Wednesday, September 14, 2016

மந்திரச்சொல்

இன்று காலை ஒரு துறவற இல்லத்திற்கு திருப்பலிக்குச் சென்றிருந்தேன்.

ஆங்கிலத் திருப்பலி.

ஆங்கிலத்தை இப்போதுதான் கற்கத் தொடங்கும் 14 முதல் 16 வயது முடிய உள்ள மாணவியர் துறவற சபையில் சேர்ந்து முதல் நிலையில் இருந்தார்கள்.

அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் - எங்கெல்லாம் இப்படி துறவற இல்லத்தில் பயிற்சி பெறும் மாணவியரைப் பார்க்கின்றேனோ - அப்போதெல்லாம் எனக்கு என் தங்கை ஞாபகம் வந்துவிடும்.

திருப்பலி முடிந்து சாப்பிட்டுவிட்டு என் இல்லம் திரும்பும்வரை மனது ரொம்ப கனமாக இருந்தது.

'இயேசு என்றால் யார், திருச்சிலுவை என்றால் என்ன, மோசே என்றால் யார், வெண்கலப்பாம்பு என்றால் என்ன, பவுல் சொல்லும் வெறுமை என்றால் என்ன' என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்ல முயன்றேன். ஆனால் அவர்களைப் பார்த்தவுடன் அவர்களின் கண்களில் இருக்கும் ஒருவித ஏக்கம் என்னைப் பேச விடவில்லை. பாதியிலேயே மறையுரையை நிறுத்திவிட்டேன்.

இப்பெல்லாம் எந்த பொண்ணுங்களைப் பார்த்தாலும் ஒருவித பரிவுதான் வருகிறது. வயதாவதற்கான அறிகுறி என இதை நான் நினைக்கிறேன்!

நான் புனே குருமடத்தில் மாணவராக இருந்த சமயம், என் தந்தை இறந்த இரண்டாவது ஆண்டில், என் தங்கையை ஒரு துறவற சபை அருள்சகோதரி அழைத்துச் சென்றுவிட்டார். 'அண்ணனும் ஃபாதர், நீயும் சிஸ்டர்' என்று யாரும் சொன்னார்களா அல்லது 'அப்பா இறந்துவிட்டார்கள். உன்னை இனி யார் கரையேற்றுவார்கள்!' என்று யாரும் சொன்னார்களா என்று தெரியவில்லை. எனக்குத் தெரியாமலேயே அழைத்துச் சென்றுவிட்டார்கள். அது தெரிய வந்தவுடன் எனக்கு ஒரு பக்கம் கோபம். மறுபக்கம் வருத்தம்.

'இது உனக்கு வேண்டாம்!' என்று சொல்லி என் தங்கையை அழைத்து வரச் சென்றபோது அவர்கள் விட மறுத்தார்கள்.

ஒருவரின் வறுமை மற்றும் இயலாமைதான் துறவற அழைத்தலைத் தேடத் தூண்டுமா?

இன்று காலை நான் பார்த்த அந்த இளவல்கள் ஒருவேளை அம்பானி அல்லது அதானி போன்ற குடும்பத்தில் பிறந்திருந்தால் இறையழைத்தல் என்றால் என்ன என்பதை நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்தானே!

'இறைவன் என்னைத் தொட்டார்!' 'நான் அவரது அழைத்தலை உணர்ந்தேன்!' என்று சொல்லும் சாட்சியங்களை எல்லாம் இன்னும் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை.

'இறைவன் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. தான் தேர்ந்தெடுப்பவர்களை அவர் தகுதியாக்கிக் கொள்கிறார்' என்று சிலர் சொல்கிறார்கள். ஏன் அவர் தகுதியானவர்களையே தேர்ந்துகொள்ளவேண்டியதுதானே!

மேலும், இப்படி பச்சைப் பிள்ளைகளைக் கூட்டி வந்து, முழங்கால் போடு, முக்காடு போடு, சாம்பிராணி போடு, தூபம் போடு என்று சொல்வது பாவம் இல்லையா? யார் வீட்டு குழந்தையோ என்று இருக்கப்போய்தானே இப்படி நடத்துகிறோம். என் வீட்டு தங்கையோ, அண்ணன் மகளோ, தம்பி மகளோ என்றால் நான் இப்படி அவரை அழைத்துக் கொண்டு வந்து இப்படிச் செய்வேனா?

'இயேசுதான் உன்னை அழைக்கிறார்!' என்று சொல்லி ஒரு மறைமாவட்ட ஆயர் தன் மறைமாவட்டத்துக்கென ஆள்களை தேர்ந்து கொள்வதும், அல்லது துறவற சபை பொறுப்பாளர் தேர்ந்து கொள்வதும் உண்மைதானா!

இறையழைத்தல் - குருத்துவம் அல்லது துறவறம் என்ற மேட்டிமையைத் தக்கவைத்துக்கொள்ள யாரோ கண்டுபிடித்த மந்திரச்சொல்.

3 comments:

  1. என் பெரியம்மாவிடம் ( ICM sister ) ஒரு முறை 'சிஸ்டர் ஆகிரலாமான்னு பாக்குறேன்' என்றேன்.. அவரோ தெளிவாக "உனக்கு அழைத்தல் இருந்தால் - அதை நீ தீர்க்கமாய் உணர்ந்தால் வந்தால் போதும் " என்று சொல்லிவிட்டார் .. இப்போ என்னன்னா மதர் ஆகிட்டேன்.. உண்மையிலேயே அழைத்தல் இருக்கிறவர்கள் வந்தால் தான் அவர்களுக்கும் நல்லது . திருச்சபைக்கும் நல்லது . முன்பெல்லாம் நிறைய பிள்ளைகள் இருந்தார்கள் , ராணுவத்துக்கும் , குருமடத்துக்கும் தாராளமாக அனுப்பினார்கள் .. இப்பெல்லாம் அப்படி இல்லை .. எனவே நிறைய பேரை brainwash பண்ணிதான் சபைகள் லே கூட்டிட்டு போறாங்க

    ReplyDelete
  2. He calls father... thats the truth... i am convinced of it.

    ReplyDelete
  3. கோபமும்,சோகமும் கொப்பளிக்கிறது தந்தையின் வரிகளில்.அவரது தங்கைக்கு ஏற்பட்ட அனுபவத்தின் தாக்கம் அவரை அத்தனை பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.சரியான மண்ணில் நடப்படாத ஒரு சிறிய செடியே கருகி வதங்கும் போது இறைவனால் அழைக்கப்படாத ஒருவரால் எத்தனை காலம் தாக்குப்பிடிக்க முடியும் துறவற வாழ்வில்!? என் பள்ளிப்பருவம் அத்தனையையும் கன்னியருடன் கழித்த காரணத்தால் நானும் ஒரு கன்னிகை ஆகவேண்டுமென்ற என் கட்டுக்கடங்கா ஆவலை யாரும் இறையழைத்தலென பாவித்து என்னைத் தவறாக வழிநடத்த வில்லை.இறைவனின் அழைத்தல் வருவது பலவழிகளில்; பலர் மூலமாக.செல்வச்செழிப்பில் மிதந்த புனித பிரான்சிஸ் அசிசியார்,இராணுவ வீர்ரான புனித லொயோலா இஞ்ஞாசியார்,படித்துப்பட்டம் பெற்ற புனித சவேரியார் இவர்களை அழைத்தது போல் வறுமையில் இருப்பவர்களையும் அழைக்கிறார் இறைவன்.அவ்வளவுதான்.எங்கோ ஒன்றிரண்டு பேர்செய்யும் செய்யும் தவறுகளுக்காக 'இறையழைத்தலையே' நாம் எப்படிக் கேள்விக்குறியாக்க முடியும்? இறைவனின் கருணைப்பார்வை பட்டு,அவர் கரம் பிடித்துத் தூக்கி விடுபவர்கள் 'மட்டுமே' துறவற வாழ்வில், இறையழைத்தலில் நிலைத்திருக்க முடியும்.அது தந்தைக்கும்,தந்தையைப்போன்றவர்களுக்கும் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.வாழ்த்துக்கள்! இறைவனின் திருக்கரம் தங்களை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்!!!

    ReplyDelete