Saturday, November 4, 2017

நம்பிக்கையின்மை

வலைப்பதிவு எழுதி ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது.

நிறைய சோம்பல். நிறைய சாக்குப் போக்குகள். ஆதலால் நிறைய இடைவெளி.

நிற்க.

கடந்த ஒரு வாரமாக கடவுள் நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே வருகின்றது. கடவுள் நம்பிக்கை குறைகிறது என்று சொல்வதைவிட, கிறிஸ்தவ கடவுள் நம்பிக்கை குறைகிறது என்றுதான் சொல்வேன். இந்த நம்பிக்கை குறைபாடு எனக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் தானாகவே வந்துவிடுகிறது.

அனைத்து புனிதர்கள், அனைத்து ஆன்மாக்கள், இறப்பு, உயிர்ப்பு, நிலைவாழ்வு, மறுவாழ்வு என நாம் நம்பிக்கை அறிக்கையில் சொல்கின்ற பல சொல்லாடல்கள் எனக்கு கேள்விக்குறியாகவே தெரிகின்றன. விளைவு, இந்த வாரம் முழுவதும் நான் சந்திக்கும் அனைத்து அருள்பணியாளர்களோடும் கருத்துமோதலாகவே இருக்கின்றது.

இந்த என் போரட்டத்தையே இன்று மாலை என் செபமாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தேன்.

நம்பிக்கை போராட்டம் வரும்போதெல்லாம் நான் எடுத்து வாசிக்கும் நற்செய்திப் பகுதி மாற்கு 9:14-29. தன் சீடர்களால் விரட்டமுடியாத பேய் ஒன்றை சிறுவன் ஒருவனிடமிருந்து விரட்டுகின்றார் இயேசு. இங்கே இயேசுவுக்கும், சிறுவனின் அப்பாவுக்கும் இடையே நடக்கும் உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்தது:

அதற்கு அவர், '...உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார்.

இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்றார்.

உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார்.

தன் நம்பிக்கையின்மை குணமாகவேண்டும் என கதறுகின்றார் தந்தை.

ஆக, நோய் குணமாவதற்கு முன் நம்பிக்கையின்மை குணமாகவேண்டும். மேலும், நம்பிக்கையின்மையை குணமாக்குபவர் கடவுளே. அல்லது நம்பிக்கையை கொடையாகக் கொடுப்பவரே கடவுள்.

'எனக்கு உம்மேல் நம்பிக்கையைத் தா இறைவா!' - இப்படித்தான் இன்று நான் செபித்தேன்.

இதைத் தொடர்ந்து நான் வாசித்த விவிலியப் பகுதி சீராக்கின் ஞானம் 2:1-6. இந்த இறைவாக்குப் பகுதியில் அருள்பணி நிலைக்கு முன்வரும் ஒரு சிறுவனுக்கு அறிவுறுத்துகின்றார் ஆசிரியர். இங்கே அவர் தரும் பத்துக்கட்டளைகள் அருள்பணி வாழ்வுக்கு மிக முக்கியமானவை:

முன்னுரை: 'குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன்வந்தால்...'

1. சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள்.
2. உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு.
3. உறுதியாக இரு.
4. துன்பவேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே.
5. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள்.
6. என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்.
7. இழிவு வரும்போது பொறுமையாய் இரு.
8. ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்.
9. உன் வழிகளைச் சீர்படுத்து.
10. அவரிடம் நம்பிக்கை கொள்.

இன்று எனக்கு வரும் சோதனை 'நம்பிக்கையின்மை.'

இதற்கு அவர் தரும் பதில், 'அவரிடம் நம்பிக்கை கொள்!'

1 comment:

  1. அதிக கால இடைவெளிக்குப்பின் வந்த தந்தையின் பதிவு என்னைக் கொஞ்சம் கலங்கடித்தது உண்மை.ஆனால் அதற்கு மேல் தங்களைப்பாராட்டவும் விஷயங்கள் இருக்கின்றன.தங்களைத்தாங்களே ஆய்வு செய்வது மட்டுமின்றி அந்த ஆய்வின் பலன் என்னவாயிருப்பினும் அதை மேடை போட்டு உரக்கச்சொல்வது நான் தங்களிடம் கண்ட எதார்த்தம்.அதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.ஒருவர் தனக்கு நம்பிக்கைக் குறைவு வருகிறது என்று உணருவதே அவர் நம்பிக்கை இன்னும் ஸ்திரமாக வேரூன்றுவதற்கு முதற்படி என்றே நினைக்கிறேன்.கலங்கிய குட்டையில் தான் மீன்பிடிக்க முடியும் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதானே! அந்தச்சிறுவனின் தந்தையோடு சேர்ந்து " எனக்கு உம்மேல் நம்பிக்கையைத்தா இறைவா! " என தாங்கள் கதறுவது கண்டிப்பாக இறைவனின் செவிகளை எட்டும்.தங்களின் இன்றையக் கலக்கத்திற்கு சீராக்கின் பத்துக்கட்டளைகளும், " அவரிடம் நம்பிக்கை கொள்!" எனத்தங்களின் செவிகளை வந்தடையும் அசரீரியும் தங்களைத் தட்டி எழுப்பட்டும்; கலக்கத்தைப்போக்கட்டும்.கலக்கம் வேண்டாம் தந்தையே! தங்களைக் குறித்து தாங்களே பெருமைப்படவும்,இறைவனுக்கு நன்றி சொல்லவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.தங்களை இந்நாள் வரை வழி நடத்திய இறைவனின்
    கருணையும்,எனது செபமும் என்றென்றும் தங்களுக்குத் துணை நிற்கும்!வழிகாட்டும்!!!

    ReplyDelete