Friday, May 26, 2017

அந்த மூன்று சொற்கள்

'பவுல் சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்'

'பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு விளக்கம் கொடுத்தனர்'

'சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தினர்'

'உறுதிப்படுத்துதல்,' 'விளக்கம் கொடுத்தல்,' 'ஊக்கப்படுத்துதல்' - இந்த மூன்று வினைச்சொற்களும் நாளைய முதல்வாசகத்தில் என்னைக் கவர்கின்றனர்.

அதாவது, தொடக்கத் திருச்சபையில் எல்லாரும் நற்செய்தி அறிவிப்பு பணி செய்கின்றனர். 'நான் செய்ய வேண்டும்,' 'நீ செய்யக் கூடாது,' 'உன் வரையறை இது,' 'உன் வரையறை அது,' 'என்னிடம் நீ இதைக் கேட்க வேண்டும்,' 'உன்னிடம் நான் இதைச் சொல்ல வேண்டும்' என்ற நெறிமுறைகள் கிடையாத கட்டின்மை கொண்ட திருச்சபையாக இருந்தது.

மேலும், அவரவர்கள் தங்களுக்கான நிலையில் தங்கள் பணியை முழுமையாகச் செய்கின்றனர்:

1. உறுதிப்படுத்தினார்

ஒரு செடி முளைத்து வரும்போது அதை ஒரு நிலையான குச்சி அல்லது கம்பு அல்லது கம்பியோடு சேர்த்துக் கட்டியிருப்பார்கள். ஏன்? செடி நேராக வளர வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. மாறாக, வலுவற்ற தண்டைக் கொண்டிருக்கின்ற செடிக்கு வலுவான துணை வேண்டும் என்பதற்காகத்தான். காற்றில் அலைமோதும் செடி உடைந்துவிடவும், காயம்பட்டுவிடவும் முடியும். ஆனால், கட்டப்பட்டு உறுதியூட்டப்பட்ட செடி நிலைத்துநிற்கும். நம்பிக்கை வாழ்வும் அப்படித்தான். நம்பிக்கை வேகமாக வந்துவிடும். ஆனால் அது நிலைத்து நிற்பதுதான் கடினம். நிலைத்து நிற்க மற்றவர்கள் துணைநிற்க வேண்டும். அதைத்தான் தூய பவுல் செய்கின்றார். தன் திருச்சபை நம்பிக்கையில் வளர்வதற்கு தான் ஊன்றுகோலாக நிற்கின்றார்.

2. விளக்கம் கொடுத்தனர்

அப்பொல்லொ சிறந்த பேச்சாளர். சிறந்த நம்பிக்கையாளர். ஆனாலும், திருமுழுக்கு பற்றிய போதனையில் யோவானை மட்டுமே அறிந்தவர். மொத்தத்தில் தூய ஆவியை அறியாதவர். இப்படி அறியாத ஒருவரை பிரிஸ்கில்லாவும், அக்கில்லாவும் கேலி பேசி ஒதுக்கிவிடவில்லை. மாறாக, கூப்பிட்டு விளக்கம் கொடுக்கின்றனர். தாங்கள் பெற்ற அறிவை பிறரோடு பகிர்ந்து கொள்கின்றனர். அப்பொல்லா அணையப்போகும் திரி போல இருக்கிறார். இவர்கள் தங்கள் ஒளியை அவரோடு பகிர்ந்துகொள்கின்றனர்.

3. ஊக்கப்படுத்தினர்

நற்செய்திப் பணியாளர் அல்லது அருள்பணியாளர் அல்லது துறவி தன் பணியில் சந்திக்கின்ற முதல் சவால் மனச்சோர்வு. இந்தச் சவால் வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக, உள்ளிருந்து வரக்கூடியது. தன் பணி உடனடி கனியைத் தரவில்லை அல்லது தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கின்ற பணியாளர் மனச்சோர்வு அடைந்துவிடுவார். அப்படி மனச்சோர்வு அடைபவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். ஊக்கம் என்பது தைரியத்தில் ஒருவரை நிற்கச் செய்வது.

நம் நற்செய்திப் பணியில் இல்லாவிட்டாலும், நம் உறவுநிலைகளில்

'உறுதிப்படுத்துதல்,' 'விளக்கம் கொடுத்தல்,' 'ஊக்கப்படுத்துதல்' இருத்தல் நலமே!

1 comment:

  1. "அந்த மூன்று சொற்கள்"... இன்றையக் காலகட்டத்திற்கேற்ற அழகானதொரு பதிவு.நானும் கூடத்தான் இன்றைய வாசகத்தை வாசித்தேன்.என் சிறுமதிக்கு எட்டாத பல விஷயங்களைத்தந்தை கோடுகாட்டியிருப்பது அழகான விஷயம்.பவுல் " ஊக்கப்படுத்தினார்" எனும் விஷயத்தை வேகமாக வந்துவிடும் நம்பிக்கை வாழ்வு நிலைபெற நமக்குத்தேவையான ஊக்கத்தை, முளைத்து வரும் செடிக்கு முட்டுக்கொடுக்கும் கம்பியோடு ஒப்பிட்டுருப்பது அழகு.அதேபோல் " விளக்கம் கொடுத்தனர்" என்பதை பரிசுத்த ஆவியைப்பெற்றுக்கொள்ளாததால் அணையும் திரியாய் நின்ற அப்பொல்லொவை அணைத்து நின்று தங்களுடனிருந்த ஒளியை அவரோடு பகிர்ந்து கொண்ட பிரிஸ்கில்லாவையும்,அக்கில்லாவையும் பற்றிய விளக்கம் அதைவிட அழகு." ஊக்கப்படுத்தினர்" இந்த விஷயம் யாருக்குமே தேவையெனினும் ஒரு அருட்பணியாளரின் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் நங்கூரமே இந்த ஊக்கம்தான்.ஒரு அருட்பணியாளரிடம் உள்ள ஊக்கம்தான் அவரைச்சார்ந்து நிற்கும் பங்கு மக்களையும் தொற்றிக்கொள்ள வேண்டும்.நம் விசுவாச வாழ்விற்குத் தேவையான 'உறுதிப்படுத்துதல்','விளக்கம் கொடுத்தல்','ஊக்கப்படுத்துதல்' போன்ற காலத்தின் தேவைகளை நற்செய்திப்பணிகளிலும்,நம் உறவு நிலைகளிலும் வளர்த்துக்கொள்ள இறைவன் அருள் வேண்டுவோம். எம்மிடம் அணைந்துகொண்டிருக்கும் விசுவாசத்திரியை அவ்வப்போது தன் வலுவான வார்த்தைகளால் கொழுந்துவிட்டெரியச்செய்யும் தந்தையை இறைவன் ஆசீர்வதித்துக் காப்பாராக!!!

    ReplyDelete