Sunday, May 7, 2017

நாம் - அவர்கள்

'நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?'

... ... ...

'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே!'

'நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.'

'நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?'

(காண். திப 11:1-18)

திருத்தூதர்கள்மேல் தூய ஆவி பொழியப்பட்டவுடன் அவர்கள் ஒரு மேஜிக் போல மாற்றம் பெற்றாலும், அவர்கள் நடுவிலும், தொடக்க கிறிஸ்தவர்கள் நடுவிலும் நிறைய வாழ்வியல் சிக்கல்களும், நம்பிக்கைப் போராட்டங்களும், அறநெறி தர்க்கங்களும் இருந்தன. குறிப்பாக, விருத்தசேதனம் பெற்றவர் - பெறாதவர், தூய்மை - தீட்டு என்று வேறுபாடுகள் இருந்ததை நாளைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

கொர்னேலியு வீட்டில் சென்று உணவருந்துகிறார் பேதுரு. கொர்னேலியு ஒரு புறவினத்தவர். அதாவது, விருத்தசேதனம் செய்யாதவர். இத்தகையோரின் இல்லங்களைச் சந்திப்பதே தீட்டு எனக் கருதப்பட, பேதுருவோ அங்கே சென்று உணவும் அருந்திவிடுகின்றார். இப்படி 'தீட்டுப்பட்ட' பேதுரு தன் திருச்சபைக்குத் திரும்பியபோது, 'நீர் ஏன் இப்படிச் செய்தீர்?' என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது.

பேதுருவின் பதில் மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. கடவுள் தூய்மை எனக் கருதுவதை நான் எப்படி தீட்டு எனக் கருதுவது?

ஆக, தூய்மை - தீட்டை நிர்ணயிப்பவர் நீங்களோ, நானோ அல்ல. மாறாக, கடவுளே. அவரின் பார்வையில் எல்லாம் தூய்மையாய் இருக்க, நான் அல்லது நீங்கள் எப்படி தூய்மை - தீட்டு பாகுபாட்டை உருவாக்க முடியும்?

ஆ. அவர்களும் கொடையைப் பெற்றார்கள்

ஆக, பேதுரு மற்றும் அவருடைய திருச்சபையில் இருக்கும் தூய ஆவியும், புறவினத்தாரின் மேல் பொழியப்பட்ட தூய ஆவியும் ஒன்றுதான். நம்மை இயக்கும் ஆவியானவர் வேறுபாடு பார்ப்பதில்லை. வேறுபாடுகள் வெளியில்தாம் இருக்கின்றனவே தவிர நம் உள் இல்லை. ஆக, நம் உள் இருந்து நம்மை இணைக்கும் ஆவியானவர்தான் முக்கியமே தவிர வெளிப்புற வித்தியாசங்கள் அல்ல.

இ. கடவுளைத் தடுக்க நான் யார்?

கடவுளே நீங்க இப்படிச் செய்யுங்க, அப்படிச் செய்யுங்க என்று நாம் கடவுளுக்கு கட்டு போட முடியாது. ஆக, தான் விரும்பியதை தான் விரும்பியவருக்குச் செய்ய கடவுளுக்கு உரிமை உண்டு. 'அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிப்பவர் அவரே!'

இறுதியாக,

இன்று நம்மிடையே 'தூய்மை - தீட்டு' என்ற பாகுபாடு குறைந்துகொண்டே வந்தாலும், மற்றொரு பக்கம் 'நாம் - அவர்கள்' என்ற பாகுபாடு வளர்ந்துகொண்டுதான் வருகிறது. இதையும் குறைத்துக்கொள்ள அழைக்கிறது நாளைய முதல் வாசகம்.


1 comment:

  1. தமது செயலைக் கடிந்து கொண்டவர்களுக்குத் தமது செயலில் உள்ள நியாயத்தை விளக்க மூன்று காரணங்களைப் பேதுரு முன் வைத்தாலும் இவற்றில் " ஆமாம்; பேதுருவின் செயல் சரியே" என நம்மை அருதியிட்டு ஒத்துக்கொள்ள வைப்பது அந்த இரண்டாவது காரணமே!ஆமாம்...பேதுருவின் திருச்சபையில் இருக்கும் தூய ஆவியும், புறவினத்தார் மேல் பொழியப்பட்ட தூய ஆவியும் ஒன்று எனில்; நம்மை இயக்கும் தூய ஆவியானவர் வேறுபாடு பார்ப்பதில்லை எனில் எங்கிருந்து வர இயலும் பேதுருவின் செயலில் தீட்டு? உள்ளிருந்து இயக்கும் தூய ஆவிதான் முக்கியமே தவிர, வெளிப்புற அடையாளங்கள் அல்ல....பேதுருவின் செயலை நியாயப்படுத்த இந்த ஒரு காரணமே போதும்.தந்தையின் அந்த இறுதி வரிகள் ஏதோ ஒருவகையில் நம்மிடையே பாகுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையும்; இதைக்களைவதற்கு " நாம் அனைவருமே ஒரே விண்ணகத் தந்தையின் பிள்ளைகள் தான்" என்ற எண்ணம் அவசியம் என்பதையும் சொல்லாமல் சொல்கின்றன.என்று களைவது? எப்படிக் களைவது? இந்த வேற்றுமைகளின் ஆணி வேரை? யோசிக்க வைத்த தந்தைக்கு என் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete