன்றை வாழ்க்கையின் மையமாக வைத்துப் பாடிவிட்டுச் சென்றான்.

காலையில் எழுந்து வேலைக்கு ரயிலில் சென்ற சுவாதியும், ஆலயத்திற்குச் சென்ற பிரான்சினாவும் தங்கள் முடிவு மாலையில் மருத்துவமனை பிரேதக்கூடத்தில் இருக்கும் என்று நினைத்திருப்பார்களா?

காதல் ஓர் ஆண்மகனை அடுத்தவரின் உயிரை எடுக்கும் அளவிற்கு ஆட்டுவிக்குமா?

அகநானூறு பாடல்களில் ஒன்றில்கூட இத்தகு வன்முறை இல்லையே.

தான் காதலித்தவர்களை நோக்கி கத்தியை வீசும் அந்த நொடி அவர்கள் கண்களுக்கு என்ன தெரிந்திருக்கும்? யார் தெரிந்திருப்பார்கள்?

'நான் உன்னைக் காதலித்ததால் நீ என்னைக் காதலிக்க வேண்டும்' என்று ஒருவர் சொல்கிறார் என்றால், உண்மையில் அவர் மற்றவரைக் காதலிக்கவில்லை. மாறாக, அடுத்தவரில் காணும் தன்னை மட்டுமே காதலித்திருக்கின்றார். ஆக, அடுத்தவரில் வெட்டியது அவர் தன்னையே.

'நீ எனக்குதான்!' என மற்றவரின்மேல் உரிமை கொண்டாட முடியுமா?

அப்படி உரிமை கொண்டாடினால் நாம் அடுத்தவரை ஒரு பொருளாக அல்லவா பார்க்கிறோம். ஒருவர் ஒரு வீட்டையோ, ஆட்டையோ, காட்டையோதான் தனக்க உரிமையாக்க முடியுமே தவிர, தன்னைப் போன்ற உயிருள்ள ஒருவரை எப்படி உரிமையாக்க முடியும்?

வன்முறை எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பாய்கின்றது.

மேலிருப்பவர் கொடூரமாக நடக்கின்றார். கீழிருக்கிறவர் பணிந்து போகிறார்.

ஒருவர் வன்முறையில் வாளெடுக்கும்போது மற்றவர் வாழக் கூடாதவர் அல்லது தகுதியில்லாதவர் என முடிவெடுக்கின்றார். அடுத்தவர்களுக்கு உயிரை நம்மால் கொடுக்க முடியாதபோது அதை அவர்களிடமிருந்து எடுக்கும் உரிமை எங்கிருந்து வந்தது?

கொல்லப்பட்டது தனி உயிர் என்றாலும் பாதிப்பு என்னவோ ஒட்டுமொத்த சமூகத்திற்கே!

தமிழ் இனம் எங்கே தடம் மாறியது என்று பார்க்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றோம் நாம்.

நமக்கு அடுத்திருப்பவரை நம்மைப் போல பார்க்கும் பக்குவம்,
பார்வையில் வக்கிரம் அல்லது வன்முறை இல்லாமல் பார்க்கும் பக்குவம்,
ஒவ்வொருவரும் வாழ, நினைத்ததை செய்யும் கட்டின்மை கொண்டவர் என ஏற்றுக் கொள்ளும் பக்குவம்,
சினிமா மற்றும் விளம்பரங்களில் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் முகம்திருப்பும் பக்குவம்
என நாம் பக்குவப்படுதல் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

மன்மதன்கள் இனி அம்புகளையும் எடுக்க வேண்டாம்!

1 comment:

  1. இன்றையத் தேவைக்கேற்ற ஒரு பதிவு. இன்னும் பத்து தினங்களில் தன் கழுத்தில் மணமாலை விழப்போகிறது என்ற கனவில் மிதந்த பெண்ணுக்குக் கிடைத்ததோ மலர் வளையம்.தான் தேர்ந்தெடுத்த படிப்பை முடித்து நினைத்ததை சாதிக்கக்காத்திருந்த பெண்ணுக்குக் கிடைத்ததோ கோரச்சாவு.இன்னும் எத்தனை ஸ்வாதிகளைத் தமிழ்மண் காவு கொடுக்கப்போகிறதோ தெரியவில்லை. இந்தக் கோர விபத்துகளுக்குக் காரணம் காதல் என்ற அபத்தம்.ஆண்களுக்குப் பிடித்த ஒரு ஆடை, கண்ணாடி,கைக்கடிகாரம்,செருப்பு என்ற வரிசையில் பெண்ணையும் பார்க்கத்தொடங்கி விட்டதன் விளைவு.எங்கே நடக்கிறது தப்பு? நம் குடும்பங்களில் தான்.தம் ஆண்மக்களுக்குப் பெண்களைப் போற்றும் பண்பை சொல்லித் தராத பெற்றோர்,சமூகம்...இவைதான் காரணம். தந்தையின் சவுக்கடியான கேள்வி..." அடுத்தவருக்கு உயிரை நம்மால் கொடுக்க முடியாதபோது அதை அவர்களிடமிருந்து எடுக்கும் உரிமை எங்கிருந்து வந்தது?" யாரால் பதில் தர முடியும் இந்தக் கேள்விக்கு?" நாம் நினைத்ததை செய்யும் சுதந்திரம் நமக்கிருப்பது போல் நம் எதிரிலிருப்பவருக்கும் உண்டு" என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மட்டுமே வாழ வேண்டிய குருத்துகளை இந்த வஞ்சகர்களிடமிருந்து காப்பாற்றும். காலத்தின் தேவையறிந்து வந்த பதிவிற்காகத் தந்தைக்குப் பாராட்டு!!!

    ReplyDelete