Friday, November 24, 2017

போதகரே, நன்றாகச் சொன்னீர்

நாளைய (25 நம்பவர் 2017) நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் இயேசுவைக் கேள்வி கேட்கும் நிகழ்வை (லூக்கா 20:27-40). நமக்கு பரிச்சயமான இறைவாக்கு பகுதிதான். ஒரு பெண்ணை ஏழுபேர் மணந்த கதை. சதுசேயர்கள் உயிர்ப்பு உண்டு என்பதை நம்பாதவர்கள். ரொம்ப பிராக்டிகலான ஆள்கள். சதுசேயர்கள்தாம் அந்நாள்களில் அரசவையை அலங்கரித்தவர்கள். அரசவையில் இருப்பவர்களுக்குத்தான் இங்கேயே சொர்க்கம் கிடைத்துவிடுகிறதே. அவர்கள் இறந்தபின் சொர்க்கம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. ஏழைகளுக்கும், இல்லாதவர்களுக்கும் உருவாக்கப்பட்டதுதான் மறுவாழ்வு. அதாவது இந்த உலகில் கிடைக்காதது எல்லாம் மறுவுலகில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நம் வாழ்க்கையை நகர்த்திவிடுவதற்காக.

நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வரியைச் சிந்திப்போம்:

'போதகரே, நன்றாகச் சொன்னீர்'

இந்த மூன்று வார்த்தைகள் நமக்குச் சொல்லும் பாடங்கள் இரண்டு:

ஒன்று, யாரிடம் எப்படி பேச வேண்டுமோ அப்படி பேச வேண்டும். சதுசேயர்கள் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே நம்பக்கூடியவர்கள். ஆக, அவர்களிடம் பேசுகின்ற இயேசு விடுதலைப் பயண நூல் 3ஆம் பிரிவை மேற்கோள்காட்டி வாதாடுகின்றார். யாரிடம் எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேச வேண்டும். எல்.கே.ஜி குழந்தைகளுக்கு 'ஐந்து மாடுகளும் ஒரு சிங்கமும்' என்ற கதைதான் புரியும். அதை விட்டு விட்டு அவர்களிடம் 'ஆஸ்கர் ஒயில்ட்' பேசினால் குழந்தைகளுக்கும் புரியாது, நமக்கும் போர் அடிக்கும்.

இரண்டு, பாஸிட்டிவ் ஸ்ட்ரோக் - நேர்முகமான பாராட்டு. மறைநூல் அறிஞர்களுக்கு இயேசுவைப் பிடிக்காது என்றாலும், 'நன்றாகச் சொன்னீர்' என்று மனதார பாராட்டுகின்றனர். வாய்விட்டு பாராட்டுவது நல்ல குணம். அப்படி பாராட்டும்போது நம்மை அறியாமல் நம் மனமும் நேர்முக ஆற்றலால் நிரம்புகிறது. இன்றைக்கு யார் நல்லதைச் சொன்னாலும், செய்தாலும் கொஞ்சம் வாய்விட்டு பாராட்டலாம்.


1 comment:

  1. தந்தையின் வார்த்தைகள்...."அரசவையில் இருப்பவர்களுக்கு இங்கேயே சொர்க்கம் கிடைத்துவிடுவதால், இறந்தபின் அவர்களுக்கு சொர்க்கம் கிடைத்தாலும்,கிடைக்காவிட்டாலும் ஒன்றுதான்.ஏழைகளுக்கும்,இல்லாதவர்களுக்கும் உண்டாக்கப்பட்டதுதான் மறுவாழ்வு.அதாவது இந்த உலகில் கிடைக்காதது மறுவுலகில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்காக"கொஞ்சம் நெருடலாகத் தெரிந்திடினும் வாழ்க்கையின் நிதர்சனம் அதுதான் என்று தோன்றுகிறது."போதகரே, நன்றாகச் சொன்னீர்." இயேசுவைப் பிடிக்காத மறைநூல் அறிஞர்களே அவரை மனதாரப் பாராட்டும்போது இத்தனை அழகானதொரு பதிவைத்தந்த தந்தையை எத்துணை பாராட்டினாலும் தகும்.தந்தைக்கு என் அடிமனத்தின் ஆழத்திலிருந்து பாராட்டுக்கள். எத்துணை விரைவில் தங்களின் வார்த்தையைச் செயலாக்கிவிட்டேன் பார்த்தீர்களா? மீண்டும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete