Saturday, September 16, 2023

மன்னிப்பின் வழி மன்னிப்பு


இன்றைய இறைமொழி 

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023

பொதுக்காலம் 24-ஆம் ஞாயிறு

சீஞா 27:30-28:7. உரோ 14:7-9. மத் 18:21-35.

மன்னிப்பின் வழி மன்னிப்பு

மத்தேயு நற்செய்தியில் நாம் காணும் குழுமப் பொழிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இன்றைய நற்செய்தி வாசகம். குழுமத்தில் தமக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருரை எத்தனை முறை மன்னிப்பது என்பது பேதுருவின் கேள்வியாக இருக்கிறது. யூத மரபில் ஏழு என்பது நிறைவின் அடையாளம் மட்டுமல்ல தாராள உள்ளத்தின் அடையாளமும் கூட. 

'டோமினோ விளைவு' அல்லது 'தொடர் வினை' அல்லது 'தொடர் விளைவு' என நாம் கேள்விப்பட்டுள்ளோம். நிறைய இடங்களில் விளையாட்டுச் சீட்டு அட்டைகளை வைத்து இந்த விளையாட்டு விளையாடப்படும்.

இப்படிப்பட்ட ஒன்றைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்குக் கற்றுத் தருகின்றார். 'என் சகோதரன் எனக்கு எதிராகப் பாவம் செய்தால் எத்தனை முறைய மன்னிக்க வேண்டும்?' எனக் கேட்கிற பேதுருவுக்குப் பதில் சொல்கின்ற இயேசு, 'ஏழுமுறை அல்லது எழுபது முறை ஏழு முறை' என்கிறார். மேலும், மன்னிக்க மறுத்த பணியாள் ஒருவன் எடுத்துக்காட்டையும் முன்வைக்கின்றார்.

பணியாளன் ஒருவன் தன் அரசனால் தன்னுடைய ஏறக்குயை 510 கோடி ரூபாய்க் கடன் மன்னிக்கப்படுகிறார். ஆனால், அந்தப் பணியாளனால் தன் சக பணியாளின் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க் கடனை மன்னிக்க மறுக்கின்றான். நிறைய வைத்திருந்த அரசனுக்கு மன்னிப்பது எளிதாகவும், ஒன்றுமே இல்லாத பணியாளனுக்கு அவ்வாறு செய்வது கடினமாக இருந்ததோ?

இயேசு சொல்கின்ற டோமினோ விளைவு என்னவென்றால், அரசனிடமிருந்து மன்னிப்பைப் பெற்ற பணியாளன் தன் சகப் பணியாளனை மன்னிக்க வேண்டும். அவன் தனக்குக் கீழ் இருப்பவனை, அவன் இன்னும் தனக்குக் கீழ் ... என்று அடுத்தடுத்து மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாட்டில் ஒரு அட்டை தடைபடும்போது ஒட்டுமொத்த விளையாட்டும் பாதியிலேயே முடிந்துவிடுகிறது. 

ஆக, முதல் பாடம், கடவுளிடமிருந்து அன்றாடம் மன்னிப்பு பெறுகின்ற நாம், அதை நமக்குக் கீழ், நமக்குக் கீழ் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டாவது பாடம், 70 முறை 7 முறை. இந்தச் சொல்லாடலுக்கு நிறைய பொருள் தரப்படுகிறது. தொநூ 4:24ல் லாமேக்கு என்பவர் 70 முறை 7 முறை எனப் பழிதீர்க்கிறார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் பழிதீர்ப்பதற்கு எதிர்ப்பதமாக இயேசு மன்னிப்பை முன்வைக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், என்னைப் பொருத்தவரையில், ஒரு செயல் தொடர் பழக்கமாக மாறும் வரை செய்ய வேண்டும் என்ற பொருளில்தான் இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுவதாக நினைக்கிறேன். இன்றைய உளவியலில் 21 நாள்கள் (அதாவது, மூன்று 7 நாள்கள்) ஒரு செயலைச் செய்யும்போது அது நம் பழக்கமாகிவிடுகிறது என்கிறார்கள். அதாவது, 21 நாள்கள் நான் காலை 5 மணிக்கு எழுந்தால், 22ஆம் நாள் எந்தவொரு எழுப்பியும் இல்லாமல் நான் 5 மணிக்கு எழுந்துவிடுவேன். இயேசுவின் சமகாலத்தில் இதைப்போன்ற ஒரு புரிதல் இருந்திருக்கலாம். ஆக, 70 முறை 7 முறை செய்யும்போது மன்னிப்பு பல் தேய்ப்பது போன்ற ஒரு தொடர் பழக்கமாக மாறிவிடுகிறது. தொடர்பழக்கமாக ஒரு செயல் மாறிவிட்டால் அது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது. இந்தவொரு பயிற்சியைத்தான் இயேசு தருகின்றார். மன்னிப்பதை நம் பழக்கமாக்கிக் கொள்வது.

மூன்றாவதாக, மன்னிப்பது மன்னிப்பவருக்கு நல்லது. ஏனெனில், மன்னிக்க மறுக்கும் ஒருவர் தன் நிகழ்காலத்தில் வாழாமல் இறந்த காலத்தில் வாழ்கிறார். எந்நேரமும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். இறந்த காலம் என்பது நம் மனத்தின் ஒரு அழுகிய பகுதி. அதை நாம் அப்படியே வைத்துக்கொண்டிருக்கும்போது அது துர்நாற்றத்தைத் தருவதோடு, நல்ல பகுதிகளையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது.

மேற்காணும், இரண்டு காரணங்களுக்காக இல்லை என்றாலும், இறுதியான மூன்றாவது காரணத்திற்காக மன்னிக்கத் தொடங்கினால் மனது நலமாகும்!

இயேசு வழங்கும் உவமையில் அரசர் தன் பணியாளரை மன்னிக்கின்றார். ஆனால், அந்தப் பணியாள் தன் சகபணியாளை மன்னிக்க மறுக்கின்றார். தான் மன்னிக்கப்பட்டதை மறக்கின்றார். அவருடைய மன்னிக்காத செயல் அவருக்கு எதிராகத் திரும்புகிறது.

ஏன் அந்தப் பணியாளரால் மன்னிக்க இயலவில்லை? இரக்கம் என்பதை மறந்து நீதி என்ற தளத்தில் செயலாற்றினான் அவன்.

எனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருக்கு நான் தீங்கிழைப்பது நீதியே. ஆனால், இரக்கம் என்பது நீதியைத் தாண்டுகிறது. அரசரைப் போல இருக்க வாய்ப்புக் கிடைத்தும், அந்தப் பணியாளன் ஒரு பணியாளனாகவே இருக்க முற்பட்டான். அரச நிலைக்கு உயர்ந்தால், நம் எண்ணங்கள் உயர்ந்தால் மன்னிப்பு நம் இரண்டாம் இயல்பாகிவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'வெகுளி, சினம் ஆகியவை வெறுப்புக்குரியவை' என மொழிகிற ஆசிரியர், நாம் மன்னிப்பதற்கும் இரக்கம் காட்டுவதற்கும் அன்பு செய்வதற்கும் மூன்று காரணங்களைத் தருகின்றார்: (அ) பழிவாங்குவோர் ஆண்டவரின் பழியைப் பெறுவர். மன்னிப்போர் ஆண்டவரின் மன்னிப்பைப் பெறுவர். (ஆ) மன்னிப்பவருடைய மன்றாட்டுகள் மட்டுமே கேட்கப்படுகின்றன. (இ) நம் வாழ்வின் முடிவை நாம் மனத்தில் கொண்டவர்களாக வாழ்தல்.

இரண்டாம், வாசகத்தில், நாம் இருந்தாலும் இறந்தாலும் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம், இறக்கிறோம் என்கிறார் பவுல். ஆண்டவருக்கென்றே வாழ்கிற நாம் அவரைப் போல வாழ்வதற்கான ஒரு வழியே இரக்கம் காட்டுதல்.

மன்னிக்க இயலாதவர்களுக்கு மறுக்கப்படுகிற ஐந்து விடயங்கள் பற்றிப் பேசுகிறது விவிலியம்:

(அ) மன்னிக்காதவர்களின் இறைவேண்டல் கேட்கப்படுவதில்லை (காண். மத் 11:24).

(ஆ) மன்னிக்காதவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை (காண். சீஞா 28:1).

(இ) மன்னிக்காதவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவதில்லை (காண். யாக் 2:13).

(ஈ) மன்னிக்காதவர்களின் நோய்கள் குணமாவதில்லை (காண். சீஞா 28:3, நீமொ 17:22).

(உ) மன்னிக்காதவர்களின் பலிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (காண். மத் 5:23-24).

மன்னிக்கும் வழக்கத்தை உருவாக்குவது எப்படி?

(அ) நம் பகைவர்களுக்காக, நமக்கு எதிராகக் குற்றம் செய்வோக்காக இறைவேண்டல் செய்வது (காண். மத் 5:44).

(ஆ) அவர்களைப் பற்றிய நல்ல விடயங்களைப் பார்ப்பது, பகிர்வது.

(இ) அவர்களுக்கு நன்மை செய்வது (காண். உரோ 12:17-21).



No comments:

Post a Comment